“புதுசா ஊருக்கு வந்ததா சொல்றீங்க? உங்க சொந்த ஊர் எது? எதுக்கு இங்கே வந்தீங்க?”
“நான்... நான்...“
இதை சொல்ல எதற்கு தயங்குகிறாள் என்று சக்தியின் க்யூரியஸ் மனம் யோசித்தது.
இவர்களின் பேச்சை கவனித்தப் படி ஃபோன் பேசிக் கொண்டிருந்த அபினவ் அந்த அழைப்பை துண்டித்து விட்டு வேகமாக அஹல்யாவின் பக்கத்தில் வந்தான்.
“பழையக் கதை எல்லாம் எதுக்கு சக்தி மேம். இப்போ டைம் ஆச்சு கிளம்பனும். லாயர் ரங்கநாதன் டவுன்ல இருக்க அவரோட ஃப்ரென்ட் கிட்ட பேசி ஹெல்ப் செய்ய சொல்றேன்னு சொன்னார். அவரோட அட்ரஸும் அனுப்புறேன்னும் சொல்லி இருக்கார். தேங்க்ஸ் மேம்.”
“நோ மென்ஷன் அபினவ்.”
சக்தி சொல்லி முடிக்கவும் அபினவின் மொபைல் ரிங் ஆகவும் சரியாக இருந்தது.
அபினவ் ஃபோனை எடுத்து மீண்டும் பேசவும், சக்தி அஹல்யாவை கவனித்தாள்.
அஹல்யாவின் நெற்றியில் புதிதாக வேர்வைத் துளிகள் தோன்றி இருந்தது! அவளுடைய முகத்தைப் பார்த்தால் பயம், பதற்றம் என்பதை விட கசப்பான எதையோ சுவைத்து விட்ட உணர்வு இருப்பதாக தோன்றியது. இது அவளுடைய சொந்த ஊர் எது என்ற கேள்வியினால் வந்திருக்கும் மாற்றமா? சக்தி யோசித்துக் கொண்டிருக்க,
“சக்தி மேம், லாயர் வரேன்னு சொல்றார். ஆனால் அவருக்கு இந்த ஊர் தெரியாதாம். என்னை வந்து அவரை பிக்கப் செய்ய சொல்றார்,” என்றான் அபினவ்.
“நீ போ அபினவ். நானும் சக்தியும் டீச்சரைப் பார்த்துக்குறோம்.” சத்யா யோசிக்காமல் சொன்னாள்.