கமல் அவளிடம் முகத்தில் அடிப்பது போல நடந்துக் கொண்டிருந்தாலும் அவள் சுமித்ராவிற்காக அவனிடம் தொடர்ந்து பேச வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள்...
ஆனால், சுமித்ரா மறைவின் தாக்கம், பிள்ளைப்பேறு என முதலில் சில மாதங்கள் ஹேமாவால் தொடர்ந்து கமலிடம் சரியாக பேச முடியவில்லை...
மீண்டும் அவளின் வாழ்வு இயல்புக்கு திரும்பிய பின், கமலிடம் பேச முயற்சி செய்தால், அவன் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டிருந்த virtual ஓட்டினுள் சுருங்கி போயிருந்தான்.
நேரில் பார்த்து பேசினால் முகத்தையே பார்க்காமல் இருப்பவன், ஃபோனில் பேசி எத்தனை கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தை பதில் மட்டுமே சொல்வான்...
அதுவும் கூட பொதுவான கேள்விகளுக்கு மட்டும் தான்... சாப்பிட்டாயா, என்றெல்லாம் கேட்டால், அவனிடம் இருந்து பதிலே வராது...
அவனுக்கு உளவியல் சம்மந்தமான பிரச்சனை இருக்கிறது, கவுன்சலிங் உதவி தேவை படுகிறது என்ற எண்ணம் ஹேமாவிற்கு உண்டு... ஆனால் அவளால் அதை பற்றி ஒன்றும் செய்ய முடியவில்லை... கமல் அதை பற்றி பேசும் வாய்ப்பையோ, சுதந்திரத்தையோ அவளுக்கு கொடுத்ததில்லை...
மற்றபடியும், அவன் வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பது ரோஷனி வழியாக அவளுக்கு தெரிய வந்திருந்தது...
ரோஷனி பற்றிய எண்ணம் வந்ததும் ஹேமாவின் மனம் கமலை மறந்து அமைதியானது! சற்று தொலைவில் காரின் அருகே நின்றிருந்த ரோஷனியை பார்த்து வாஞ்சையும், பெருமையுமாக கை அசைத்தாள் ஹேமா...
ரோஷனியிடம் இப்படி ஒரு தாய்மை உணர்வை கட்டாயம் அவள் எதிர்பார்த்திருக்கவே இல்லை... வேறு ஒருத்தியின் மகளை தன் மகளாக வளர்ப்பது சின்ன விஷயமில்லை...