தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
13. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
காலையில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த ராஜீவின் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. ஏதோ என்ன... கீதா முக்கியமாக ஏதோ பேச வேண்டும் என்று சொன்னது தான் இப்போது உறுதிக் கொண்டிருந்தது... அவனுக்க்காக காலையில் காஃபி கொண்டு வந்து கொடுத்தப் போது, கீதா முகத்தில் கோபத்தின் ரேகை எதுவும் இல்லை. இருந்தாலும் அவள் என்ன சொல்ல விரும்பினாள் என்று கேட்டு இருந்திருக்கலாமோ என்று ராஜீவிற்கு இப்போது தோன்றியது. இதே சிந்தனையில் இருந்தால் அலுவலகம் சென்றாலும் முழு மனதுடன் பணியில் ஈடு பட முடியாது என்பதை உணர்ந்தவன், தன் மொபைலை எடுத்து தன் காரியதரிசியுடன் பேசினான். அன்று ஒன்பது மணிக்கு நடப்பதாக இருந்த மீட்டிங் அவனுக்கு அவ்வளவு முக்கியமானது அல்ல. எனவே அதில் தான் கலந்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டு மனைவியை தேடி சென்றான்.
ராஜீவ் வந்தப் போது காலை உணவு வேலையை முடித்து விட்டு கீதா அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தாள். அவளருகில் சென்று அமர்ந்தவன்,
"கீதா, சாரி...." என்றான்
சுவாரசியமாக எதையோ படித்துக் கொண்டிருந்த கீதா, கணவனின் குரல் கேட்ட பின் தான் அவனை கவனித்தாள்.
"சாரியா??? ஏன், என்ன ஆச்சு?" என்றாள் குழப்பத்துடன்.
"இல்லை, நீ என்கிட்டே எதுவோ முக்கியமா பேசனும்னு சொன்னியே.... சாரி, நான் அதைப் பத்தி கேட்கவே இல்லை... இன்னைக்கு நான் லேட்டா தான் ஆஃபீஸ் போக போறேன்... இப்போ சொல் என்ன விஷயம்..."
கீதா ஒரு வினாடி யோசித்தாள். இங்கே அமர்ந்து இந்த விஷயம் பேசுவது சரி இல்லை என்று தோன்றியது. எனவே,
"தேங்க்ஸ் ராஜீவ், இங்கே பேச வேண்டாம்... மாடியிலே நம்ம ரூமில பேசலாம்... நீங்க போங்க நான் கலா கிட்ட சொல்லிட்டு வரேன்..." என்றாள்.