ஆமாம். இன்னைக்கு என் அர்ச்சனாவுக்கு சூப்பரா சமைச்சு போடலாம்னு நான் நினைச்சேன். நீ என்ன நினைச்சே? கண் சிமிட்டி கேட்டான்
தலைகுனிந்து அழகாய் சிரித்தவளின் முகத்தை மனதிற்குள் படம் பிடித்துக்கொண்டு சமைக்க துவங்கினான் வசந்த்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் தன் அப்பாவை அழைக்க மறந்திருந்தாள். அவர் தவித்துக்கொண்டிருப்பார் என்று யோசிக்கவில்லை அர்ச்சனா.
விதம் விதமாக சமைத்திருந்தான் வசந்த்.. சாப்பிடும் நேரத்தில் இரு. இந்த பாயசத்தை என் அர்ச்சனாவுக்கு ஊட்டி விடுவோம்' என்று ஊட்டி விட்டான்
அவன் செய்வதெல்லாம் அவள் பிறந்தநாளுக்காகவே செய்தது போலே இருந்தது அவளுக்கு.
அன்றைய தினத்தின் ஒவ்வொரு நொடியையும் அவளுடனே செலவிட்டான் வசந்த்.
ஒன்றாய் அமர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டு, சில அழகான வரிகளில் கரைந்துபோய் ஒருவரை ஒருவர் கண்களால் தழுவிக்கொண்டு, சில நேரங்களில் ஒருவரி ஒருவர் கேலி செய்துக்கொண்டு...... அவனிடம் தன் பிறந்தநாள் என்று சொல்லாமலே அந்த தினத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசித்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.
நடுவில் ஒலித்தது வசந்தின் கைப்பேசி
மனோவிடமிருந்து அழைப்பு.
'சொல்லிவிடுவானா அவன்?' தவிப்புடன் வசந்தின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. மனோ அவள் பிறந்தநாளை மறந்தே விட்டிருந்தான்.
அன்று மாலை சட்டென நினைவு வந்தவனாய் சொன்னான் ' ஹேய் உனக்கு ஒரு மொபைல் வாங்கணும்னு நினைச்சேன். மறுந்துட்டேன் பார். ஆமாம் உன் சிம் கார்டு எங்கே?
என் பேக்லே இருக்கும்.
'திறக்கலாமா உன் பேகை' என்று கேட்டவனுக்கு புன்னகையுடன் அவள் அனுமதி கொடுக்க அதை திறந்தவனின் கண்ணில் பட்டது அவளது ஓட்டுனர் உரிமம்.
அதை பார்த்தவன் சில நொடிகளில் சட்டென மலர்ந்து போன முகத்துடன் கேட்டான் 'ஹேய் இன்னைக்கு உன் பிறந்தநாளா?
ஒரு நொடி திடுக்கிட்டு திகைத்தவள் புன்னகைத்து தலையசைத்தாள் 'ம்'
தவித்தே போனான் வசந்த். 'ஹேய் எனக்கு தெரியாதுடா. சொல்லிருக்கலாமில்லே நீ? போன் பண்ணானே அந்த இடியட் அவனும் சொல்லலை பார். ச்சே..என்றவன்,
அய்யோ கண்ணம்மா.. என்றபடி அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு சொன்னான் ' மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் அர்ச்சனா. நீ எப்பவும் சிரிச்சிட்டு சந்தோஷமா இருக்கணும்'
நெகிழ்ந்து போய் சொன்னாள் அர்ச்சனா 'தேங்க்ஸ் வசந்த்'
இரு இன்னமும் டைம் இருக்கு ஏதாவது செய்யலாம் நகர்போனவனின் கையை பற்றிக்கொண்டாள் 'எதுவும் வேண்டாம். யாருக்கும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்.'
ஏண்டா?
'வேண்டாம் வசந்த். எனக்கு என்னமோ கூச்சமா இருக்கு. இப்பதானே இங்கே வந்திருக்கேன். அடுத்த வருஷம் எல்லாருக்கும் சொல்லிக்கலாம்.
இதிலே என்ன கூச்சம் அர்ச்சனா?
ப்ளீஸ் வசந்த். நிஜமா இந்த வருஷ பிறந்தநாள் நான் ரொம்ப சந்தோஷமா ஒவ்வொரு நிமிஷமும் என் வசந்தோட ரசிச்சு ரசிச்சு கொண்டாடி இருக்கேன் தெரியுமா? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு இது போதும்.
.லூஸுடி நீ' என்றான் அவன்.
ஆமாம் போ. அப்படியே இருந்திட்டு போறேன். எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு .சிரித்தாள் அர்ச்சனா.
மனம் கேட்கவில்லை அவனக்கு. யாரிடமும் சொல்லவில்லை என்றாலும் அவளுக்காக புடவை, இனிப்புகள் என என்னென்னவோ வாங்கிக்கொண்டு வந்தான்'. திரும்ப திரும்ப அவள் அறைக்கு வந்து மறுபடி, மறுபடி வாழ்த்திக்கொண்டே இருந்தான் அவளை. அவனுடைய தவிப்பையும், நேசத்தையும் ரசித்துக்கொண்டே இருந்தாள் அர்ச்சனா.
மாலையில் சட்டென நினைவு வந்தவளாய் அப்பாவை அழைத்தபோது அவர் சரியாக பேசவில்லை. அப்பாவை மறந்துட்டே இல்லையா நீ? என்று மட்டும் கேட்டார் அவர்.
இல்லைப்பா....நான்
'எனக்கு உன்னை விட்டா யாரும் கிடையாது மா ஞாபகம் வெச்சுக்கோ.' அவர் வார்த்தைகள் அவளை என்னவோ செய்தது.
அப்போது அவர் மனநிலை சரியாக புரியவில்லைதான் அவளுக்கு,
அது புரிந்தது மனோ திருமணம் முடிந்து பத்து நாட்கள் கழித்து. அன்று அவள் அலுவலகத்திலிருந்து வந்தபோது நெஞ்சு வலியில் துடித்துகொண்டிருந்தார் அப்பா..
மனம் முழுவதும் பதற, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழி முழுவதும் புலம்பிக்கொண்டே வந்தார். எல்லாம் முடிஞ்சு போச்சு. என் அண்ணன் கூட என்னை விட்டு போயிட்டான்.
அதற்கு முன் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை அவளுக்கு
அப்பா என்னாச்சுபா.?
முடிஞ்சு போச்சு. எனக்கும் அவனுக்கும் இனிமே பேச்சு வார்த்தை இல்லை.
பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் எதுவும் வாக்குவாதமோ? யோசித்தபடியே இருந்தாள் அர்ச்சனா.
'நீயும் போயிடு என்னை விட்டு வசந்தோட போயிடு. நான் உங்க அம்மா போன இடத்துக்கே போயிடறேன்.' வலியில் துடித்தபடியே புலம்பிக்கொண்டிருந்தார் அப்பா.
'அப்பா கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா.' அவரை மருத்துவமனையில் சேர்த்த பிறகு அர்ச்சனாவின் மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் திரும்ப திரும்ப தோன்றிக்கொண்டிருந்தது.
நான் என் அப்பாவை தூக்கி எறிந்துவிட்டு வசந்துடன் சென்று விட்டால் அவரால் நிச்சியமாக தாங்க முடியாது.
என் அம்மா என்னை விட்டு போனது என் ஐந்தாவது வயதில். அந்த நிமிடத்தில் இருந்து தன் ஆசைகளை எல்லாம் எனக்காக துறந்தவர் என் அப்பா. எனக்காக இன்னொரு திருமணம் கூட செய்யாமல் வாழ்ந்தவர் அவர். என் திருமணத்திற்காக நான் அவரை தூக்கி எறிந்து விட்டு செல்வது எந்த வகையில் நியாயம்?
மனம் மெல்ல மெல்ல ஒரு முடிவுக்கு வந்தது. எல்லாம் முடிந்து போனது போல் தோன்றியது. அதன் பிறகு மனோவிடம் கூட பேசவில்லை அவள்.
அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு வசந்துக்கு எழுதினாள் அந்த கடிதத்தை.
தலையை குலுக்கிக்கொண்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டு, தனக்குள்ளே திரும்பவும் சொல்லிக்கொண்டாள் 'என் அப்பா தவறு செய்திருக்க மாட்டார்.'
மறுநாள் ஞாயிற்றுகிழமை காலை அர்ச்சனா குளித்து உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தபோது தட்டப்பட்டது அவள் அறைக்கதவு.
வாசலில் புன்னகையுடன் நின்றிருந்தான் விவேக் ' குட் மார்னிங்'
நட்பான புன்னகையுடன் சொன்னாள் 'குட் மார்னிங்'
மேடம் ஒரு நிமிஷம் கீழே வரீங்களா? உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க.