தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
19. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஜூஸ் காலியானதும் நால்வரும் ஒன்றாக கிளம்பி பார்க்கிங் இடத்திற்கு சென்றார்கள். அவர்களின் கண்ணில் முதலில் பட்டது வீணாவின் கார் தான். வாங்கி வந்த பொருட்களை பின் சீட்டில் இந்துவும், வீணாவும் வைத்தார்கள். சஞ்சீவும், ரஞ்சனியும் அவர்களுக்கு உதவி செய்தார்கள். அனைத்து கவர்களையும் அடுக்கி முடித்ததும், சஞ்சீவ் மற்றும் ரஞ்சனியிடம் விடைப் பெற்று வீணா காரில் ஏறி அமர்ந்தாள். ரஞ்சனியும் இவர்களிடம் விடைப் பெற்று கையில் இருந்த பொருட்களை தன் வண்டியில் வைப்பதாக சொல்லி விட்டு சென்றாள். வீணாவை தொடர்ந்து காரில் ஏறப் போன இந்து, நின்று, திரும்பி,
"சஞ்சீவ், உங்க கார் எங்கே?" என சஞ்சீவிடம் கேட்டாள்.
"நான் இன்னைக்கு பைக்கில தான் வந்தேன்..." என்று சஞ்சீவ் சொல்லவும், அவனை கேள்வியுடன் பார்த்தாள் இந்து. அவளின் கேள்வியை புரிந்துக் கொண்ட சஞ்சீவ்,
"எங்க வீட்டுல, அண்ணா ஒரு கார் எடுத்துட்டுப் போவான்... மீதி இருக்க ஒரே காரை நான் எடுத்துட்டுப் போனால், அம்மாக்கும் அண்ணிக்கும் கஷ்டமா இருக்கும் தானே... அதனால நான் இப்போ எல்லாம் பைக் தான்... எனக்குன்னு கார் ஒன்னு வாங்கனும்... எந்த கலர் வாங்குறதுன்னு தான் யோசிக்கிறேன்..." என்று இழுத்தான்...
"ரெட் கலர் வாங்குங்க..." என்றாள் இவர்களின் பேச்சை கவனியாததுப் போல் கேட்டுக் கொண்டிருந்த வீணா.
சஞ்சீவ், இந்து இருவருமே வீணா பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்!
"ரெட் கலர் ரொம்ப மங்களகரமா இருக்கும்... அப்புறம்... அது இந்து மாதிரி நிறைய பேருக்கு பிடிச்ச கலரும் கூட..." என்று எக்ஸ்ட்ரா விளக்கம் கொடுத்தாள் வீணா!
இந்து வீணாவைப் பார்த்து முறைக்க, சஞ்சீவ் புன்னகை மின்ன,
"வீணா, உங்களை மாதிரி ஹெல்ப் பண்ண ஒருத்தர் இருந்தால் போதும்..." என்றான்.