தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 39 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
எதிர்பாராமல் கோடை நேரத்தில் கொட்டி செல்லும் மழையில் நனைந்ததுப் போல் ப்ரியாவின் மனதில் சில்லென்ற உணர்வு தோன்றியது.
அவளின் கட்டுப்பாட்டையும் மீறி அவளின் இதயத் தோட்டத்தில் பசுமை தோன்றியது, குயில்கள் கோரஸாக இன்னிசை கீதம் பாடின!
ப்ரியாவின் அமைதியை எப்படி எடுத்துக் கொள்வது என்ற யோசனையுடன், “விக்கிக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு! அவனே என் கிட்ட சொன்னான். உன் மனசுல படுறதை தயங்காம என் கிட்ட சொல்லு,” என்றாள் வைஜெயந்தி!
விக்கிராந்திற்கு அவளைப் பிடித்திருக்கிறதா???
பல பல வருடங்களுக்குப் பிறகு ப்ரியாவின் மனதில் உண்மையாகவே இனிய உணர்வு பரவியது.
ஒன்றும் சொல்லாது அசையாமல் அமர்ந்திருந்த ப்ரியாவின் கையை மெல்ல வருடிய வைஜெயந்தி,
“சொல்லு ப்ரியா, உனக்கு சம்மதம்ன்னு சொல்லிடவா? உனக்கு அது தான் நல்லதுன்னு எனக்குப் படுது,” என்றாள் மென்மையாக.
வைஜெயந்தி சொன்ன அந்த ‘உனக்கு அது தான் நல்லதுன்னு எனக்கு படுது,‘ எனும் வாக்கியம், ப்ரியா கடந்த சில நிமிடங்களாக மறந்திருந்த அவளின் வாழ்வில் நடந்த பழைய சம்பவத்தை விருப்பமே இல்லாமல் நினைவுப் படுத்தியது!
அன்றும் இதே அர்த்தம் கொண்ட எதையோ தான் சொன்னார்கள்! அவளுக்கு அது எதுவும் கருத்தில் படவே இல்லை!
கசப்பான சம்பவங்கள் மீண்டும் நினைவிற்கு வர, அவளின் மனதில் தோன்றி இருந்த இனிய உணர்வுகள் சட்டென மறைந்துப் போனது!