" அவ முகத்தை பார்த்தா அப்படி தெரியல .. அவ நம்மள பார்த்துகிட்டே இருக்கா .. இந்த பையன் வேற எங்க போனான் தெரியல .. பாவம் இவ எப்படி தேடுறா பாருங்க ? அது என்னத்தான் பொண்ணுங்களை தவிக்க விடுறதில் ஆண்களுக்கு இன்பமோ " என்றார் மீராவதி ..
" ஆஹான் .. பேரக்குழந்தையை பார்க்க போகிற வயசுல என் மனைவி பெண்ணியவாதியாய் மாறிட்டாளா ? அதென்ன கண்ணம்மா , ஆணுக்கொரு நியாயம் , பெண்ணுக்கொரு நியாயம்ன்னு ? காதல்ன்னு வந்துட்டா ஆண் பெண் ரெண்டு பேருக்கும் சரிசம சந்தோசம் , சரிசம வலிதான் .. அது ஒன்னுமில்லைடா நீ எப்போ பார்த்தாலும் உன் புருஷன் தான் பெருசுன்னு நினைச்சு எனக்கே எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யறியா , அதான் உனக்கு அப்பபோ நம்ம பையனை பத்தியே மறந்துட போகுது .. தி கிரேட் காதலி மீராவதியின் தவப்புதல்வன் அவ்வளவு சீக்கிரம் காதலை விட்டுட்டு போயிருவானா ? அப்படியே கொஞ்சம் மேல எட்டி பாரேன் ! பக்கத்துல நின்னு சைட் அடிச்சா , கவிமதுரா கன்னத்தை பழுக்க வெச்சுடுவான்னு பயந்து உன் மகன் மேல்மாடியில் நின்னுகிட்டு சைட் அடிக்கிறான் " என்று சிரித்தார் கண்ணபிரான் .. கூந்தலை சரி செய்வது போல மெல்ல நிமிர்ந்த மீரா , மாடியின் ஓரத்தில் கைகட்டி நின்று கொண்டு கவிமதுராவையும் ஜீவாவையும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பதை கண்ணுற்றார் ..
" என் பையன்னா , என் பையன்தான் " என்று சிலாகித்து கொண்டது தாய் மனம் ..
" சரி நீங்க இப்படியே உங்க பையன் புராணத்தை பாடுங்க .. நான் என் மருமக கிட்ட பேசிட்டு வரேன் " என்று தனது இருக்கையில் இருந்து எழுந்தார் மீரா ..
" ஆல் தி பெஸ்ட் கண்ணம்மா " என்று மெல்ல வாழ்த்தினார் கண்ணபிரான் ..
" வானதி இவ்வளவு சந்தோஷமா இருந்து இப்போதான் பார்க்கிறேன் ..ரொம்ப நன்றி அருள் " என்றாள் கவிமதுரா உண்மையான மகிழ்வில் ..
" அட என்னங்க ஒரே குடும்பத்துல யாராச்சும் நன்றி சொல்லிப்பாங்களா ? நாம எல்லாருமே எப்பவும் சந்தோஷமாகத்தான் இருப்போம் .. என்ன சந்தோஷ் ?" என்று அவனையும் பேச்சில் இணைத்தான் அருள் .. அவனோ சட்டென அவனை முறைத்து
" ஏன்டா , நானே என் ஆளு அங்க தூரமா போயி உட்கார்ந்துட்டாளேன்னு இங்க உட்கார்ந்து சைட் அடிக்கிறேன் ..அது பொறுக்கலையா உனக்கு ? சரி சரி சொல்லு என்ன கேட்ட நீ ?" என்று சோகமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தான் .. கவிமதுராவும் அவனை பார்த்து சிரிக்க , அவன் சின்ன தலைஅசைவுடன் திரும்பி கொண்டான் ..
" மது அண்ணி ..மது அண்ணின்னு சுத்திட்டு இருந்த பையன் இப்போ எப்படி இருக்கிங்கன்னு கூட கேட்கலையே " என்று கலங்கியது அவள் மனம் .. அதே மனம் உடனேயே அதற்கு பதிலும் சொன்னது
" பின்ன,, நீ பண்ணின காரியத்துக்கு உன் காலில் பூ போட்டு வணங்குவாங்களா ?" என்று ! லேசாய் கண்ணீர் விழிகளில் எட்டி பார்க்க
" ஷ்ஷ்ஷ் என்னடா இது இப்படி பப்ளிக் பிளேஸ் ல அழுதுகிட்டு .. எங்க கவி இப்படி அழுமூஞ்சு இல்லையே " என்று கூறியவாறு அவள் விழிநீரை துடைத்தார் மீராவதி ..தன்னையும் மீறி
" அத்தை " என்று அழைத்து விட்டிருந்தாள் கவிமதுரா .. அருள்மொழிவர்மன் , ஆச்சர்யமாய் பார்க்கவும் வானதி விழகளினாலே சமிக்ஞை செய்ய அவனுக்கு ஓரளவு அங்கு நடப்பது புரிந்தது .. கவிமதுராவின் உச்சியில் மெல்ல இதழ்பதித்து அவளை அணைத்து கொண்டார் மீரா .. பலநாட்களாய் தேக்கி வைத்திருந்த பாரம் இறங்கியது போல அவரை இறுக்கமாய் பற்றிக்கொண்டு தேம்பினாள் அவள் .. மீராவின் விழிகள் தானாகவே மாடியில் இருந்த மகனை தேடியது .. தன் தர வேண்டிய அணைப்பும் ஆறுதலும் தன் தாயாராவது கொடுக்க முடிந்ததே என்ற திருப்தியில் கண்கலங்க புன்முறுவலுடன் " தேங்க்ஸ் அம்மா "என்று செய்கையிலே பேசினான் .. கண்களை அழுந்த மூடி திறந்து அவனுக்கு ஆறுதல் கூறியது தாயுள்ளம் ..
அதை கவனித்த கண்ணனின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் ..
" டேய் கண்ணா, இந்த நேரத்துல நீ இப்படி எமோஷனல் ஆகக்கூடாது " என்று தன்னைத்தானே சமாளித்து கொண்டார் .. கவிமதுரா அழுது முடிக்கும்வரை அவள் தோள்களை ஆதரவாய் வருடித்தந்தார் மீரா ... மெல்ல அவரை நிமிர்ந்து பார்த்தவள்
" உங்களை நிறைய கஷ்டபடுத்தி இருக்கேன் ..என்னை மன்னித்துவிடுங்க அத்தை "என்றாள் .. எந்த உரிமையில் அவரை அத்தை என்று அழைக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை . அவளை வாஞ்சையுடன் பார்த்தவர்
" நீயும் என் பொண்ணு மாதிரி தானே கவிதா ? நாங்கதான் உன்னை முதல்முறை பார்த்தபோதே சொன்னோமே , இந்த சம்பந்தம் நடந்தாலும் நடக்கலன்னாலும் நம்ம உறவு மாறாதுன்னு " என்றார் .. மெல்ல ஜீவாவின் பக்கம் திரும்பியர் ,
" உன் மகனாடா ?" என்றுபடி அவனை தூக்கி கொண்டார் .. அப்போதுதான் தனது நிலையையே உணர்ந்தாள் கவிதா .. இவ்வளவு நேரம் நடந்ப்தது அனைத்துமே அவளையும் மீறி நடந்த விஷயங்கள் ஆகின .. எப்படி எனது தீவலையில் இருந்து வெளிவந்தேன் நான் ? என்று தன்னைத்தானே கேட்டு கொண்டாள் .. அவளது முகமாற்றத்தை கவனித்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல் ஜீவாவுடன் விளையாட ஆரம்பித்தார் மீரா ..
" அடடே .. என்ன பார்க்கறிங்க ? பாட்டியை பாருங்க செல்லம் " என்று கைதட்டி குழந்தையை சிரிக்க வைக்க , கண்ணனும் அந்த ஜோதியில் இணைந்து கொண்டார் ...
" வாடா வாடா தங்ககுட்டி .. எப்படியோ என்னுடைய மோனாலிசாவை ஒரு நொடியில் பாட்டி ஆக்கிட்டியே " என்று சிரித்தார் ..
" பேரன் அப்படியே உன்னை மாதிரி இருக்கான் கவிம்மா " என்றார் கண்ணன் ..
" நல்லா இருக்கிங்களா மாமா ?"
" எனக்கு என்னம்மா , மீரா என் காலை தரையில் படாத அளவுக்கு பார்த்துகுரா .ஜம்முன்னு இருக்கேன் " என்றார் காதலுடன் ..
" போதுமே .. எங்க சந்து கிடைச்சாலும் மனைவியை பற்றி சிந்து பாடிவிடுவிங்களே " என்று சிரித்தார் மீரா .. இருவரையும் புன்னகையுடன் ரசித்தாள் கவிமதுரா ..
" உங்க காதல் இன்னும் மாறவே இல்லை மாமா " என்று மனதில் நினைத்ததை அப்படியே சொன்னாள் அவள் ..
"அதுதான் காதலின் மகிமை .. எப்பவும் மாறாது " என்று கண்ணன் சொல்லவும் , கவிமதுரா கிரிதரனை நினைத்து கொண்டாள் .. அவனும் இன்னும் மாறாமல் தான் இருக்கிறானா ? அப்படியே இருந்தாலும் அதனால் உனக்கென்ன வந்தது ? என்று கேட்டது உள்மனம் .. இருப்பினும் மனதில் இருக்கும் கேள்வி விஸ்வரூபமாக ,
" உங்க மருமகள் வரலையா மாமா " என்று கேட்டு வைத்தாள் அவள் .. மீரா ஜீவாவை கொஞ்சுவதுபோல திரும்பிக்கொள்ள
" வரும்போது கண்டிப்பா சொல்றேன் மா .. இப்பதான் அவன் கல்யாண பேச்சுக்கே பிடி கொடுக்குற மாதிரி இருக்கு .. பார்ப்போம்" என்று சொன்னார் .. அவரது பதிலில் ஏமாற்றமாய் உணர்ந்தாள் கவிமதுரா .. அது ஏனென்று அவளும் அறியாமல் இல்லை .. ஆனால் மனம் செல்லும் பாதை தவறென , அறிவு எச்சரிக்க சட்டென அந்த பேச்சை மாற்றினாள் ..
" எப்ப சென்னைக்கு வந்த கவிதா ?"
" ஒரு மாசம் ஆகி இருக்கும் மாமா "
" வேலைக்கு போறியா ?"
" ம்ம்ம் ஆமா , தெரிஞ்சவங்க கம்பனில தான் வேலை பார்க்கிறேன் .. "
" ஆனா , நீங்க இங்க இருப்பிங்கன்னு எதிர்ப்பார்கல மாமா .. தேனியில் தானே இருந்திங்க ?"
" தேனீ நம்ம சொந்த ஊரு .. ஆனா வியாபாரம் இங்கயும் இருக்கு அதான் "
"ம்ம்ம்ம் "
" விமலும் வித்யாவும் உன்னை தேடினாங்க கவிதா ... இப்பவும் தேடிட்டு தான் இருக்காங்க "
" தெரியும் மாமா .. என் நம்பிக்கையான ஒரு சிநேகிதி மூலமா அவங்களை நான் தூரத்தில் இருந்து கவனிச்சிட்டு தான் இருக்கேன் "