மீண்டும் சுமித்ரா ஹேமாவின் கண் முன் ஃப்ளாஷ் அடித்து சென்றாள்! மனம் கொஞ்சம் தெளிவாக,
“சரி ரேஷூ... உனக்காக ராகவியும் காலேஜுக்கு லீவ் போட்டுட்டு வந்திருக்கா... அவளையும் உன் கூடவே வச்சுக்கோ,” என்றாள் அக்கறையுடன்!
“ஆமா, ஆமாம்... இல்லைனா உங்க பொண்ணு கூட்டத்துல தொலைஞ்சு போயிடுவா!!!! அவ எட்டு ஊருக்கும் பேசுறவ... இருந்தாலும் உங்களுக்காக கண்டுப்பிடிக்குறேன்... இப்போ பை... ப்ரின்சி வேற முறைக்கிறார்... பை பை...”
ரேஷ்மி அவளை கடந்து செல்ல, ஹேமாவின் முகத்தில் மீண்டும் புன்னகை உதயமானது! சுமித்ரா போலவே ரேஷ்மியுடன் சில நிமிடங்கள் பேசினாலே போதும்... எந்த குழப்பம் இருந்தாலும் மனம் அமைதியாகி விடும்...
மனதில் பொங்கிய நினைவுகளுடனே மற்ற மாணவ மாணவிகளுக்கும் சர்டிஃபிகேட்டை கொடுத்து வாழ்த்தவும் செய்தாள் ஹேமா!
✽✽✽
பட்டமளிப்பு விழா முடிந்ததும் தன் நண்பரான அந்த கல்லூரியின் முதல்வரிடம் விடைப் பெற்று கிளம்பினாள் ஹேமா.
ஷ்யாம் வருகிறேன் என்று சொன்னானே, வந்தானா, எங்கே இருக்கிறான்... என்று அவள் யோசித்து முடிக்கும் முன், அவளின் பக்கத்தில் வந்து நின்றான் ஷ்யாம்.
ஹேமாவின் முகத்தில் பெரிய புன்னகை உதயமானது!!!
“என்னம்மா பயங்கரமா ஸ்மைல் செய்றீங்க???”