”இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா அத்தை மாமா” என அழைக்க திடுக்கிட்டான் கொம்பன்
”ஆஹா ஏற்கனவே என் அப்பாவும் அம்மாவும் இவள்கிட்ட சரண்டராயிட்டாங்க, இப்ப எதுக்கு அவங்களை கூப்பிடறா, இன்னும் என்னென்ன செய்யப் போறாளோ இல்லை இல்லை, இவள்கிட்ட நான் மாட்டிக்கிட்ட மாதிரி என் அப்பா அம்மாவை மாட்டிவிடக் கூடாது, அவங்களையாவது காப்பாத்தறேன்” என மனதில் நினைத்து அவசர அவசரமாக தன் தாய் தந்தை பிடிக்க செல்ல அதற்குள் அவர்கள் இருவரும் காவேரியின் முன் பவ்யமாக நின்றார்கள். அப்படி அவர்கள் நிற்பதைக் கண்டு திகைத்தான் கொம்பன்
”இவங்களுக்கு ஊரே பணிஞ்சி மரியாதை தருவாங்க, ஆனா இங்க என் முறைபொண்ணு முன்னாடி பவ்யமா நிக்கறாங்களே சே இதுக்கெல்லாம் யார் காரணம் இந்த ஊர்காரங்கதான் தேவையில்லாம, எனக்கு நல்லது செய்றேன்னு இவளுக்கு நடக்க இருந்த 7 கல்யாணத்தையும் நிறுத்தாம இருந்திருந்தா இப்படியொரு அசம்பாவிதம் நடக்குமா, யாரை தப்பு சொல்லி என்ன பிரயோசனம், என்னோட சேர்ந்து என் குடும்பமே தண்டனை அனுபவிக்குதே” என உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே நடப்பதை பார்த்தான்.
”அம்மாடி மருமகளே சொல்லும்மா, என்னாச்சிம்மா ஏன் விசனப்படற எதுவாயிருந்தாலும் சொல்லும்மா” என பாசத்துடன் கொம்பனின் தாய் கேட்க அவளோ
”பாருங்க அத்தை, உங்க மகனோட பேச்சை கேட்டீங்களா மாமா பாலு பழம் வேணாமா என்னதான் நடந்தது, முறைப்படி கல்யாணம் நடக்கலைன்னாலும் அதுக்காக இப்படியா, தாலிக்கு ஒரு மரியாதை இல்லை, நான் என்ன திருட்டுத்தனமாவா கல்யாணம் செய்துக்கிட்டேன், உங்க எல்லார் முன்னாடியும் அவரோட சம்மதத்தோடதானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அப்படி இருக்கறப்ப கல்யாணத்துக்கான சம்பிரதாயங்களை முறையா செய்றது தப்பா சொல்லுங்க தப்பா, கல்யாணம்தான் எப்படி எப்படியோ நடந்துப் போச்சி, அதுக்காக அப்படியே விடவா முடியும், ஊர்காரங்களுக்கு இந்த விசயம் தெரிஞ்சா அவங்க உங்க மகனை நினைச்சி வருத்தப்பட மாட்டாங்களா, நான் என்ன கொடுமைக்காரியா இல்லையே, என் மேல உங்க மகனுக்குதான் இரக்கம் பிறக்கலை உங்களுக்குமா பிறக்கலை” என உருக்கமாக பேசி வைக்க அவர்கள் உருகியே விட்டார்கள்