என்ன தவம் செய்து விட்டேன் – 07 - புவனேஸ்வரி கலைச்செல்வி
" ஸ்வாசமே ஸ்வாசமே
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல "
என்று பாடிக்கொண்டே புது ஆபிசிற்கு போக தயாரானாள் வானதி. ஜீவாவிற்கு உடை அணிவித்துக் கொண்டே அவளை கவனித்த கவிமதுரா, இது நிஜம்தானா ? என்று எண்ணித் தன்னைத்தானே கிள்ளிக் கொண்டாள் ...
"ஸ்ஸ்ஸ் ஆ"
"அய்யயோ என்னாச்சு அண்ணி ?"
" இல்ல இது நீதான்னு என்னை நானே கிள்ளி பார்த்து டெஸ்ட் பண்ணினேன் வானதி "என்று சொல்லி மௌனமாய் சிரித்தாள் கவி ... வானதியோ அவள் அருகில் வந்து
" இவ்வளவு தானே ?சொல்லி இருந்தா நானே கிள்ளி இருப்பேன்ல "என்று சொல்லி அவளது கன்னத்தை கிள்ளி வைத்தாள் ...
" ஸ்ஸ்ஸ் அம்மா தாயே ..எத்தனை நாளாக உனக்கிந்த ஆசை ? இப்படி கிள்ளி வைக்கிறியே ?"என்று அலறினாள் கவிமதுரா ...
" ஹாஹஹா உங்களுக்கு ரொம்ப வலிக்கிதாக்கும் நம்பிட்டேன்டா சாமி "
" சரி வானதி , என்ன விஷயம் மேடம் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல "
" நிறைய காரணம் இருக்கே .. முதல் காரணம் என் ஸ்வீட் அண்ணி சிங்கத்தை பார்த்து பயப்படுற மாதிரி இல்லாமல் என் கிட்ட நெஸ்ட் ப்ரண்ட் ஆ இருக்கிறாங்க .. இரண்டாவது நான் படிச்சு உருப்படியாய் வேலைக்கும் போக போறேன். மூணாவது இந்த வீடு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு. நாலாவதுதான் எனக்கே புரியலை அண்ணி .. தூங்கி எழுந்ததில் இருந்து மனசுக்குள்ள ஏதோ இனம் புரியாத சந்தோசம். ஏதோ நல்ல விஷயம் தேடி வர்ற மாதிரி இருக்கு "
" உன் சந்தோசம் எனக்கும் நிறைய சந்தோஷத்தை தருது வானதி .. நீ சிரிச்ச ரொம்ப அழகு தெரியுமா ?"
" ஆனா நீங்க சிரிக்காம அழுதுகிட்டு இருந்தா கூட அழகுதான் அண்ணி "
"ஹா ஹா இன்னைக்குத்தான் வேலைக்கு போக போறேன் ..அதுக்குள்ள எனக்கு ஐஸ் வெச்சு ஜுரம் வர வெச்சிடுவ போல "
"வெவ்வேவ்வேவ்வே ....ஆமா நீங்க கெளம்பலையா ? "
" இதோ பத்து நிமிஷத்தில் வரேன் "என்று சொல்லி புன்னகையோடு தனதறைக்கு சென்றாள் கவிமதுரா...வானதி சொல்வது போல தனக்குமே இன்று ஏதோ நல்ல நாள் போல தோன்றியது ... கிரிதரன் வாங்கி தந்த அந்த புடவையை வருடினாள் .... பிறகு சொன்னது போலவே சரியாய் பத்து நிமிடங்களில் அந்த புடவையை அணிந்து , அந்த புடவையின் அழகுக்கே அழகு சேர்த்தாள் கவிமதுரா..
" வாவ் அண்ணி "
" ம்ம் ?"
" அப்சரஸ் மாதிரி இருக்கிங்க "
" நீயும்தான் "
" அடடே இதெல்லாம் பொய் ... நான் சொன்னதுக்காக திருப்பி சொல்லாதிங்க "
" ம்ம்ம்ம்ம் உண்மைய சொன்னா ஏற்றுக்கனும் ..."
"இருந்தாலும் நீங்க சொல்லுறது காதுக்கு குளிர்ச்சியா இருக்கு அண்ணி .. நாம ஒரு ஆட்டோ பிடிச்சிட்டு இதை தொடர்ந்து பேசலாம் " என்று சொல்லி கண்ணடித்தாள் வானதி ...
அங்கு தனது வீட்டில் ஆபிஸ் அறையில் அமர்ந்திருந்தான் கிரிதரன் ..
வானதியை ரயிலில் பார்த்தது தொடங்கி இப்போது வரை நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு பிரம்மிப்பாய் இருந்தது.. அன்று அவளை ரயிலில் பார்த்த தருணத்தை நினவு கூர்ந்தான்.. ஒரு புன்னகையுடன் அவர்களை கடந்து நடந்த கிரிதரன், கவிமதுராவை பார்த்ததும் ஆணி அடித்ததை போல அங்கேயே நின்றான். திகைப்பில் அவன் விழிகள் கலங்கி இருந்தது.
" மதுரா " என்று மெல்லிய குரலில் அவன் முணுமுணுத்தது வானதிக்கு கேட்டுவிட கேள்வியை அவனைப் பார்த்தாள் அவள் .. என்ன நினைத்தானோ , அவள் வாழ்வில் தன்னால் எந்த பிரச்சனையும் வரவே கூடாது என்று எண்ணியவனாய் அவர்களை கடந்து நடந்தான் கிரி .. அவன் திரும்பி நடக்கும்போது மதுராவும் கண் விழிக்க, குழந்தையை அவள் கைகளில் திணித்துவிட்டு அவன் பின்னால் போனால் வானதி ..
" கவிமதுராவை உங்களுக்கு எப்படித் தெரியும் ?" என்று கேள்வியிலேயே பேச்சைத் தொடங்கினாள் வானதி .. அவள் குரல் கேட்டு தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு ..
" நீ ... நீ .... நீங்க ?"
" நான் அவங்களுடைய சிநேகிதி "
" ........"
" அவங்களை எப்படி தெரியும்னு உங்களை கேட்டேனே ?"
" யாருங்க கவிமதுரா ?" என்று எதுவுமே தெரியாதது போல கேட்டான் கிரி ..
" இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு பெண்ணை பார்த்து கண் கலங்கி நின்னிங்களே ..அவங்கதான் கவிமதுரா " என்றவளின் கண்கள் தீர்க்கமாய் உண்மையை தெரிந்துகொள்ளும் ஆவலில் இருந்தது ..
" எனக்கு அவங்களை தெரியாது ,...நீங்க தப்பா புரிஞ்சு இருக்கீங்க "
"ஓஹோ .. ஓகே .. ஐ எம் சாரி ..நான் வரேன் " என்று எழுந்தாள் வானதி ... அவள் யார் என்று தெரியாமல் தங்களைப் பற்றி கூறும் எண்ணம் கிரிதரனுக்கு எழவில்லை .. மனதால் விரும்பிய பெண்ணை எத்தனை ஆபத்து சூழ்ந்தாலும் அதிலிருந்து அவளை பாதுகாப்பவன் மட்டும் காதலன் அல்ல .. அவளுக்கு எந்தவொரு ஆபத்தும் வாராமல் பார்த்துக் கொள்பவன் தான் உண்மையான துணைவன் ..தன்னால் அவளது வாழ்வில் புயல் வீசிவிட கூடாதே என்றஞ்சி அமைதியை இருந்தான் கிரிதரன் .......
" ஆனா, உங்களுக்கு அவங்களை பத்தி தெரிஞ்சு இருந்தா நல்லா இருக்கும் சார் ... பாவம் அவங்க லைப் ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க ! அவங்க லைப் ல ஒரு நல்லது பண்ணிட முடியாதான்னு நான் ஏங்கி கிட்டு இருக்கேன் " என்றவள் பெருமூச்சுடன் திரும்பி போக
" ஏன் மதுராவுக்கு என்னாச்சு ?" என்று துடித்தான் கிரிதரன் .. அவனது அலைபாயும் விழிகளை அமைதியாய் பார்த்தபடி அமர்ந்தாள் வானதி ....
" அவங்க இப்போ என் பொறுப்பு ... அவங்களை பற்றி எல்லாத்தையும் நான் தெரியாதவங்க கிட்ட எப்படி சொல்ல முடியும் சார் ? அதான் நீங்க யாருன்னு கேட்டேன் " என்றாள் வானதி கைக்கட்டி..
பதில் ஏதும் பேசாமல் தனது செல்போனில் இருந்த போட்டோவை காட்டினான் கிரிதரன்.. இளமஞ்சள் சேலையில் கவிமதுரா தேவதையாய் மிளிர்ந்தப்படி கிரிதரனை காதலுடன் நோக்க, சிரிக்கும் விழிகளுடன் அவள் விரல் பற்றி மோதிரம் அணிவித்திருந்தான் கிரிதரன் ..
" அண்ணி" என்று வாய்விட்டு திகைத்தாள் வானதி ..
" அண்ணியா ?? அப்போ நீங்க ?"
" என் அண்ணா தான் கவிமதுராவை கல்யாணம் பண்ணியவர் .. இப்போ அவர் உயிரோடு இல்லை .. " என்றாள் வானதி ..
" என்ன சொல்றிங்க ??? உங்க அண்ணன் ஆர்மி ...."
"ஆமா .... என் அண்ணா ராணுவ வீரன் தான் .... கொஞ்ச மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு சண்டையில் இருந்துட்டாரு .. "
"இது ...கவியுடைய அம்மா அப்பாவுக்கு தெரியாதா ? நான் அவங்களை கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தப்போ கூட அவளை பத்தி எந்த செய்தியும் கிடைக்கலன்னு சொன்னாங்களே !"
" அண்ணியுடைய அம்மா அப்பா எங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா ????? " என்று விழிகள் பளபளக்க வினவினாள் வானதி ..