தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
15. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அர்ச்சனாவின் மனதில் தன்னால் எழுந்துள்ள சஞ்சலத்தை அறியாது, வழக்கம் போல், தனக்குப் பிடித்த பாடலை முனுமுனுத்தப் படி உடை மாற்றி, சிறிதாக அலங்காரம் செய்து கொண்டு கிளம்பினாள் இந்து.
அர்ச்சனாவிடம் சொல்லி விட்டு கிளம்ப அவள் வந்தப் போது, அர்ச்சனா தொலைப்பேசியில் பேசி கொண்டிருந்தாள். அம்மாவின் பேச்சை வைத்தே அவர் பேசுவது தன் அத்தையுடன் என்பது இந்துவிற்குப் புரிந்தது. அம்மாவைப் பார்த்து கேலி புன்னகை ஒன்றை தந்து விட்டு, கிளம்புவதாக சைகை காட்டினாள் இந்து. சரி என அர்ச்சனா தலை அசைக்கும் போது, வாசலில் உள்ள அழைப்பு மணி சிணுங்கியது. எட்டிப் பார்த்த கனகாவிடம் தான் பார்ப்பதாக சொல்லி விட்டு, சென்று கதவை திறந்தாள் இந்து.
அங்கே தன் மந்தகாசப் புன்னகையோடு நின்றிருந்தான் சஞ்சீவ். அவனை அங்கே பார்த்து ஆச்சர்யப் பட்டப் போதும், திடீரென சூரிய ஒளி பிரகாசமாகி விட்டதாகவும் தோன்றியது இந்துவிற்கு.
"வாங்க உள்ளே வாங்க..." என அவனை மகிழ்ச்சியுடனே வரவேற்றாள்!
"தேங்க்ஸ்... ஆன்ட்டியைப் பார்க்க வந்தேன்... நீங்க கிளம்புற நேரத்தில் தொந்தரவு செய்றேனோ?" என்றான் சஞ்சீவ்.
உண்மையில், இந்து ஆஃபீஸ் கிளம்பிச் செல்லும் முன் வர வேண்டும் என்று எண்ணி தான் சஞ்சீவ் வீட்டில் இருந்து சீக்கிரமே கிளம்பினான். ஆனால் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால், இந்துவைப் பார்க்க முடியாது போய் விடுமோ என்ற சந்தேகம் அவனுக்கு எழுந்திருந்தது. இப்போது அவளை நேரில் பார்த்ததும், காலையில் தியாகம் செய்த தூக்கம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த இறுக்கம் எல்லாம் ஈடு செய்ய பட்டு விட்டதாக சஞ்சீவிற்கு தோன்றியது.
"இல்லை... அப்படி எல்லாம் எதுவும் இல்லை... அம்மா ஃபோன் பேசிட்டு இருக்காங்க... வருவாங்க... உக்காருங்க..." என்றாள் இந்து.