“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு மேடம்... எனக்கு நான் கேக்காமலே உதவி செய்யனும்னு யோசிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்... ஆனால், இப்போ வேண்டாம் மேடம்... நான் வீடு மாறனும்னு யோசிக்கும் போது சொல்றேனே,” என்றாள் அமைதியான குரலில்.
“இங்கே பார் சரண்யா, எனக்கு சுத்தி வளைச்சு பேச எல்லாம் தெரியாது.. நேராவே சொல்லிடுறேன்... உனக்கு ஜுரம்னு தெரிஞ்சு விசாரிக்க நான் ஃபோன் செய்தப்போ, இவங்க சொன்னாங்க டெய்லி ஈவ்னிங் நீ வரும் போது ரோட்ல தொல்லை செய்றாங்கன்னு... அதுக்கு எனக்கு தெரிஞ்ச ஒரு வழியா இதை சொல்றேன்...”
மைத்ரேயியின் குரலில் இருந்த அக்கறை சரண்யாவிற்கு புரியாமல் இல்லை...
ஏன் சுலோச்சனா மைத்ரேயிடம் பேசியது கூட அவள் மீதுள்ள அக்கறையினால் தான் என்பதும் அவளுக்கு தெரியும்!
ஆனால் பிரச்சனையே இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை சரண்யா புரிந்துக் கொண்டிருந்தாள்... எங்கே சென்றாலும் ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்சனை வர தான் செய்யும்... ஏன் மைத்ரேயி குடும்பத்தில் மித்ரன் இல்லையா? அவன் ஒருவன் போதுமே, அவள் வாழ்க்கையை வெறுத்துப் போக செய்ய...!
மனதில் நினைத்ததை சொல்லாமல்,
“அப்படி பிரச்சனைன்னு விட்டுட்டு ஓடிப் போயிட முடியுமா மேடம்?” என்றாள்.
“ஓடி போக வேண்டாம் சரண்யா... ஆனால் அந்த ப்ராப்ளமை எப்படி சால்வ் செய்றதுன்னு பார்க்கனும் தானே? ஒன்னு தைரியமா எதிர்த்து நின்னு பேசனும், போலீஸ்ல கம்ப்ளெயின்ட் செய்யனும்... இல்லை துஷ்டரை கண்டால் தூர விலகு டெக்னிக் பயன்படுத்தி நாம தள்ளி போகனும்... இந்த தள்ளி போறதுல நமக்கு கூடுதல் நன்மை இருந்தா அதை செய்றதுல தப்பில்லை...”