நந்திதாவை சுரிதார் அல்லது சேலையில் பார்த்து பழகி இருந்தவனுக்கு, அவள் தலை விரி கோலமாக நைட்டியில் அவன் முன் முதல் முறையாக நிற்கவும்... நம்ப முடியாமல், கண்களை இமைக்காமல் அவளையே பார்த்தபடி நின்றான்!
அவர்கள் இருவரில் முதலில் சுதாரித்தது நந்திதா தான்... பெண்ணுக்கே உரிய சங்கோஜத்துடன் நெளிந்தவள், அங்கே நிற்பது உதய் என்பதால் முகத்தில் அடிப்பது போல் கதவை மூடவும் முடியாமல், என்ன செய்வது என்றும் புரியாமல் நின்றாள்.
உதய்க்கு அது போல் எந்த தடுமாற்றமும் இல்லை... பல்லி மிட்டாய் கிடைக்காதா என்று ஏங்கியவனுக்கு கிடைத்த டைரி மில்க் சில்க் சாக்லேட் பார் போல் இமைக்காமல் நந்திதாவை பார்த்திருந்தான்... பார்த்துக் கொண்டே இருந்தான்...!
“க்கும்... என்ன நடக்குது இங்கே?”
துளசியின் குரல் கேட்டு விருப்பமில்லாமல் பார்வையை திருப்பிய உதய், கைகளைக் கட்டிக் கொண்டு கேள்வியாக அவனை பார்த்திருந்த துளசியை பார்த்து அசடு வழிந்தான்...
“ஹி ஹி சாரி அண்ணி... ரூம் மாத்தி வந்துட்டேன்...”
“ஓஹோ...”
“சாரி அண்ணி...” என்றவன் மீண்டும் ஆர்வத்துடன் பார்வையை நந்திதா பக்கம் திருப்பி, “சாரி நந்திதா...” என்றான்.
இப்போது கதவின் பின்னே தன்னை மறைத்துக் கொண்டு முகத்தை மட்டும் நீட்டி வெளியே பார்த்திருந்த நந்து,
“இட்ஸ் ஓகே உதய்...” என்றாள்.