முழுவதும் நடந்த நிகழ்வினால் மனதாலும் உடலாலும் சோர்ந்து போயிருந்தாள் அதனால் தனது உடைகளையும் நகை அலங்காரம் சிகை அலங்காரம் என அனைத்தும் களைந்து நைட்டி ஒன்றை அணிந்துக் கொண்டு படுக்கையில் படுத்து கண்கள் மூடினாள் அவ்வளவுதான் எங்கிருந்துதான் அப்படியொரு உறக்கம் வருமோ உறங்கிப் போனாள்.
கொம்பனோ புது இடம் என்ன செய்வது? எங்கு செல்வது? யாரை கேட்பது என விளங்கவில்லை, சண்முகமோ சொந்த பந்தங்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் கொம்பன் தன் தாய் தந்தையை காண விரைந்தான், தாயோ அடுப்படியில் வேக வேகமாக சமையல் செய்துக் கொண்டிருக்க தந்தையோ வந்திருக்கும் ஊர்க்காரர்களுக்கு அவர்கள் கேட்கும் கேள்விக்கு சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டிருந்தார். கணக்குபிள்ளையோ இப்போது சண்முகத்தின் பக்கத்தில் நின்றுவிட்டான், அவர் தரும் உத்தரவை சிரமேற்கொண்டு செய்யலானான்.
கொம்பனோ தன் தாயிடம் சென்று
”என்னம்மா செய்ற நீ இந்த வீட்ல என்ன சமையல்காரங்களா இல்லை நீ போய் இதையெல்லாம் செய்ற, நம்ம வீட்ல கூட நீ வேலை செய்தா எனக்கு பிடிக்காது, பாரு பாரு எப்படி வேர்த்துப் போயிருக்கு பாரு வேணாம்மா வாம்மா“
“சும்மாயிருடா பொண்ணு வீட்டுக்காரங்க கோச்சிக்கப் போறாங்க, நீ வாழபோற வீடு இது, நாளைக்கு பின்னாடி ஏதாவதுன்னா நீ கண்ணை கசக்கிகிட்டு நிப்பியா சொல்லு, எந்த வீடா இருந்தா என்னடா, நீ இருக்கற வீடு நம்ம வீடுதான், நம்ம வீட்ல நான் வேலை செய்றது தப்பா என்ன“
”ஏன்மா அதுக்கு நீ கஷ்டப்படனுமா எங்க அவள்“
”யாரைத் தேடற”
”அதான் என்னை கட்டிக்கிட்டாளே ஒருத்தி என் முறைப்பொண்ணு அவளை வேலைவாங்கறது”