பரத்தின் அமைதி அவனை நன்றாகவே குழப்பி விட்டிருந்தது .'அவன் இப்படி இருப்பவன் இல்லையே? என்னருகில் நின்று கொண்டிருந்தாளே இந்துஜா. அதைப்பார்த்தும் கூட கோபம் எழவில்லையா அவனுக்கு? இது எப்படி சாத்தியம்?
ஒன்றுமே பேசாமல் அவன் பார்த்துக்கொண்டே நின்ற காட்சி இன்னமும் விஷ்வாவின் நினைவை விட்டு அகலவில்லை.
என்ன சொன்னதாம் அவன் கண்கள்? நீ என்னிடம் தோற்கும் நாள் சீக்கிரம் வருமென்றா? ஏதாவது விளையாட்டு விளையாட திட்டம் போட்டிருக்கிறானா? இல்லை நான் தான் தேவை இல்லாமல் என் மனதை குழப்பிக்கொள்கிறேனா?
டி.வி.யை அணைத்து ரிமோட்டை சோபாவின் மீது எரிந்து விட்டு, பின்னால் சாய்ந்து கண் மூடிக்கொண்டான்.
'எது நடந்தாலும் உன்னை நான் விட மாட்டேன். தைரியமா இரு.' அவன் இந்துவிடம் கொடுத்த வார்த்தையை மறுபடியும் தனக்குள்ளே உறுதியாக சொல்லிக்கொண்டான் விஷ்வா.
இந்துவும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் படுக்கையில் படுத்து புரண்டுக்கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில், வீட்டு மொட்டை மாடியில் உறக்கம் வராமல் நடைபயின்று கொண்டிருந்தான் பரத்.
விஷ்வா... அந்த பெயரை கேட்ட மாத்திரத்திலேயே தலை முதல் கால் வரை பற்றி எரிவது போலேதான் தோன்றும் பரத்துக்கு.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை விஷ்வா மீது இத்தனை கோபம் அவனுக்கு இருந்தது இல்லை தான்.
விஷ்வாவின் அப்பா இறந்த போது அவன் நடந்துக்கொண்ட விதத்தைகூட பரத்தால் புரிந்துக்கொண்டு மன்னித்து விட முடியும் தான். அது அவனது வலியில் வெடித்து தெறித்த வார்த்தைகள் என மறந்து விட முடியும்.
ஆனால் தனக்கு நேர்ந்த அந்த அவமானத்தை மட்டும் மறக்க முடியவில்லை அவனால்.
விஷ்வாவின் அப்பா இறந்து போய் ஒரு மாதம் கடந்திருந்தது.
அன்றும் இதே மொட்டை மாடியில் தான் அமர்ந்திருந்தனர் அத்தையும், அஸ்வினியும். பரத்தும் மாடி ஏறி வந்து அஸ்வினியின் அருகில் வந்து அமர்ந்தான்.
கொஞ்சம் சிலிர்த்து போனவராக இருவரையும் சில நொடிகள் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் அத்தை. பின்னர் சட்டென கேட்டு விட்டிருந்தார் அவர் 'நீ அஸ்வினியை கல்யாணம் பண்ணிக்கறியா கண்ணா?'
அதுவரை, அந்த நொடி வரை அப்படி ஒரு எண்ணம் அவன் மனதில் எட்டிக்கூட பார்த்தது இல்லை. சொல்லப்போனால் தனது திருமணம் பற்றி அவன் யோசித்ததே இல்லை.
மெல்ல திரும்பி அஸ்வினியின் முகத்தைப்பார்த்தான் பரத் கொஞ்சம் திடுக்கிட்டுப்போனவளாகத்தான் அமர்ந்திருந்தாள் அவள்.
அத்தையின் பக்கம் திரும்பியவன் 'என்ன அத்தை இப்படி திடீர்ன்னு கேட்டுட்டே? என்றான் சற்று தழைந்த குரலில்.
ஏன்டா? அத்தைங்கிற உரிமையிலே கேட்டேன். கேட்கக்கூடாதா?
அய்யோ.! அப்படி இல்லை அத்தை. இந்து இருக்காளே அவளுக்கு முன்னாடி நான் எப்படி அத்தை..... யோசனையுடனே கேட்டான் அவன்.
அவதான் எப்போ கேட்டாலும், வேண்டாம் வேண்டாம்ன்னு தள்ளி போட்டுட்டே போறாளே. என்ன சொன்னாளோ தெரியலை அவளை பார்க்க வந்த ரெண்டு மாப்பிளையும் ஒரு பதிலும் சொல்லலை.
பதிலில்லை அவனிடம்.
அவளுக்கு என்னடா? இப்போ நினைச்சாலும் ராஜா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பான். அஸ்வினி மாதிரியா....
அந்த வார்த்தையில் சட்டென வாடிப்போனது அஸ்வினியின் முகம். அந்த வாட்டத்தை ஏனோ பார்க்கவே முடியவில்லை பரத்தால்.
கண்ணா... உண்மையை சொல்லுடா. அவ கிட்ட இருக்கிற இந்த குறையினாலேதான் யோசிக்கறியா?
'அத்தை ப்ளீஸ்... ஏன் இப்படியெல்லாம் பேசறே. அவ நம்ம அஸ்வினி அத்தை. நான் சத்தியமா அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை' என்றபடி அஸ்வினியின் முகத்தை பார்த்தான். துவண்டு போயிருந்தது அவள் முகம். அது அவனை சுருக்கென தைத்தது.
அடுத்த சில நொடிகளில் ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அவன். அவள் மீதிருந்த நிஜமான பாசத்துடன், உறுதியான குரலில் சொன்னான் பரத் 'எனக்கு முழு சம்மதம்'
திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அஸ்வினி.
'அவகிட்டே கேளு அத்தை. அவளுக்கு சம்மதமான்னு. அவளும் முழு மனசோட சம்மதிக்கணும்'.
இருவரும் அவள் பக்கம் திரும்ப குரல் எழும்பவில்லை அஸ்வினிக்கு. அவள் மனதில் இருப்பதை புரிந்துக்கொள்ளும் திறமை அவனிடம் சத்தியமாக இல்லை.
'எந்த பிரச்னைனாலும் மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு இருக்கிறது ரொம்ப தப்பும்மா. பக்கத்திலே இருக்கிறவங்க கிட்டே, பெரியவங்ககிட்டே சொல்லணும் அப்போதான் அதுக்கு ஒரு வழி கிடைக்கும். இனிமே எப்பவும் இப்படி செய்யாதே. மனசிலே இருக்கறதை யார்கிட்டேயாவது சொல்லு. சரியா?' முன்பே ஒரு முறை அவளிடம் சொல்லி இருக்கிறான் அவன்.
தனது மனதில் இருப்பதை யாரிடமாவாது சொல்லி இருக்க வேண்டாமா அவள்.? சொல்லவில்லை. இந்த நிமிடம் வரை அவள் மனதில் என்ன இருந்தது என்று அவனால் ஊகிக்கவும் முடியவில்லை,
என்னமா? சம்மதமா? கேட்டார் மைதிலி.
'ம்.... ஆங்... ச... சரிம்மா....' இப்படிதான் வந்தது பதில்.
'இங்கே பாரும்மா. யோசிக்க டைம் வேணும்னா எடுத்துக்கோ'. சொன்னான் அவன். நீ மனசார சம்மதிக்கணும்.'
மெல்ல நிமிர்ந்து அம்மாவின் முகத்தை பார்த்தாள் அவள். அப்போது என்ன தோன்றியதோ? அம்.. மா சொன்னா சரி...
அடுத்த இருபதாவது நாள் திருமணம் என்று முடிவானது.
ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் என்பது பல கனவுகளை தோற்றுவிக்கக்கூடிய வைபவம்.
அப்படித்தான் இருந்தது பரத்துக்கும்.
அந்த பின் வந்த ஒவ்வொரு நொடியும் அழகாக இருந்தது போலே தோன்றியது அவனுக்கு. எப்போதுமே அஸ்வினியின் மீது ஒரு தனி பாசம் உண்டு அவனுக்கு, அவள் அன்பான குணத்தை எப்போதுமே ரசித்திருக்கிறான் பரத். ஒரு மனைவியாக அவள் பொழியும் அன்பு மழையில் நனைய காத்திருந்தது அவன் உள்ளம்.
அப்போது அவனுக்கு நண்பர்கள் அதிகம். ஒவ்வொரு நண்பனையும் நேரில் சென்று அழைத்தான் பரத்.
'விஷ்வாக்கும் சொல்லணும்டா கண்ணா' சொன்னார் அத்தை.
அத்தை அருகே அமர்ந்திருக்க விஷ்வாவை அழைத்தான் பரத்.
சில முறை முயற்சிக்கு பிறகே அழைப்பை ஏற்றான் அவன்.
'என்ன வேணும்?' இப்படித்தான் துவக்கினான் அவன்.
விஷ்வா .... எனக்கும் அஸ்வினிக்கும் கல்யாணம் முடிவாயிருக்குடா. அத்தை உன்கிட்டே பேசணும்னு சொன்னங்க.