காலையிலிருந்து செய்த பயிற்சிகள், மாலை வந்ததும் ஓய்வின்றி சமைத்து வீட்டை அலங்கரித்து என தொடர் வேலைகளின் காரணமாக படுத்த சில நிமிடங்களில் தூக்கம் வந்தது.
ஏதோ தோன்ற அறை வாசலைப் பார்த்தால் வியன் நின்றுகொண்டிருந்தான் இவளைப் பார்த்தபடி..
கண்களை கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தாள். உடனடியாக கை அனிச்சையாக உடை நேர்த்தியை உறுதி செய்தது.
இவள் எழுவதைப் பார்த்ததும் இவளை நோக்கி இயல்பாய் வர தொடங்கிய வியன் அவள் கைகள் உடையை சரி செய்ய தொடங்கியவுடன் நின்றுவிட்டான்...
“சாரி....உன்ட்ட கொஞ்சம் பேசணும்...” திரும்பி நடக்க தொடங்கினான். அவன் இவளை நோக்கி வருவதை பார்த்தபோது இவளுக்குள் எதுவும் தோன்றவில்லை என்றாலும், அவன் நின்று திரும்பிய அந்த நொடி அவளுக்குள் ஏதோ.....சிலீர்...கூடவே மனதில் ஒரு பதற்றம், விதமான பயம். தயக்கம்.
அவன் இவளை பெண்ணாய் உணரும் நேரம், இவள் ஹார்மோன்கள் பெண்மையின் உணர்வு எல்லைகளை தொடுகின்றதோ? அதை மனம் தடுத்து தற்காக்கின்றதோ?
ஏதோ புரிவது போல் இருந்தது. இருவரும் தான் ஒருவருக்கொருவர் என்று இதயத்தில் உறுதி கிடைத்தவுடன், இந்த உடல் செல்லும் திசை விபரீதமாயிருக்கிறதே....மனோ வேகத்தையும் விஞ்சுமோ இது?
இனி இவனிடம் விளையாடக் கூடாது.
அறையை விட்டு வெளியே வந்தாள்.
“சாரி...அப்பா பிஸினஸை தனியா சமாளிக்க கஷ்ட படுறாங்க அதனால ஒஃபிலியாவை ட்ரெய்ன் செய்துகிட்டு இருந்தேன்....பட் அது உனக்கு இப்டி கஷ்டமாகும்னு நினைக்கலை.... உன்னை அவாய்ட் செய்யனும்னு நான் எதுவும் செய்யலை...ஸ்டில் இனி இப்டி ப்ராப்ளம் ஆகாம பார்த்துக்க ட்ரை பண்றேன்...”
“ம்...தேங்க்ஃஸ்”
சின்னதாய் சிரித்துக் கொண்டான்.
அதன் பின்பு மாலை ஒஃபிலியாவை பார்க்க வரும் போது இவளிடமும் சிறிது பேசுவான். ஒஃபிலியா இவளுடன் பேச பழக இடைவெளியும் கொடுத்தான். அதோடு பெரும்பாலும் மிஹிரும் உடன் வருவான். கூட்டு கலந்தாய்வாய் பொழுதுகள் செல்லும்.
வியனின் அக்கறையும் அதேநேரம் வாழ்க்கை முறையில் இருக்கும் நேர்த்தியும் மிர்னாவுக்கு இன்னுமாய் புரிந்தது. இவளது விளையாட்டுதனத்தனத்தால் அதற்கு உலை வைக்க கூடாது என முடிவு செய்தாள்.
ஆக வியனின் பிறந்த நாளில் பெரிதான வம்பு எதுவும் செய்துவிடக் கூடாது என முடிவு செய்திருந்தாள் மிர்னா.
ஆனால் அப்படி வியன் நினைத்திருக்கவில்லையே....!!! மிர்னாவுடன் அவனது முதல் பிறந்த நாள்...இருவருக்கும் மறக்கமுடியாததாக இருக்க வேண்டாமா?
அங்கு கவின் வெளியே சென்றிருந்த நேரம், வீட்டிற்கு வந்திருந்த கடிதங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் வேரி. குழந்தைகள் ஆசிரமத்திலிருந்து வந்திருந்தது ஒரு கடிதம். கடிதம் அனுப்பும் அவசியம் என்ன?
பிரித்துப் பார்த்தாள். குழந்தை ஷர்மிலியின் 14 ஆம் நாள் நினைவு ஜெபக்கூட்டம். தலைகால் ஒன்றும் புரியவில்லை வேரிக்கு. அதிர்ச்சி...வேதனை...கண்ணீர்விட்டு அழுதாள் சிறிது நேரம்.
ஆனால் நேரம் செல்ல செல்ல மனதில் ஒருவித சமாதானம் வந்துவிட்டது. அக்குழந்தையின் பூமி வாழ்க்கை பாடுகள் முடிவடைந்துவிட்டன.
ஆண்டவர் அருகில் நிம்மதியாய் நோய் நீங்கி...முழு சுக பலத்துடன் அவளிருப்பாள் இனி.
ஆனால் இப்பொழுது மனம் குடையத் தொடங்கியது வேறு விதமாக. எத்தனை உயிராய் இருந்தான் கவின் அக்குழந்தையிடம். ஆனால் ஷர்மிலியின் மரணம் இவளிடமாக வந்து புலம்பும் அளவிற்கு கூட அவனை பாதிக்கவில்லையே...ஏன்?
இவள் தாங்கமாட்டாள் என்று தன் மனதை இவளீடம் மறைத்தானோ....? அப்ப்டியானல் ஒரு மனைவியாய் இவள் அவனுக்கு கொடுக்க வேண்டிய ஆறுதலை கவனிப்பை இவள் செய்யாது இருக்கிறாளோ?
அன்று கவின் வீட்டிற்கு வரவும் கடிதத்தை எடுத்து நீட்டினாள். வரவேற்பறையில் இவள் நீட்டிய கடிதத்தை கையில் வாங்கியவன் பிரித்து பார்த்துவிட்டு இவள் முகத்தைப் பார்த்தவன், அதை படித்த கடிதங்கள் வைக்குமிடத்தில் வைத்துவிட்டு, தன் சட்டையின் காலர் பட்டனை கழற்றியபடி தங்களது அறையை நோக்கி நடக்க தொடங்கினான்....
“ஃப்ரெஷப் செய்துட்டு வந்துடுறேண்டா....”
அறைக்குள் அவனிடமாக சென்றாள் “உங்களுக்கு கஷ்டமாவே இல்லையா கவிப்பா...”
திரும்பி இவள் முகம் பார்த்தவன் “கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்னு கேள்வி பட்டது இல்லையா?” என்றவன்
வாஷ்பேசினில் சென்று முகம் கழுவ தொடங்கினான்..” நல்லவங்க உயிரோடு வாழ்ற நாள் எல்லாம் கிறிஸ்துவுக்காக... அவரைப் போல அவங்களும் நல்லதிற்காக எப்படியும் சிலுவை தூக்க வேண்டி இருக்கும்...ஆனால் மரணம் அவங்களுக்கு ஆதாயம்...அதுவரை அவங்கபட்ட பாடுகள்லாம் முடிந்து நித்ய மகிழ்ச்சியை சொந்தமாக்குற நேரம் அது...அப்டி இருக்கப்ப கெட்டவங்க இறந்தாதான் அழனும்...ஏன்னா அவங்கதான் திருந்த இருந்த வாய்ப்பெல்லாம் முடிஞ்சு நரகத்துக்கு போறாங்க... ஷர்மிலிக்காக ஏன் அழனும்...?.ஒரு தப்பும் ஒருபோதும் செய்யவே முடியாத பூங்கொத்து அது...கொஞ்சம் மிஸ்ஸிங் ஃபீலிங் இருந்துது...பட் அவ என் கூட இருக்கிறதவிட ரொம்ப சந்தோஷமான இடத்துல இருக்கிறான்னு தோணியதும்... அதுவும் சரி ஆகிட்டு...ஷி இஸ் ஹப்பி தேர் நவ்...”
சொல்லி முடிக்கும் போது முகமும் கழுவி முடித்திருந்தான். அவன் பதில் அப்போதைக்கு ஏற்றுக்கொள்ளபட்டது வேரியால்.
வியனின் பிறந்த நாளுக்கு இரு தினங்களுக்கு முன்னதான காலைப் பொழுது. வழக்கம்போல் தன் பயிற்சிக்கென கிளம்பி நின்றாள் மிர்னா. மிஹிர் வந்து அழைத்துச் செல்ல வேண்டும்.
கார் வரவும் உள்ளே பார்த்தால் ஓட்டுனர் இருக்கையில் வியன் இருந்தான். அவ்வப்பொழுது இது நடப்பதுதான். இவள் தன் உடைமைகளூடன் உள்ளே ஏறி அமர்ந்தாள்.
“இன்னும் ஒரு மணி நேரம் யார் பேசாம வர்றாங்களோ அவங்க தான் வின்னர்.” இவள் ஏறவும் மிஹிர் அறிவித்தான். அடுத்து ஒரு மணி நேரத்திற்குள் வாய் திறந்தால் அது எம் எம் இல்லையே.
இப்பொழுது டிக்கியில் எதையோ ஏற்றிவிட்டு ஒஃபிலியாவும் ஏறிக்கொண்டாள்.
காலையிலேயே இந்த குச்சி பூச்சி எங்க கிளம்புது...? சொந்த பெயரிலேயே கூப்பிட்டால் போரடிக்குல்ல...அதான் பெட் நேம் வச்சுகிடுறேன்னு பெர்மிஷன் கேட்டு ஒஃபிலியாவுக்கு மிர்னா வைத்திருக்கும் பெயர் தான் இந்த குச்சி பூச்சி....நட்பும் அந்த அளவுக்கு நெருங்கி இருந்ததும் காரணம்.
“சைகை பாஷையில் பேசினாலும் அவங்க லூசர்தான்..” அடுத்த சட்டத்தை மிஹிர் அறிவிக்க
மிர்னா கண்களை மூடிகொண்டாள். நல்லவேளை மனசுக்குள்ள பேசிகிட்டாலும் தோத்துட்டனு இவங்க ரூல் போடலை...காலையிலேயே விளையாட வேற கேமா கிடைக்கலை...இன்னும் ஒரு மணி நேரம் எப்படி மௌத்க்கு சிப் போடுறதாம்....?
சற்று நேரம் கழித்து ஓட்டைக் கண்விட்டு பார்த்தாள் மிர்னா. வழக்கமான பாதையில் செல்லாமல் கார் எங்கேயோ சென்றது.