”அவர் என்ன ஜட்ஜா, அவர் உசுரே இங்க ஊசலாடுது இதுல எங்க அவர் இந்த பொண்ணுக்கு நியாயம் வழங்கப் போறாரு“
”இந்தப் பொண்ணுக்கு அவர் உதவிதான் செஞ்சாரு ஆனா, ஏனோ அதை இவங்க புரிஞ்சிக்கலையே, அண்ணாவை டார்ச்சர் பண்றாளே, அண்ணாவும் பாவப்பட்டு அமைதியா இருக்காரு, அவருக்கு கோபம் வந்தா இந்த பொண்ணால தாங்க முடியுமா”
”முடியாதுதான் அண்ணாவுக்கு கோபம் வந்து அவர் தப்பான முடிவெடுக்கறதுக்குள்ள சீக்கிரமா இந்தப் பொண்ணு இங்கிருந்து போறதுதான் நல்லது”
”சரியா சொன்ன முதல்ல இந்தப் பொண்ணு பிரச்சனையை அண்ணாகிட்ட பேசி முடிச்சி இவளை பத்திரமா அனுப்பிடனும், இதனால அண்ணாவோட கோபத்துக்கு நாம ஆளானாலும் பரவாயில்லை ஆனா, இந்தப் பொண்ணு பாவம் அவர் கோபத்துக்கும் ஆளாக கூடாது“
”சரி வா போய் தூங்குவோம்” என பேசியபடியே இருவரும் சென்றுவிட்டனர்.
இரவு மணி 2
அந்நேரம் அந்த ஏரியாவே உறங்கிக் கொண்டிருந்தது.
ஆனால் சிலர் மட்டும் உறங்கவில்லை, அந்த சிலரோ தில்லையின் அடுக்குமாடி குடியிருப்பு இருந்த ஏரியாவிற்குள் ரகசியமாக ஊடுருவினார்கள்.
மெல்ல அவர்களின் பார்வை அந்த குடியிருப்பு மேல் விழுந்தது. கருணாவை கைது செய்த விவரம் மீடியா மூலமாக தெரிந்துக் கொண்ட சில ரௌடிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எண்ணி தில்லையை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார்கள், அவனுக்கு உதவி செய்யும் அவனது அடியாட்களையும் கொல்லத் திட்டமிட்டார்கள், தாங்கள் என்ன செய்தாலும் அதனால் பாதிக்கப்படுவது தில்லைதான், பழியோ கருணாவின் மீது விழட்டும் என நினைத்த சின்ன சின்ன ரௌடிகள் தங்கள் வேலையைத் தொடங்கினார்கள்.