அந்த ஒரு நொடியில் மனம் தடுமாறினான் கொம்பன் ஆனாலும் தன் மனதை அதட்டி அடக்கியவன் அவளைப் பார்த்து
”இந்த தாலியை கட்டினா நாம ரெண்டு பேருமே சாகற வரைக்கும் தண்டனை அனுபவிப்போம், எனக்கு பரவாயில்லை நானே சந்நியாசியா ஆகனும்னு ஆசைப்பட்டவன், என் வாழ்க்கை எப்படி போனாலும் எனக்கு கவலையில்லை ஆனா, உன் வாழ்க்கை நாசமாகுமே அதை பத்தி யோசிச்சியா”
”கல்யாணம் ஆன பின்னாடி சந்நியாசியா ஆனவங்க நிறைய பேர் இருக்காங்க, அவங்க எல்லாரும் தங்களோட ஆசைகளை அனுபவிச்சி போதும்ங்கற எண்ணம் வந்த பின்னாடி சந்நியாசியா ஆனவங்க ஆனா, நீ அப்படியில்லையே உன் வாழ்க்கையில நீ எதையும் அனுபவிக்காமலே சந்நியாசியா ஆகப் போற உனக்கு இது பரவாயில்லையா”
”பரவாயில்லை”
”அப்ப எனக்கும் பரவாயில்லை, தாலியை கட்டு ஒரு முறை நீ கட்டிட்டன்னா வாழ்க்கை முழுக்க நீ நரகத்தை மட்டும்தான் பார்ப்ப”
என சொல்ல அவனோ இளப்பமாக சிரித்துவிட்டு
”நரகமோ சொர்க்கமோ ரெண்டு பேரும் சேர்ந்துதான் அனுபவிக்கனும்”
”என் தலையெழுத்து உனக்கு போய் முறைப்பொண்ணா பிறந்து தொலைச்சேனே அனுபவிச்சி தொலைக்கிறேன் ம் கட்டு” என்றாள் அதட்டலாக அவளின் அதட்டலை கூட ரசித்தான் கொம்பன்
அப்படியே தலையை திருப்பி தன் தாய் தந்தையைப் பார்த்தான் அவர்களோ அதுநாள் வரை எங்கே தன் ஒரே மகன் சந்நியாசியாகி சென்றுவிடுவானோ என்ற கவலையுடன் துக்கத்துடன் வருத்தமான முகத்துடன் இருந்தவர்கள் இப்போது கலகலப்பாக மாறிப் போனார்கள் முகம் முழுவதும் மகிழ்ச்சி தாண்டவமாடியது