“இல்லை!” உடனடியாக மறுத்தான் அபினவ்.
“நடந்த தப்புக்கு எல்லாம் காரணம் நான் தான். தப்பு என் பேருல தான். தேவை இல்லாத ஆசை, தேவைக்கு அதிகமான கோபம். அதனால தான் இந்த நிலைமைல நிக்குறேன்.”
“தப்பு அஹல்யா. நீ நடிக்கனும்னு ஆசைப் பட்ட, அதுல தப்பென்ன இருக்கு? நடந்ததுக்கு காரணம் மனுஷ உருவத்துல சுத்திட்டு இருக்க மிருகங்க. உன் கோபம், நீ செய்தது எல்லாமே சரி.”
“நான்... நான்... என்னை கல்யாணம் செய்துக்குறதுல உங்களுக்கு... நான் சொன்னதை எல்லாம் கேட்டதுக்கு பிறகும்...“ அவளுடைய கடந்த கால வாழ்க்கை அவனை பாதிக்கவில்லையா என்பதை எப்படி கேட்பது என்று புரியாமல் தடுமாறினாள் அஹல்யா.
“எனக்கு தெரிஞ்ச, பிடிச்ச அஹல்யா மதியூர் மிடில் ஸ்கூல்ல மேத்ஸ் டீச்சரா இருக்குறா. நான் உன் கிட்ட பழசு எதையும் கேட்கவே இல்லையே! சொல்லனும்னு நீ ஆசைப் பட்ட, அதனால தான் அமைதியா கேட்டுக்கிட்டேன். நாளைக்கு என் கிட்ட எல்லாத்தையும் சொல்லலைன்னு உனக்கு வருத்தம் இருக்க கூடாதுன்னு யோசித்தேன். நீ சொல்லியாச்சு, நான் கேட்டாச்சு. அவ்வளவு தான்! அத்தோட இந்த சப்ஜக்ட் முடிஞ்சுப் போச்சு. இனிமேல் இதைப் பத்தி நாம பேசவே வேண்டாம். உன் அம்மா, அக்கா அட்ரஸ் கொடு. நான் அவங்க கிட்ட பேசுறேன். நம்ம கல்யாணத்துக்கு வர சொல்றேன்.”
“அபினவ்!” அஹல்யாவின் அழுகை அதிகமானது.
“முதல்ல அழுறதை நிறுத்து!” அஹல்யாவின் கண்ணீரை துடைத்து விட்டான் அபினவ்.
"பாரு அருண் எப்படி பயந்துப் போய் பார்க்கிறான்னு!”
அபினவ் அவன் பெயரை சொன்ன உடன் சீசரை விட்டு விட்டு அபினவிடம் ஓடி வந்தான் அருண்.