நீ சாப்பிடு முதலிலே....
நான் சாப்பிடறேன் நீ போ... அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சாரை நான் கவனிச்சுக்கறேன். நீங்க கிளம்புங்க. அங்கே எல்லாரும் உங்களை வலை வீசி தேடிட்டு இருக்காங்க.... என்றாள் இந்து..
'தேங்க்ஸ்டா செல்லம்'. இந்துவின் கன்னத்தை செல்லமாய் தட்டி விட்டு நகர்ந்தாள் அபர்ணா.
.அவன் தோள்களை பிடித்து தள்ளிக்கொண்டு டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள் இந்து டைனிங் ஹாலில் சென்று அவனை அமர வைத்தாள் அவள்.
அவன் அருகில் அமர்ந்தவள் மெல்ல சொன்னாள் 'ரொம்ப சந்தோஷமா இருக்கு விஷ்வா.'
அவனது புன்சிரிப்பே அதற்கு பதிலானது.
'என்னடா இவ கூட நம்ம கிட்டே இதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலியேன்னு நினைக்கறியா விஷ்வா?
ம்? திரும்பினான் விஷ்வா.
எல்லாருக்கும் பயம்தான் விஷ்வா. நீ இதை எப்படி எடுத்துப்பியோன்னு. அதுவும் எனக்கு ரொம்ப கவலை
என்ன கவலை?
'ஒரு வேளை நீ வெட்டு குத்துன்னு இறங்கி இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னா அதுக்கப்புறம் நான் எங்க அண்ணன் கல்யாணத்துக்குன்னு வாங்கி வெச்சிருக்கிற காஸ்ட்யூம்ஸ் எல்லாம் வேஸ்ட் ஆயிடுமேன்னு ஒரே கவலை. போன கல்யாணத்திலேயாவது நீ வர்றதுக்குள்ளே நான் பட்டு புடவை எல்லாம் கட்டிட்டேன்..... முகத்தை படு தீவிரமாக வைத்துக்கொண்டு இந்து சொல்ல சட்டென சிரித்தே விட்டிருந்தான் விஷ்வா.
அவன் சிரிப்பில் இணைந்துக்கொண்டாள் இந்து. 'இப்படியே சிரிச்சிட்டே இரு விஷ்வா எப்பவும்' தன்னக்குள்ளே சொல்லிக்கொண்டாள் அவள்.
திருமண வரவேற்பு துவங்க இருந்தது. விஷ்வா மேடையின் கீழே அமர்ந்திருக்க, எளிமையான அலங்காரத்தில் ஜோடியாக வந்தனர் பரத்தும் அபர்ணாவும்.
இந்துவும், அஸ்வினியும் அபர்ணாவின் பின்னால் வர, மேடையின் படியில் ஏறிய பரத் , அபர்ணா ஏறி வருவதற்காக அவளை நோக்கி கை நீட்டினான்.
அவள் பின்னால் நின்ற பெண்களின் கேலிக்கு இடையே முகத்தில் அழகான வெட்க பூச்சுடன் அவன் கை பற்றி மேடை ஏறினாள் அபர்ணா.
ஒளி வெள்ளத்தில் ஜொலித்த மேடையில், இருவரும் ஜோடியாய் நின்றிருக்க சில நொடிகள் இமைக்க மறந்துதான் போனான் விஷ்வா.
இதுவரை இப்படியெல்லாம் யாரையும் ரசித்ததில்லை அவன். தனது தோழிக்காகவே பிறந்தவன் இந்த கண்ணன் என்றே தோன்றியது அவனுக்கு. அவர்கள், சிரிப்பையும் பேச்சையும் மகிழ்ச்சியையும் பார்த்து அதில் கரைந்து போய் அப்படியே அமர்ந்திருந்தான் விஷ்வா.
வரவேற்பு முடிந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது தனது அருகே அமர்ந்திருந்த பரத்திடம் மெல்லக்கேட்டாள் அபர்ணா.
உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும்.
சொல்லுடா...
இல்லை. எனக்கு விஷ்வா ஒரு புடவை வாங்கிக்கொடுத்தான், நாளைக்கு முஹூர்த்ததுக்கு அதை கட்டிக்கவா?
மெல்ல திரும்பி அவளைப்பார்த்தான் பரத்.
இல்லை. உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம். ஆசையா வாங்கிக்கொடுத்தான் அதான் கேட்டேன்.
சில நொடி சிந்தனை பிறகு தெளிவாக பதில் வந்தது பரத்திடமிருந்து 'கட்டிக்கோ'
நிஜமாவா? கோபம் எதுவும் இல்லையே.
கோபமா? சான்சே இல்லை என்றான் புன்னகையுடன். நீ நல்லா இருக்கணும்னு மனசார நினைக்கிற friendடா அவன். அவன் வாங்கிக்கொடுத்தை கட்டிக்கிறது நல்ல விஷயம். கட்டிக்கோ.
மறுநாள் அதிகாலை நான்கு மணி. உறக்கம் கலைந்து கண்விழித்தாள் அபர்ணா. மெல்ல பார்வையை சுழற்றியவள் திடுக்கிட்டுப்போய் எழுந்து அமர்ந்தாள். எங்கே இருக்கிறேன் நான்?
அவள் இருந்தது பரத்தின் அறையில். அவள் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் பரத்.
'குட் மார்னிங்' அழகாக சிரித்தான் அவன்.
நான் எப்படி இங்கே வந்தேன்.? திகைப்புடன் கேட்டாள் அவள்.
நான்தான் தூக்கிட்டு வந்தேன். இன்னைக்கு நம்ம வாழ்க்கையிலே ரொம்ப முக்கியமான நாள். நான் தான் என் கண்ணம்மாவுக்கு first குட் மார்னிங் சொல்லணும்ன்னு தோணிச்சு. அதான் தூக்கிட்டு வந்திட்டேன். எப்படி உனக்கே தெரியாம பூ மாதிரி தூக்கிட்டு வந்தேன் பார்த்தியா? கண் சிமிட்டி சொன்னான் பரத்.
அடப்பாவி... என்றாள் அவள். யாரவது பார்த்தா மானம் போயிடும்.
அதெல்லாம் எதுவும் போகாது. இனிமே யாரும் நம்மை எதுவும் கேட்க முடியாது.
உங்களுக்கு என்ன? இந்துவும் அஸ்வினியும் பார்த்தா நான் அவ்வளவுதான். அவள் எழுந்து அங்கிருந்து ஓட எத்தனிக்க அவளை வழி மறித்து தனது கைகளை அவளுக்கு மாலையக்கினான் ' குட் மார்னிங் சொல்லிட்டு போ கண்ணம்மா....'
அழகாக தலை குனிந்து சிரித்தபடி சொன்னாள் அபர்ணா 'குட் மார்னிங்'
மெல்ல அவள் நெற்றி முட்டினான். 'நான் உன்னை தூக்கிட்டு வரும்போது, என் கையிலே நீ தூங்கிட்டு இருந்தியா, அப்போ எப்படி இருந்தே தெரியுமா? நீ அழகுடா கண்ணம்மா...' அவள் முகத்துக்கு அருகே வந்து அவன் சொல்ல
யோவ்... வழி விடுயா நான் போகணும்... நாணத்துடன் அவனை தள்ளி விட்டு ஓடியே விட்டிருந்தாள் அபர்ணா.
சில மணி நேரங்கள் கழித்து, விஷ்வா வாங்கிக்கொடுத்த மினுமினுக்கும் பச்சை நிற புடைவையில், பூ மாலை மணக்க மேடையில் இருந்த பரத்தின் அருகில் வந்து அமர்ந்தாள் அபர்ணா.
பரத்தின் பார்வை வருடலில் கொஞ்சம் சிலிர்த்துப்போனாள் அபர்ணா.
சில நிமிடங்கள் கழித்து அவள் பார்வை மெல்ல அலைப்பாய்ந்தது விஷ்வாவை தேடி.
வழக்கம் போல் மேடையின் கீழே அமர்ந்திருந்தான் அவன். அவன் மனமெங்கும் அப்படி ஒரு நெகிழ்ச்சி.
தான் வாங்கிக்கொடுத்த புடைவையை உடுத்தி வந்து அவள் அமர்வாள் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை அவன்.
அவள் பார்வை விஷ்வாவை சென்று அடைய, அதே நேரத்தில் பரத்தின் பார்வையும் அவனை தொட்டது. அடுத்த நொடி அருகில் நின்றிருந்த இந்துவை அழைத்தான் பரத் 'விஷ்வாவை மேலே வரச்சொல்லு'
மேடையில் வந்து நின்றான் விஷ்வா. அவன் உள்ளமெங்கும் சந்தோஷ சாரல். தனது அருகில் நின்ற விஷ்வாவிடம் கேட்டாள் அபர்ணா 'புடவை நல்லா இருக்கா விஷ்வா?'
அவன் புன்சிரிப்புடன் தலை அசைக்க, 'உன் friend வாங்கிக்கொடுத்த புடவை நல்லா இல்லாம இருக்குமா?' விஷ்வாவின் முகத்தை பார்த்தபடியே மெல்ல கேட்ட பரத்தின் வார்த்தைகள் அவனை வியப்பில் மூழ்கடித்தன.
'இது நான் வாங்கிக்கொடுத்த புடவை என்று இவனுக்கு தெரியுமா? மனைவியின் நட்பை இதை விட அழகாக அங்கீகரிக்க முடியுமா? '
காரணம் ஆயிரம் இருந்த போதிலும் இதே மேடையிலிருந்து அவனை கீழே இறக்கியவன் நான் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனாலேயே நேற்றிலிருந்து இந்த மேடை மீது ஏறி வரும் எண்ணம் வராமல் கீழேயே அமர்ந்திருந்தேன். என்னை மேலே ஏற்றி நிற்க வைத்திருக்கிறானே இவன்.!!!!!!