அபினவ் மிச்சம் மீதி இருந்த பக்கோடாவை காலி செய்துக் கொண்டிருந்தான்.
“அவர் கிளம்பி போனது உனக்கு வசதியா போச்சு! அவரு தட்டில இருந்ததையும் எடுத்து சாப்பிடுற தான?”
அசடு வழிய சிரித்தான் அபினவ்.
“பரவாயில்லை! பேச்சலர் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம். நீ என்ஜாய் செய். அப்படியே எனக்கு உன் கதையையும் சொல்லு,” என்றாள் சத்யா.
“கதைன்னு சொல்ற அளவுக்கு பெருசா ஒண்ணுமில்லை,” என்றான் அபினவ் தயக்கத்துடன்.
“அது சரி! அப்போ, கதைன்னு சொல்ல முடியாத மாதிரி இருக்குறதை என்னன்னு சொல்லு...”
“என்னன்னு தெரியலைக்கா, இரண்டு மூணு நாளாவே மனசுக்குள்ளே ஒரு சஞ்சலம்...”
“ஏன்?”
“இரண்டு நாளுக்கு முன்னால நான் மார்கெட்டுக்கு ரோந்து போனப்போ ஆரம்பிச்சது...”
முதல் முறை அஹல்யாவை மார்க்கெட்டில் பார்த்தது தொடங்கி, இன்ஸ்பெக்டர் தேன் சொன்ன கொலை கேஸ் வரை அப்படியே ஒப்பித்தான் அபினவ்.
"அவங்களைப் பார்த்தா தப்பா தெரியலைக்கா. பாவம் சின்ன பையனோட எவ்வளவு கஷ்டப் படுறாங்க. அன்னைக்கு மார்க்கெட்ல கான்ஸ்டபில் வழிஞ்சதை நீங்க பார்த்திருக்கனும். கோபமா வருது!"
"எனக்கும் கூட கோபமா வருது. தினம், தினம் மார்கெட்டுக்கு போற, இந்த அக்காக்கு ஏதாவது வாங்கணுமான்னு ஒரு தடவையாவது போன் செய்துக் கேட்டீயா?"