திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் அபினவ்.
தென்றல்வாணனும் அஹல்யாவை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
“எப்படி இருக்கீங்க டீச்சர்?”
“உங்களுக்கு தெரியாததா சார்?” என்றாள் அஹல்யா!
“ஹ்ம்ம்!” என்ற தென்றல்வாணனின் முகத்தில் இருந்த யோசனை ரேகைகள் இன்னும் அதிகமானது.
அங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்காது, “சரிங்க சார், வரேன்!” என்றாள் அஹல்யா.
“ஓகே டீச்சர்!” என்றான் தேன்!
அவர்கள் இருவரின் பேச்சை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த அபினவ் பக்கம் வினாடிக்கும் குறைவான பார்வை ஒன்றை பார்த்து விட்டு கேட்டை மூடி உள்ளே சென்று மறைந்தாள் அஹல்யா.
“அபினவ், இங்கே என்ன செய்துட்டு இருக்க?” தென்றல்வாணன் மீண்டும் அபிநவிடம் அதே கேள்வியைக் கேட்டான்.
“சும்மா பையன் கூட விளையாடிட்டு இருந்தேன் சார். ரோட்டுல அத்தனை பசங்க விளையாடுறாங்க. ஆனால், அருண் வந்தா சேர்த்துக்க மாட்டேங்குறாங்க. பாவமா இருந்துச்சு.”
தென்றல்வாணனின் முகத்தில் வருத்தத்தின் சாயல் வந்துப் போனது.
“உங்களுக்கு அவங்களை தெரியுமா சார்? ஏன் எல்லோரும் அவங்க கிட்ட இப்படி இருக்காங்க?” அபினவ் இன்ஸ்பெக்டரிடமே கேட்டான்.