”நல்லாயிரும்மா சந்தோஷமா இரு” என இருவரும் ஆசி வழங்கினார்கள்
”அவங்க எப்ப வருவாங்கப்பா“ என கேட்க மகேந்திரனோ
”வந்துக்கிட்டே இருக்காங்க ஆமா உனக்கு இதுல விருப்பம்தானே”
”ஆமாம்பா ஏன் இப்படி சந்தேகமா கேட்கறீங்க”
”உன் முகத்தில மலர்ச்சியே இல்லையே” என கேட்க அவளோ மென்மையாக சிரித்தாள் முகம் மலர்ந்தது
”இப்பதான் நீ அழகா இருக்க, இப்படியே சந்தோஷமா இரும்மா அது போதும் எங்களுக்கு” என சொல்ல அவளும் சரியென்றாள்.
வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்கவும் மகேந்திரன்
”வந்துட்டாங்க போல இருக்கு, நான் போய் அவங்களை வரவேற்கிறேன்” என சொல்ல அதற்கு மஹதியோ
”நானும் வரேன்பா“
”நீயுமா“
”ஏன்பா நான் வரக்கூடாதா”
”அதுக்கில்லை முறையா பொண்ணு பார்க்கற படலத்திலயே நீ அவங்களை பார்க்கலாமே”
”பார்க்கறது முக்கியம் இல்லைப்பா அவங்க எப்படிபட்டவங்கன்னு பார்க்கற சில நொடியில தெரிஞ்சிடுமா என்ன”