(Reading time: 30 - 59 minutes)

" அடடா இருக்குற கொஞ்ச நேரத்தில் ரொமான்ஸ்  பண்ணலாம்னு பார்த்தா , இப்படி போங்கு  பண்ணுறியே பொண்டாட்டி " என்றான் சந்தோஷ் ...அவன் இயல்பாய் பொண்டாட்டி என்றதும் அவளது உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தது .. இதழ்களில் கூட மெல்ல புன்னகை அரும்பியது ..

" குட் ... இப்போதான் நீ என் சத்யா " என்று அவளை பார்த்து கண்ணடித்தான் .. அதற்குள் அவர்கள் கார் அருகில் வந்திட

" மச்சான் நம்ம ஆளு பத்திரம் " என்றான் சந்தோஷ் ..

" அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம் ... நீ விட்ட ஜொள்ளுல எப்படி காரை கிளப்புறதுன்னு நானே கவலையா இருக்கேன் " என்றான் அருள் ..

" ஹா ஹா .. முதலில் காருக்குள்ள பாரு மச்சி .. நீ வானதியை பார்த்து விட்ட ஜொள்ளுல காரே நனைஞ்சிருக்கு .. குடைக்குள் மழை தெரியும் ..இதென்ன காருக்குள் மழையா ?"

" ஐயோ , சந்தோஷ் .,..ராஜா ..தெய்வமே .. மன்னிச்சு விட்டுடா .. நான் ரொம்ப சின்ன பையன் .. உன் மொக்கைய நான் தாங்க மாட்டேன் ..." என்று கண்களை உருட்டினான் அருள் ..

" சரி சரி பொழைச்சு போ ..." என்றவன் அர்ஜுன் சுமித்ரா சுஜாதா ரவிராஜ் அனைவரிடமும் பேசிவிட்டு பார்வையினாலேயே சாஹித்யவிடமிருந்து விடைபெற்றான் ..

" அடேங்கப்பா , நீதான் பழைய பஞ்சாங்கம்னு பார்த்தா சந்தோஷ் உன்னை தூக்கி சாப்பிட்டு விடுவான் போல .. பார்வையினாலே பேசிக்கிற மாதிரி இருக்கு " என்றான் அருள் கிண்டலாய் ..

" என்ன பண்ணுறது ? எல்லாருக்கும் உன்னை மாதிரி கள்ளத்தனமாய் காதலிக்க வருமா ?" என்றாள்  சாஹித்யா காட்டமாய் ..

" ஹே என்னடி பேச்சு  இது ?" என்று அதட்டினார் சுமித்ரா ..

" கத்துங்க அம்மா .. அது மட்டும்தானே உங்களுக்கு தெரியும் ? எல்லாம் அவன் பக்கம் சேர்ந்து நாடகம் நடிச்சு இருக்கீங்கல ? எனக்கு ஒரு சந்தேகம் நிஜம்மாகவே நான் இந்த வீட்டு பொண்ணுதானா ? சினன் சின்ன விஷயத்துக்கு எல்லாம் தலைமேல தூக்கி வெச்சு கொண்டாடிட்டு உங்க செல்ல பையன் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும்போது மட்டும் என்னை ஒதுக்கி வைச்சுட்டிங்க ?" என்றாள்  ஆற்றாமையுடன் ..

" சத்யாம்மா "

" நீங்க பேசாதிங்க அப்பா ... இவங்க மூணு பேரையும் கூட நான் சகிச்சுப்பேன் .. ஆனா , நீங்களாப்பா என்கிட்ட இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிங்க .. "

" சத்யா "

" அப்பா அவனை என்கிட்ட பேச வேணாம்னு சொல்லுங்க "

" நான் சொல்றத கேளு டி "

" பேசவேணாம்னு சொல்லுங்க அப்பா "

" சத்யா "

" அப்பா , நான் இப்போ காரில் இருந்து இறங்கணுமா ?" பிடிவாதமாய் கேட்டாள்  சாஹித்யா .. அவளுக்கு தான்  சளைத்தவன் அல்ல என்பதை காரோட்டும் வேகத்தில் காட்டினான் அருள் .. இதெல்லாம் எங்குதான முடியுமோ என்ற கவலையில் இருந்தனர் மற்ற நால்வரும் .. அவன் காரோட்டிய வேகத்தில் அடுத்த 10 நிமிடங்களில் வீட்டை அடைந்திருந்தனர் . காரிலிருந்து இறங்கியவள் விடுவிடுவென தனதறைக்கு  சென்று கதவை அறைந்து சாத்தினாள்..

" அருள் போயி அவகிட்ட பேசு " என்றார் ரவிராஜ்

" முடியாது அப்பா .. நான் பேச மாட்டேன் ..."

" என்னடா இப்படி ரெண்டு பேரும்  பிடிவாதம் பிடிச்சா என்ன அர்த்தம் ?"

" ஹான் , அவளுக்கு நான் சளைச்சவன் இல்லைன்னு அர்த்தம் "

" நம்ம மேலயும் தப்பு இருக்கு அருள் ...நாமதானே உண்மையை மறைச்சோம் " - சுஜாதா

" ஆமா அம்மா மறைச்சோம் .. ஏன் மறைச்சோம் ? மகாராணி கல்யாணமே வேணாம் .. இன்னொருத்தர் நம்ம வாழ்க்கையில் வந்துட்டா நாங்க பிரிஞ்சிடுவோம்னு பயந்தா .. அதுனாலத்தான் அவ கல்யாணமே வேணாம்னு இருந்தா .. அவளுக்கு இல்லாத வாழ்க்கை எனக்கு தொடங்கி  இருக்குன்னு நான் எப்படி சொல்லுவேன் ? அதுனாலத்தான் அவ மனசை மாத்துற வரை அமைதியா இருக்கணும்னு நினைச்சேன்... இது தப்பா ?"

" இத அவகிட்ட பொறுமையா சொல்லு அருள் "

" என்னை யாரும் வற்புறுத்த வேணாம் .. குட் நைட் " என்று அவனும் தனது அறைக்கு சென்று விட்டான் .. கண்ணீரோடு கட்டிலில் விழுந்தாள்  சாஹித்யா ..

" உயிருக்குயிராய் நினைத்து இருந்தவன் இப்படி உண்மையை மறைத்திருப்பன்" என்று அவளால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை ..

" நாங்க எப்பவும் பிரிய மாட்டோம் ..எங்களுக்குள் ஒளிவு மறைவு என்பதே இல்லைன்னு பெருமை பேசி என்ன பயன் ? நானும்தான் சந்தோஷை பற்றி ஆரம்பத்தில் மறைத்தேன் .. ஆனால் அவன் காதலை சொன்ன மறுநாளே நான்  அருள்கிட்ட உண்மையை சொல்லிவிடலையா ? ரெண்டு வருஷமா எப்படித்தான் அவனால இதை மறைச்சுகிட்டு என்னோடு பேச முடிஞ்சது .. நாம கல்யாணம் பண்ணிக்காம இப்படியே இருக்கணும்னு சொன்னபோதெல்லாம் மனசுல  வானதியை வெச்சுகிட்டுதான் நடிச்சனா ? ஆபிஸ்க்கு அவ வந்தபோது கூட என்னமோ அவளை தெரியாதமாதிரி பாவனை பண்ணினானே ! அப்போ அவ முதல் முதலில் செல்போன் ல அவனை அழைச்சது  கூட , தன்னுடைய காதலன் என்ற உரிமையில் தானா ? நான் முட்டாளாக்க பட்டுவிட்டேனா ?" பூமியே சுழல்வது போல இருந்தது அவளுக்கு .. சகலமும் அவன்தான் என்று இருந்ததாலோ என்னவோ அவனது சிறு (??) தவறை கூட அவளால் சகிக்க முடியவில்லை .. கண்ணீரும் வற்றி போய்விட அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுத்தவள் அந்த நினைவின் அயர்விலேயே உறங்கிவிட்டாள் ..

நடுஇரவில் வழக்கம் போல அவள் அறையின் ஜன்னல் வழியாக குதித்து உள்ளே வந்தான் அருள் .. அத்தனை மணி நேரம் தனியாய் இருந்ததின் விளைவாய் மனதிற்குள் எழுந்திருந்த கோபமெனும் தீ அடங்கி இருந்தது அவனுக்கு .. அவள் பக்கம் இருக்கும் நியாயம் புரிந்தது .. அவளுக்கு பிடித்த சாக்லேட்டை எடுத்து கொண்டு ஜன்னல் வழியாக ஏறி கொண்டிருந்தவனின் மனதில் கொஞ்சமாய் ஒட்டி இருந்த கோபமும் பறந்தே விட்டது .. எப்போதும் இப்படித்தான் இருவரில் ஒருவர் கோபமாய் அறையில் அடைந்து கொண்டால் மற்றொருவர் ஜன்னல் வழியாய் வந்து சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்தவது சகஜம் .. அந்த நினைவுகளில் புன்னகை மலர அவள் அறைக்குள் பிரவேசித்தான் ..உடைகூட மாற்றாமல் உறங்கி கொண்டிருந்தாள் அவள் .. அவள் கைபட்டு டி வி டி சிஸ்டமில் இருந்து அவளுக்கு பிடித்த பாடல் ஒலித்தது ... இந்த ரணகலத்துளையும் பாட்டு கேட்குதாடி உனக்கு என்று சிரித்து கொண்டான் ..அதுவும்

" நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?

பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா ?" என்ற வரிகள் ஒலித்தது .. மெல்ல அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை பார்த்தே அழுதிருக்கிறாள் என்று உணர்ந்திருந்தான்...

" எடுத்துக்கு எடுத்தாலும் இப்படி அழ கூடாதுன்னு எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டியா நீ " என்று மனதிற்குள் திட்டினான் .. மெல்ல அவள் கேசத்தை வருடினான் .. ஒரு மகளை தந்தை பார்ப்பது போல் வாஞ்சையுடன் அவளை பார்த்தபடி அமர்ந்தவன் ஏதேதோ சிந்தனையில் அமர்ந்தபடியே உறங்கினான் ..

மறுநாள், அருளின் மடியில் இருந்து கண் விழித்தாள்  சாஹித்யா .. அயர்வாய்  உறங்கியவள் எப்போது தலையணையை விட்டு அவன் மடிக்கு இடம் மாறினாள்  என்றே அவளுக்கு தெரியவில்லை .. கையில் சாக்லெட்டுடன்  அப்படியே உறங்கியவனை பார்த்ததும் முகத்தில் புன்னகை அரும்பியது .. எதற்காக  இந்த சமாதானம் என்று சட்டென நினைவு கூறவும் வந்த புன்னகை பாதியிலேயே நின்றது .. அவன் உறங்குவதற்கு தலையணையை தோதாய் வைத்தவள்  அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு பால்கனிக்கு வந்து போனை எடுத்தாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.