“ஓகே சக்தி, என் குட்டி மாமியார் கத்துவாங்க. நான் கிளம்புறேன்,” என சொல்லி எழுந்துக் கொண்டாள் சத்யா.
“குட்டி மாமியாரா?”
“வேற யாரு, என் பொண்ணு தான். நீங்க, இவரு எல்லாம் அவளுக்கு முன்னாடி எல்.கே.ஜி பாப்பா தான். நிக்க வச்சு கேள்வி கேட்டு மிரட்டுவா பாருங்க, அவ்வளவு தான்!”
“உங்களையே மிரட்டுவாளா? சூப்பர் கேர்ள்ன்னு சொல்லுங்க.”
“சொல்லலாமே! அப்போ அவளோட அம்மா நான் சூப்பர் வுமன்!”
“அப்படிப் பார்த்தா தேன் தான் சூப்பர் மேனா???”
சத்யா முகத்தில் காட்டிய எக்ஸ்ப்ரெஷன் பார்த்து மீண்டும் சிரித்தாள் சக்தி.
🌼🌸❀✿🌷
சத்யா கிளம்பி போனப் பிறகு பாட்டியிடம் சொல்லி விட்டு மாடிக்கு வந்தாள் சக்தி. அந்த வீட்டின் சொந்தக்கார டாக்டரின் மகன் பயன்படுத்திய அறையை அவள் படுக்கை அறையாக பயன்படுத்திக் கொண்டிருந்தாள்.
சக்தி பக்கத்து அறையை தான் தேர்வு செய்திருந்தாள். அங்கிருந்த ஜன்னல் உடைந்து போயிருந்தது. அதனால் பர்வதம் பாட்டியே சக்தியை இந்த அறையை பயன்படுத்திக் கொள்ள சொல்லி இருந்தார்.
பாட்டியின் செட்டிமென்ட் சக்திக்கு தெரியும் என்பதால், பொதுவாக மற்ற அறைகளை பயன்படுத்தி விட்டு, தூங்க மட்டும் அந்த அறையை பயன்படுத்தினாள்.