அவள் தலையை இதமாய் வருடிக்கொடுத்தவர் அவள் முகத்தை ஏந்திக்கொண்டு சொன்னார் 'இந்த ஒரு வார்த்தை போதும்டா. சந்தோஷமா இருக்கு அப்பாவுக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ கவலைப்படாதே அசத்திடுவோம் உங்க கல்யாணத்தை ,'
தேங்க்ஸ்...பா... துள்ளியே விட்டிருந்தாள் அபர்ணா. மனம் நிறைய சந்தோஷத்துடன் அப்படியே உள்ளே ஓடி, தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டவளின் முகம் சிவந்து சந்தோஷத்தில் மிளிர்ந்தது.
மனம் மகிழ்ச்சியில் நிறைந்து போயிருக்க, உணர்வுகளின் எல்லையில் ஊஞ்சலாடிக்கொண்டிக்கொண்டிருந்தாள் அபர்ணா. தனக்குதானே சிரித்துக்கொள்வதும் தன்னைத்தானே கண்ணாடியில், பார்த்து ரசித்துக்கொள்வதும், கட்டிலில் வந்து அமர்வதும், ஜன்னலின் அருகே சென்று நிற்பதும், மறுபடியும் கண்ணாடி முன் சென்று நிற்பதுவுமாக ஏதோ ஒரு சந்தோஷ உலகத்தில் மிதந்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.
அதே நேரத்தில் சென்னையில் மருத்துவமனையில் அறையை காலி செய்யும் போது எல்லா பொருட்களையும் எடுத்து பையில் அடுக்கி சரிப்பார்த்துக்கொண்டு, மேஜையின் பக்கம் திரும்பியவன் ஒரு நொடி திடுக்கிட்டு போனான். அங்கே இருந்தது விஷ்வாவின் அக்சஸ் கார்டு.
அதை கையில் எடுத்தவனின் கண்கள் கோபத்தில் விரிந்தன. ' அவன் இங்கே வந்திருந்தானா என்ன?
நேத்து உன்னை பார்த்தது போலே இருந்ததுப்பா அத்தையின் கேள்விக்கான பதில் சட்டென கிடைத்தது அவனுக்கு.
அவன் பார்வை மெல்ல மெல்ல இந்துவை சென்று அடைய, அவன் அதை பார்த்ததை கவனித்து இருந்தவள், செய்வது அறியாது திகைத்து போய் நின்றிருந்தாள்.
எல்லாம் இவள் வேலையா? அதனால்தான் என்னிடம் எதையும் சொல்லவில்லையா? கோபம் தலைக்கேறியது அவனுக்கு. அவன் பார்வையே இந்துவை எரித்தது.
ஆனால் எதுவுமே பேசவில்லை பரத், அத்தையின் எதிரில் எதையுமே காட்டிக்கொள்ள விரும்பவில்லை அவன். பேசாமல் அந்த கார்டை தனது பாக்கெட்டில் திணித்துக்கொண்டு நகர்ந்தான் அவன். அதிர்ந்து போய் நின்றிருந்தாள் இந்து.
வீட்டை அடைந்த பிறகும் எதுவுமே பேசவில்லை பரத். குழப்பத்தின் எல்லையில் இருந்தாள் இந்து.
பரத்தின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தப்படியே இருந்தாள் அவள். அந்த கார்டை எடுத்து தனது பீரோவின் உள்ளே வைத்து அவன் பூட்டியதையும் கவனித்தாள் இந்துஜா.
அவளை நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை பரத். ஏதாவது சொல்லி திட்டி இருந்தால் மனம் கொஞ்சம் ஆறிப்போயிருக்கும் அவளுக்கு.
'அண்ணா...உன்னை ஏமாற்றும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. நீ எனது உயிர். அதே நேரத்தில் என் விஷ்வாவுக்கு கொஞ்சமேனும் சந்தோசம் கிடைத்துவிடாதா என தவிக்கிறேன் நான்.' அவனிடம் சொல்லிவிட துடித்தது அவள் மனம்.
அவன் முன்னால் சென்று பேசும் தைரியம் தனக்கு நிச்சயமாய் இல்லை என்று தான் தோன்றியது இந்துவுக்கு.
ஞாயிற்றுக்கிழமை பொழுது ஒருவாறு கழிந்து விட்டிருந்தது. விஷ்வாவுடன் போனில் கூட பேசவில்லை இந்து.
திங்கட்கிழமை காலை விடிந்திருந்தது. அத்தையின் உடல் நிலை கொஞ்சம் தேறி இருந்தது. அன்று அவருடனே இருப்பதற்கு விடுப்பு எடுத்துக்கொண்டிருந்தாள் இந்துஜா.
அன்று பரத்துக்கும் விடுமுறை என்று தெரியவில்லை அவளுக்கு. அவன் எங்கோ வெளியில் கிளம்பி செல்ல, கல்லூரிக்குதான் சென்றிருக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள் இந்துஜா.
காலை எட்டரை மணிக்கு அலுவலகத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தான் தனது அக்சஸ் கார்டை தேட துவங்கினான் விஷ்வா.
திடீரென்று அதை மருத்துவமனையில் விட்ட ஞாபகம் வந்தது அவனுக்கு, சில நிமிட யோசனைக்கு பிறகு கைப்பேசியில் இந்துவை அழைத்தான் விஷ்வா.
'ம். சொல்லு' என்றாள் அடிக்குரலில்.
என் அக்சஸ் கார்டை மறந்திட்டேனா அங்கே.?
'நல்லா மறந்தே போ. இப்போ அது எங்க அண்ணன் கையிலே இருக்கு.' என்றாள் இந்து.
அய்யோ! என்றான் விஷ்வா. ஏதாவது பிரச்சனையாடா.?
எதுவும் இல்லை. அண்ணன் எதுவுமே பேசலை. சரி இப்போ உனக்கு அக்சஸ் கார்டு வேணுமா?
ஆமாம். அது இல்லைனா ஆபிசுக்குள்ளே நுழைய முடியாது.
வேற புதுசா வாங்க முடியாதா?
'வாங்கலாம். அது ஒரு பெரிய procedure. நாலு பேர்கிட்டே பல்லைக்காட்டணும், ரெண்டு பேர்கிட்டே பாட்டு வாங்கணும். சரி நான் மானேஜ் பண்ணிக்கறேன் விடு.' துண்டித்துவிட்டிருந்தான் அழைப்பை.
இத்தனை நடந்த பிறகும் அவள் மனம் விஷ்வாவுக்காக துடிக்கத்தான் செய்தது. அய்யோ! என் விஷ்வா கஷ்டப்படுவானே' திரும்ப திரும்ப தவித்தது அவள் மனம்.
'நடப்பது நடக்கட்டும்' என்ற முடிவுடன் மெல்ல பரத்தின் அறைக்குள் நுழைந்தாள் அவள். பரத்தின் பீரோ சாவியை எடுத்து அதன் கதவை திறந்தாள். 'சாரி அண்ணா...' வாய் விட்டு சொன்னவள் அந்த கார்டை தேடி எடுத்துவிட்டு , பீரோவை பூட்டினாள்.
தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு விஷ்வாவின் அலுவலகம் நோக்கி பறந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்குள் நுழைந்தான் பரத். வாசலில் இந்துவின் ஸ்கூட்டி கண்ணில் படாததே அவனுக்குள்ளே சுருக்கென்றது.
தனது அறைக்குள் வந்தான் பரத். அடுத்த நொடி அவன் கண்ணில் பட்டு தொலைத்தது அது. சரேலென விரிந்தன அவன் கண்கள்.
அவனது பீரோவின் பூட்டிலேயே தொங்கிக்கொண்டிருந்தது அதன் சாவி.
வாய்ப்பே இல்லை. அவன் அப்படி வீட்டு சென்றதாக சரித்திரமே இல்லை. யார் திறந்தார்கள் என் பீரோவை?
அவன் சந்தேகித்தது சரியாய் போனது. அவன் வைத்த இடத்தில் அந்த அக்சஸ் கார்டு இல்லை.
தலை முதல் கால் வரை கொதித்தது. கோபம் தலைக்கேறியது. 'எல்லாவற்றையும் விட என் தங்கை என்னை ஏமாற்றுகிறாள் என்ற எண்ணத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் விஷ்வாவின் அலுவலகம் நோக்கி பறந்தது அவன் பைக்.
விஷ்வாவின் அலுவலகத்தில் அவன் முன்னால் நின்றிருந்தாள் இந்து.
எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்கிற நீ.? என்றான் விஷ்வா.
எப்படியும் திட்டு வாங்கப்போறேன்னு முடிவாகிப்போச்சு. என்ன எங்க அண்ணனை ஏமாத்திட்டேன் அதுதான் மனசுக்கு ...... அவள் பேசி முடிப்பதற்குள்
இந்த அண்ணனை நீ அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாது செல்லம்..... குரல் கேட்டு இருவரும் அதிர்ந்து போய் நிற்க, அங்கே கோபத்தின் மொத்த உருவமாய் நின்றிருந்தான் பரத்.
அதே நேரத்தில் திருச்சியில் தனது கைப்பேசியில், விஷ்வாவின் தங்கையின் எண்ணை அழுத்தினாள் அபர்ணா.
ஹலோ...
ஹலோ! நான் விஷ்வாவோட friend அபர்ணா பேசறேன் நீங்க......
நான் அஸ்வினி பேசறேன் என்றது மறுமுனை...
தொடரும்...
{kunena_discuss:726}