அவனது சொந்தங்கள் பந்தங்கள் கூட சந்தோஷ மிகுதியில் சிரித்து மகிழ்ந்தார்கள், கணக்கு பிள்ளை எப்போது அவள் கொம்பனிடம் தாலியை கட்டு என்றாளோ அந்த நொடியே அரக்க பரக்க ஓடிச் சென்று இரண்டு பூமாலைகளை வாங்கி வந்து தயாராக நின்றிருந்தான். சந்நயாசியோ நடப்பதை நிறுத்த முடியாமல் விக்கித்துப் போய் நின்றார். வக்கீல் குழப்பத்துடன் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சண்முகத்திற்கு முகத்தில் ஈயாடவில்லை, இன்னும் அவர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பினது போல தான் எதையோ நினைக்க தன் மகள் வேறு ஒன்று செய்துவிட்டாளே என எண்ணி தன்னையே திட்டிக் கொண்டார்.
ஒரு கையில் அருவாள் மறுகையில் தாலியுடன் நின்றிருந்த காவேரிக்கு முன் எது நடந்தாலும் சிவன் சித்தம் என்ற நினைப்பில் இருந்த கொம்பனோ அவளுக்கு தாலி கட்ட ஆயத்தமானான். அவளது கையில் இருந்த தாலியை வாங்கியவன் அவளிடம்
”இந்த அருவாளை எடு குறுக்க இருக்கு”
என சொல்ல அவளும் அருவாளை இறக்கிவிட அதற்குள் ஓடிவந்து அந்த அருவாளை வாங்கிக் கொண்டான் கணக்குபிள்ளை, முகம் முழுவதும் சிரிப்பாக கையில் இருந்த பூமாலைகளை அவள்புறம் நீட்ட அவளோ வேண்டா வெறுப்பாக ஒரு பூ மாலையை வாங்கி கொம்பனை பார்த்தாள், அவனும் கணக்குபிள்ளையை பார்த்து
”என்னிக்குமே எள்ளுன்னா எண்ணெய்யா இருக்க மாட்ட, இன்னிக்கு என்ன எண்ணெய்யா மாறி என்னை பொறிச்சி எடுக்கற போல” என சொல்லிக் கொண்டே பூமாலையை வாங்கிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
யார் முதலில் மாலையை அணிவிப்பது என்ற யோசனை வந்தது அவனோ தயங்கினான். அவளோ
”பனைமரத்தில பாதி வளர்ந்தவனே தலையை இறக்கு உனக்காக நான் எக்கி வரனுமா