இவன் பார்க்கவும் ஒற்றை விரலால் பத்திரம் காட்டினான் ரஜத். என் தங்கச்சி.... கோடு தாண்டுனா... உதட்டசைவில் ஒலியின்றி அவன் மிரட்ட கன்னத்தில் போட்டுக்கொண்டான் வியன்...
இன்னும் ஒருவருஷமா...? இன்னைக்கு முடிந்தது ஒலிம்பிக்காக இருக்கக் கூடாதா என்று தோன்ற தொடங்கியது அவனுக்கு.
கவினிடம் மிர்னா பேச நிராகரித்தது அவன் சொல்லாமலே வேரிக்கு தெரிந்தது. அவனது ஹாய் மிர்னாவிற்கு பின் அவன் பேசியது அவனது தம்பியிடம் அல்லவா? மனம் வலித்தது வேரிக்கு. ஏமாற்றமாயும் இருந்தது.
திரும்பி மிர்னாவை அழைத்து அவளுக்கு புரியும் வகையில் கவினை பற்றி சொல்ல வேண்டும் என்று ஒரு உந்துதல். ஆனால் அவளிடம் பேச இவள் முயற்சிப்பது கவினுக்கு இன்னும் வருத்தமாய் ஏன் கோபமாய் இராதா?
என்ன செய்வதென்று புரியாமல் கவினின் முகத்தைப் பார்த்தாள்.
ஒரு வினாடி திகைத்த அவன் முகம் தன் தம்பியிடம் உரையாடும் போதே இயல்புக்கு திரும்பி இருந்தது. இப்பொழுதும் இயல்பாய்தான் இருக்கிறது.
இவள் முகம் தான் வாடி இருந்தது.
தன் இருக்கையில் இருந்து எழுந்து எதிர் புறத்தில் நின்றிருந்த இவளிடமாக வந்தான் கவின். சோகமாக பார்த்தாலும் கூடவே அவன் அருகாமை தரும் படபடப்பையும் பார்வையில் ஏந்தி இருந்தாள் அவள்.
அவள் பின்புறமாக வந்தவன் அவள் தோள்களை ஆறுதலாக பிடிக்க அமைதியும் புயலும் அவளுக்குள்.
அசையாமல் நின்றாள். விழி மூடிக் கொண்டாள். இதய ஒலி உணர்ந்தாள்.
“வியனுக்கும் மிர்னாவுக்கும் மேரேஜ் ஆகிறப்ப இதெல்லாம் சால்வ் ஆகி இருக்கும்...” ஆறுதல் சொல்லும் தொனியில் ஒரு துள்ளலான குரலில் கவின் சொன்ன இந்த வார்த்தைகள் காதில் விழ .
சட்டென அவன் புறமாக திரும்பி பார்த்தாள் வேரி.
அப்படி ஒரு ஆச்சர்யம் அவள் உடல் மொழியில்.
“ஹப்பா ...என்ன பெரிய முட்டகண்ணு...” அவன் பார்வை மட்டுமல்ல அவன் ஒற்றை விரலும் அவள் கண்ணை தொட்டு சுற்றியது. அவன் அருகாமை தொடுகை தடுமாறச்செய்ததைவிட அவன் சொன்ன செய்தியின் தாக்கம் அவளிடம் அதிகமாய் அலையடிக்க
அவள் முகம் தொட்ட அந்த ஒற்றை விரலை தன் வலகை பிடிக்குள் சிறை செய்தவள் “நிஜமாவா? “ என முழு விழி விரித்து கேட்க. கேள்வியின் முடிவில் மூடாமல் சற்றே திறந்திருந்த அவள் இதழ்களில் நின்றது அவன் பார்வை.
“ஹனின்னு உனக்கு ரொம்ப கரெக்டா பேர் வச்சிருக்காங்க குல்ஸ்....” இந்த வார்த்தைகள் அவள் மனம் தொடவில்லை. முந்தைய செய்தியின் தாக்கம் அப்படி.
அவள் உதடுகளை நோக்கி நீண்டது அவனது மறு கையின் ஆட்காட்டி விரல்.
பேச்சு வேகத்தில் குறுக்காக வந்த அவனது இந்த விரலையும் தன் இடக்கைக்குள் பிடித்து வைத்துக் கொண்டாள்.
“நிஜமாவா சொல்றீங்க....மிர்னா...அவ சம்மதிக்கனுமே...அவளுக்கு கல்யாணமே பிடிக்காதே...” பட படத்துக் கொண்டிருந்தாள் வேரி. உள் மனதில் ஓர் பேராவல்.....
“அதெல்லாம் மிர்னாவுக்கு இஷ்டம்தான்...பட் இப்ப ஒலிம்பிக் வரை எதுவும் வேணாம்னு வியன் நினைக்கிறான். நீயா இதை பத்தி மிர்னாட்ட சொல்லிடாத...தேவை இல்லாம அவ மனசை கலைக்க வேண்டாம்...”
இறக்கையில்லாமல் பறப்பது போல் இருந்தது ஒரு கணம் வேரிக்கு. பின் மீண்டும் முகம் வாடிவிட்டது.
சில மணி நேரம் முன்புதான் மிர்னா வியன் விபத்து தொடங்கி ஊர் பஞ்சாயத்து வரை அவர்களுக்கு நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி இருந்தான் கவின். இதில் இந்த கல்யாணம்....???
“என்னாச்சுடா?” அவள் முக மாற்றத்தைப் பார்த்து கேட்டான் கவின்.
“அது...அது ....அத்தையும் மாமாவும்....தப்பா எடுத்துகிடாதிங்க...குறை சொல்றதா இல்ல....ஆனா அவங்களுக்கு எங்கள பிடிக்காதுதான....நானே அவங்க இஷ்டம் இல்லாம உள்ள வந்து இருக்கேன்...இதுல மிர்னா ...அவள எப்படி ஒத்துப்பாங்க....? ஒரு மகன் கல்யாணம் தான் அத்தை மாமவுக்கு பிடிக்காத கல்யாணமாகிட்டு...அடுத்த மருமகளாவது அவங்களுக்கு பிடிச்சவங்களா வரனுமே... அத்தை மாமாவுக்கு பெண் குழந்தைங்க வேற இல்ல....எப்படியும் வயதான காலத்தில பொண்ணுங்க மட்டுமே செய்ய முடியுற சில ஹெல்ப் தேவைபடும்....மகளும் இல்லனா....மருமகள் தான அதெல்லாம் செய்ய முடியும்...அதுக்காகவாவது அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு மருமகளாவது வரனுமே.... அதோட என் அம்மா அப்பா கூட... “
பாசமாய் ஆசையாய் அதுவரை பார்த்துக்கொண்டிருந்தவன் முகம் இறுகியது.
“ஆங்...... அவங்க செய்தது ரொம்ப பெரிய தப்புதான்....நான் நியாயபடுத்தல...ஆனா எது எப்படியோ....நான் அவங்களுக்கு இல்லனு ஆகிட்டு...அவங்களுக்கும் முதுமை வரும்...படுக்கைல விழுந்தாங்கன்னா பார்த்துக்க மிர்னா மட்டுமாவது மிச்சமிருக்கனுமே...”
அவன் முகம் கனிந்திருந்தது.
“இங்க உங்க தம்பிய கல்யாணம் செய்து மிர்னாவை கூட்டி வந்துட்டு அப்பா அம்மா கூட சேர கூடாதுன்னுட்டா....? ஆனா மிர்னாவுக்கும் உங்க தம்பிக்கும் இஷ்டம்ங்கிறீங்க அதுவும் நடக்கனுமே...”
அவனது இரு கை ஆட் காட்டி விரலையும் தன் இரு கைகளாலும் பிடித்து வைத்துக்கொண்டு சற்றே முகம் சுருங்க அத்தனை பேரின் நன்மைக்காகவும் அவள் பேசிக்கொண்டிருக்க அருகிலிருந்தவன் மனம் அவள் புறமாக பலமாக சரிய அவன் விரல்களை பற்றி இருந்த அவள் இரு கைகளையும் தன் மற்ற விரல்களால் பிடித்தவன் அவளை தன் புறமாக மென்மையாக இழுத்தான்.
இதை எதிர்பாராதவள் மெத்தென அவன் மார்பில் வந்து விழ மெல்ல அவளை அணைத்தவன், அவன் முகம் நோக்கி சிறு மிரட்சியோடு விரிந்திருந்த அவள் கண்களில் இதழ் பதித்தான். பாசமாக தொடங்கியதுதான்...
அவன் பிடி இறுகியது.
மீண்டுமாய் அவள் முகம் நோக்கி குனிந்தவன் கண்ணில் மட்டுமல்ல கருத்திலும் பட்டது அவள் கண்கள். இன்று காலை போல் இறுக்கி மூடி இருந்தாள். மூடிய இமைகள் துடித்துக் கொண்டிருந்தன.
மெல்ல அவளை தன்னை விட்டு விலக்கினான்.
“சாரி...” அவன் சொல்ல இல்லை என்பதுபோல் இட வலமாக தலையாட்டினாள் வேரி.
“நீ இப்படியே லைஃபை கன்டின்யூ செய்யலாம்னு நினைக்கிற....ஆனா எனக்கு நீ முழுசா வேணும் குல்ஸ்....” சொல்லியவன் மன கண்களில் அவள் முந்திய இரவு தரையில் படுத்திருந்த காட்சி.
தன் இறுக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.
முழுதாகவா....?? உண்மை தெரிந்தால்....??
வியனின் நண்பன் ரஜத்தின் வீடை இவர்கள் அடையும் போது வாசலில் நின்றிருந்தனர் வீட்டில் இருந்த அனைவருமே.
அவர்கள் இவர்களை வரவேற்ற விதத்தில் ஒன்று தெரிந்துவிட்டது மிர்னாவிற்கு. இவர்கள் வீட்டில் தங்கி இருக்க நேரிட்டால் அந்த காலம் நிச்சயமாக கஷ்டமானதாக இராது அவளுக்கு.