இரவு உடைக்கு மாறிய சக்தி சத்யா பற்றி யோசித்தாள்.
சத்யா போல ஒரு சிலரால் எப்படி அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடிகிறது! சத்யாவை சந்தித்தப் பிறகு எத்தனை முறை சிரித்து விட்டாள்!
அதற்கு முன் கடைசியாக எப்போது ஸ்மைல் செய்தாள் என்றுக் கூட அவளுக்கு ஞாபகமில்லை.
யோசனையில் இருந்ததால் கவனம் இல்லாமல் கட்டிலில் இடித்துக் கொண்டாள் சக்தி.
வலித்த முட்டியை தேய்த்தவளின் கண்ணில், கட்டில் மெத்தையின் கீழே இருந்து கொஞ்சமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பேப்பர் பட்டது. அவள் இடித்துக் கொண்ட வேகத்தில் உள்ளே இருந்து வெளியே வந்திருந்தது போலும்!
என்ன அது?
குனிந்து அந்தப் பேப்பரை எடுக்க முயற்சி செய்தாள் சக்தி.
🌼🌸❀✿🌷
சத்யா வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது தென்றல்வாணன் காக்கிசட்டை அணிந்து கிளம்பிக் கொண்டிருந்தான்.
“சத்யா, வந்துட்டீயா! நானே உனக்கு ஃபோன் செய்யனும்னு நினைச்சேன். டிஜிபி ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சு, நான் போயிட்டு வரேன். எனக்காக வெயிட் செய்ய வேண்டாம். நீ சாப்பிட்டு தூங்கு. என் கிட்ட சாவி இருக்கு. கதவை மறக்காம லாக் செய்துட்டு தூங்கு.”
மூச்சு விடாமல் பேசி விட்டு அப்படியே கிளம்பி சென்றான் தென்றல்வாணன்.
அவனின் போலீஸ் கார் கிளம்பிப் போவதை நின்று பார்த்து விட்டு ஹாலுக்கு வந்தாள் சத்யா.