இதை ரோஷனி சுமித்ராவிற்காக செய்வது நினைவில் வரவும் ஹேமாவின் மனம் மீண்டும் அவளின் அன்பு தோழியை நினைத்து வருந்தியது...
அந்த கடவுளுக்கு அப்படி என்ன தான் அவசரமோ!!!!
அதற்குள் அவளும் ஷ்யாமும் காரின் அருகே வந்து விடவே, தன் நினைவுகளை பின்னுக்கு தள்ளி, அங்கே இருந்தவர்களிடம்,“ரொம்ப நேரம் நிக்க வச்சுட்டேனா?” என்று புன்னகை மின்னக் கேட்டாள் ஹேமா.
அம்மா கார் பக்கத்தில் நிற்பவர்களை சுட்டிக் காட்டியது முதலே, அவனின் மனதிற்கு பிடித்த ரேஷ்மியை கண்களால் அள்ளி பருகிக் கொண்டிருந்த ஷ்யாமும் தன் நினைவுகளுக்கு கடிவாளமிட்டு, அடக்கமான நல்ல பிளளையாக ஹேமாவின் அருகில் நின்றான்!
ஹேமாவின் கேள்விக்கு, “ரொம்ப எல்லாம் இல்லை... வெறும் ஒன்பது நிமிஷம் அஞ்சு செகண்ட் தான்... இன்னும் ஒரு இரண்டு நிமிஷம் ஆகி இருந்தா நானும் ரேஷுவும் மயக்கம் போட்டு விழுந்தாலும் விழுந்திருப்போம்,” என்று துடுக்குத்தனத்துடன் பதில் கொடுத்தாள் ராகவி!
அவளின் விளையாட்டு புரிந்து எல்லோரும் புன்னகைக்க,
“அவ்வளவு வீக் ஆனவங்களா நீங்க இரண்டு பேரும்?? அம்மா, உடனே நல்ல டானிக்கா எழுதி இந்த இரண்டு வீக் பொண்ணுங்களுக்கு கொடுங்கம்மா,” என்றான் ஷ்யாம் கிண்டலாக!
அவனை பார்த்து ராகவி, ரேஷ்மி இருவருமே முறைத்தார்கள்... ஷ்யாமோ அதற்கு அசராமல் அவர்களை பார்த்து புன்னகை புரிந்தான்!
ரேஷ்மி திடீரென நினைவு வந்தவளாக தன் கைகளை நன்றாக விரித்த படி, ஷ்யாமை பார்த்துக் கொண்டே, “அங்கேயே நினைச்சேன்... மறந்துட்டேன்...” என்றுக் சொல்லிக் கொண்டு நடந்து வந்தாள்...