சத்யா நக்கல் செய்வது புரிந்துக் கொண்டு கோபப் பட்டான் அபினவ்.
“விளையாடாதீங்க. நான் சீரியஸா சொல்றேன்.”
“யாரு விளையாடுறது? நானா நீயா?? ஏதோ காலேஜ் படிக்குற பொண்ணு, வேலைக்குப் போற பொண்ணுன்னு சொன்னா பரவாயில்லை. நீ கல்யாணமாகி ஒரு பையன் இருக்கவளைப் பத்தி சொல்ற?”
“அதான் அவங்களுக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சுன்னு சொன்னேனே?”
“அடிக்குற வெயில் உன்னை ரொம்ப பாதிச்சிருச்சுன்னு நினைக்கிறேன்!”
“நான் அஹல்யா டீச்சர் பத்தி தப்பா யோசிக்கலை. ஆனாலும் எதுவோ மனசை பிராண்டுது.”
“பிராண்டும்ப்பா பிராண்டும்! உன் வயசு அப்படி! அவரு சொல்றது தான் சரி. தேவை இல்லாத விஷயங்கள்ல மூக்கை நுழைக்காத.”
அபினவின் முகம் போனப் போக்கை பார்த்து சத்யாவிற்கே பாவமாக இருந்தது.
“சரி, சரி ரொம்ப ஃபீல் செய்யாம சாப்பிட வா!”
ஷாலினியையும் அழைத்து இரண்டுப் பேருக்கும் ஒன்றாகவே உணவு பரிமாறினாள் சத்யா.
வேறு விஷயங்களைப் பேசிய அபினவ் அதற்கு பிறகு அஹல்யா பற்றிய பேச்சை எடுக்கவே இல்லை. சத்யாவும் மேலே எதுவும் கேட்கவில்லை.
சாப்பிட்டு முடித்த உடன் கிளம்பினான் அபினவ்.
அவனுக்கு பை சொல்லி விட்டு வந்த சத்யாவிடம் ஷாலினி ஒரு பேப்பரை நீட்டினாள்.