“சொல்லுங்க...”
“உதயை பத்தி உனக்கு எவ்வளவு தெரியும்?”
“எவ்வளவுன்னா எப்படி சொல்றதுன்னு தெரியலை... தெரியும்...”
“உனக்கு விட்டுக் கொடுத்து பழக்கம் இருக்கா?”
ஏன் என்பது போல ரேவதியை பார்த்தாள் நந்திதா!
“உதயோட சந்தோஷமா வாழனும்னா நீ விட்டுக் கொடுத்து போனால் தான் உண்டு...”
நந்திதா யோசனையுடன் நெற்றியை சுருக்கி ரேவதியை பார்த்தாள்!
அதை கவனித்து, ரேவதியே தொடர்ந்துப் பேசினாள்!
“எனக்கு விட்டுக் கொடுக்குறது பழகிப் போனது... பிறந்தது முதலே என் வாழ்க்கையில எதுவுமே என் இஷ்டம் போல நடந்தது இல்லை... சின்ன பொண்ணா இருந்தப்போவே அம்மா அப்பா இறந்துட்டாங்க... நான் வளர்ந்த பாட்டி வீட்டுல எல்லாத்துக்குமே கட்டுப்பாடு உண்டு... அப்புறம் என் கல்யாணம் கூட அவங்க இஷ்டம் போல நடந்தது தான்... ஆனால் என் வாழ்க்கையில நான் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தது அவரோட இருந்த அந்த எட்டு வருஷம் தான்... அவர் இருந்தப்போ என்னை ராணி போல பார்த்துக்கிட்டார்... அப்புறம்... ம்ம்... இப்போ எனக்குன்னு இருக்குறது உதய் மட்டும் தான்... எனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ அவனுக்கு பிடிச்சது போலவே எல்லாம் செய்து எனக்கு பழகி போச்சு... நீயும் அது போல விட்டுக் கொடுக்க உன்னையே தயார் செய்துக்கோ...”
நந்திதா இப்போதும் எதுவும் சொல்லாமல் யோசனை மின்ன தான் அமர்ந்திருந்தாள்!
அவள் பக்கம் ஒரு கூர்மையான பார்வையை வீசி விட்டு, “எனக்கு உதயோட சந்தோஷம் தான் முக்கியம் வேற எதுவும் முக்கியமில்லை,“ என்றாள் ரேவதி!