ஜானகிக்கு இப்போது பெரிய விடுதலை கிடைத்தது போல மகிழ்ந்தாள்.
சந்தோஷமாக மூர்த்தியிடம் வந்தாள்
”மாமா நான் வந்துட்டேன்” என்றாள் மூர்த்திக்கு வெறுப்பே வந்தது
சட்டென அவளை தள்ளிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல ஜானகியோ மாமா மாமா என அழைத்தபடியே அவனின் பின்னால் ஓடினாள், மூர்த்தியின் பெற்றோரோ இனி என்ன ஆகுமோ என்ன செய்வதோ என்ற கலக்கத்துடன் வீரசிங்கத்திடம் வருகிறோம் என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றனர்.
அனைவரும் சென்றதும் அந்த வீடே மயானம் போலானது, வீரசிங்கம் வேங்கையனைப் பார்த்தார். வேங்கையன் உடைந்துப் போயிருந்தான், அவனது மனநிலைமை புரிந்துக் கொண்டார், அதனால் அவனின் பக்கத்தில் அமர்ந்து அவனது தோளில் கையை வைத்த அடுத்த நொடி தந்தையை அணைத்துக் கொண்டு ஓவென ஒப்பாரி வைத்தான்.
அவனது அழுகை அந்த வீட்டையும் கடந்து தெருவுக்கே கேட்டது, ஏற்கனவே வீட்டிற்குள் நடப்பது வீதி வரை கேட்டது, அக்கம் பக்கம் இருந்த மக்கள் வெளியே கூடியிருந்தார்கள், முதலில் மங்களம் மஹதியுடன் வெளியே செல்லும் போதே மக்கள் என்ன ஏது என கேள்விகள் கேட்டார்கள், ஆனால் மங்களம் மலர்ந்த முகத்துடன் கோயிலுக்கு போவதாக சொல்லிவிட்டுச் சென்றார்.
அடுத்து குபேரனும் வேணியும் கலக்கத்துடன் வெளியே வரும் போதும் விசாரித்தார்கள், ஜானகியை தலைமுழுகிவிட்டோம் இனி அவள் தங்கள் மகளல்ல என சத்தமாக கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள், அதுவே மக்களுக்கு குழப்பத்தை தந்தது
அடுத்து மூர்த்தி வெளியேறுவதும் அவனை தொடர்ந்து ஜானகி வருவதும் கண்டு இருவரையும் நிப்பாட்டி என்ன ஏதுவென கேட்க மூர்த்திக்கு அவமானமாகி அங்கிருந்து விறுவிறுவென சென்றான்.