”இங்கதானே இருந்தா“
”போ போய் அவளை தேடிப்பிடி அதிர்ச்சியில மயங்கி விழப்போறா” என சொல்ல சாந்தி மஹதியை தேடிச் சென்றார்.
மூர்த்திக்கும் ஜானகிக்கும் கோபமே வந்தது, பாஸ்கரனை கொல்லும் அளவு வெறுப்புடன் இருந்தாள் ஜானகி. வேங்கையனோ மகேந்திரனிடம்
”சொல்லுங்க சார், கல்யாண வேலைகள் எதுவரைக்கும் இருக்குது, ஓ பத்திரிகை எல்லாம் வந்தாச்சா” என சொல்லிக் கொண்டே அவர் கையில் இருந்த பத்திரிகையை வாங்கிப் பார்த்தான், மற்றவர்களும் அங்கிருந்த டேபிள் மீதிருந்த பத்திரிகையை எடுத்துப் பார்த்தார்கள்.
வேங்கையனுக்கு இதயமே கனத்துவிட்டது, துக்கம் தொண்டையடைத்தாலும் வந்தது எதற்கு நட்புக்காக வேலை செய்ய வந்தான், அதனால் அதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு
”அப்போ பத்திரிகை கொடுக்கற வேலைகளை ஆரம்பிக்கலாமா” என கேட்க மகேந்திரன் துவண்டுப் போய்
”நாளைக்குதான் நல்ல நாள் நாளையில இருந்து பத்திரிகை கொடுக்க ஆரம்பிக்கலாம், ரொம்ப தூரம் பயணம் செய்து வந்திருப்பீங்க, முதல்ல ஓய்வு எடுங்க” என சொல்ல பாஸ்கரனோ
”அதெல்லாம் அவங்க ஓய்வெடுத்துட்டாங்க கல்யாண வேலைகளை தனியா உங்களால செய்ய முடியாது, இவங்க உங்களுக்கு உதவி செய்வாங்க எங்க கல்யாணம் முடிஞ்ச கையோட நாம எல்லாருமே இவங்க ஊருக்கு போய் இதோ இங்க இருக்காங்களே மூர்த்தி ஜானகி கல்யாணத்தை பார்த்துடலாம், என்ன சொல்றீங்க மாமா” என கேட்க மகேந்திரனுக்கு தலை வலி வந்தது, அவர் தலையை பிடித்துக் கொள்ள பாஸ்கரனோ
”என்னாச்சி மாமா”
”ஒண்ணுமில்லைப்பா கொஞ்சம் தலை வலிக்குது ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்”