" உங்க யாரோடும் நான் பேச வேணாம்னு சொல்லலியே " என்றார் அவர் .. பேச்சு அனுவிடம் இருந்தாலும் அந்த கேள்வி தனக்குத்தான் என்று புரிந்தது அவளுக்கு ..
" ஒருவேளை, எந்த விதத்திலும் நீங்க அவளை நினைச்சு கவலை பட கூடாதுன்னு அவ இப்படி ஒதுங்கி இருக்கலாம் அங்கிள் .. இன்னும் ரெண்டு வருஷம் தானே அங்கிள் ? அதுக்கு பிறகு நாங்களே நினைச்சாலும் இப்படி சேர்ந்து இருக்க முடியுமா என்பது கேள்விகுறிதான் " என்றாள் அனு பவ்யமாய் .. மௌனம் சாதித்தார் ஜெனியின் தந்தை .
" எங்க சீனியர்ஸ்உம் அவங்க அம்மாவும் கூட இருக்காங்க அங்கிள் .. அன்னைக்கு ஹாஸ்ப்பிட்டலில் பார்த்திங்களே " என்று எடுத்து கொடுக்கவும் அன்றைய நாளை நினைவு கூர்ந்தபடி
" ம்ம்ம்"' என்றார் அவர் ..
" ஜெனியும் வந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு அங்கிள் ..அதான் " என்று பேசி முடித்து விட்டதுபோல மௌனம் காத்தாள் அனு .. அவரது பதிலுக்காக செவிகளை தீட்டி வைத்திருக்க
" சரி நானே கூட்டிட்டு வரேன் " என்று அவர் கூறி முடிக்குமுன்னே,
" அங்கிள் ஒரு நிமிஷம் " என்று இடைபுகுந்தாள் அவள் ..
" என்ன ?"
" உங்களை சீட் பண்ண விரும்பல அங்கிள் .. எல்லாரும் இருக்கும்போது , அங்கு கவீனும் இருக்கான்னு உங்களுக்கு நியாபக படுத்த விரும்பறேன் " என்று எடுத்து கொடுத்தாள் அவள் .. அசந்துதான் போனார் அவர் அனுவின் தைரியத்தில் .. எத்தனை பேருக்கு இப்படி தைரியம் வருமோ ? நண்பர்களின் பெற்றோரிடம் இது போன்று பேசிட ...
" சரிம்மா , நான் ஜெனியை அழைச்சிட்டு வரேன் " என்று மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை வைத்தார் ஜெனியின் தந்தை ..
" அனுவா அப்பா ?"
" ம்ம்ம் ஆமாம்மா "
" என்ன விஷயமாம் ?"
" அவங்க எல்லாரும் அவுட்டிங் போயிருக்காங்களாமே "
" ம்ம் தெரியும் அப்பா .."
" ஏன் என்கிட்ட சொல்லல ?"
' புரியல அப்பா ?"
" அவங்க உன்னை கூப்பிடலையா ?"
:" இல்லையே "
" ஏன் ?"
" நான் வரமாட்டேன்னு சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரியுமே " என்றாள் ஜெனி .. ஏன் என்று அவரும் கேட்கவில்லை .. எதற்கு என்று அவளும் சொல்லவில்லை .. ஆனால் அந்த மௌனத்தில் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறவேண்டும் .. மகளின் அருகில் வந்து , அவள் கேசத்தை பாசமாய் வருடியவர்
" ரெடி ஆகும்மா .. நானே உன்னை டிராப் பண்ணுறேன் " என்றார் ..
மெரினா கடற்கரை .. தங்களுக்கென்று இடம் பார்த்து அமர்ந்து கொண்டனர் அனைவரும் .. நளினி அம்மாவுடன் சேர்ந்துகொண்டு வழக்காடி கொண்டிருந்தான் காவின் .. அனுவும் கதிரும் அடிக்கடி பார்வையாலேயே பேசிக்கொள்ள சந்துரு சட்டென எழுந்தான் ..
" என்ன சந்துரு ?"
" அம்மா உங்க அண்ணா பொண்ணு ரொம்ப சீன் போடுறா "என்று முகத்தை திருப்பி கொண்டான் அவன் .. நந்துவின் தந்தை சிறிது நேரத்தில் கிளம்பி விட்டதால் அந்த தைரியத்தால் " உங்க அண்ணன் பொண்ணு " என்று ஜாடையாய் பேசிகொண்டிருந்தான் அவன் ..
"என்ன ஆச்சுன்னு சொல்லுங்க அண்ணா " என்றாள் ஆரு..
" வேறென்ன , அதோ அங்க இருக்குற கடல் அலையில் நடக்குறதுக்கு உன் ப்ரண்ட் என்னை நம்பி வர மாட்டாளாம் ... " என்று முறுக்கி கொண்டான் அவன் ..
" நம்பி வர மாட்டேன்னு நான் சொன்னேனா ?" என்று இடைபுகுந்தாள் நந்து ..
" டேய் கவீன் , உன் அப்பாவி ப்ரண்ட அமைதியா இருக்க சொல்லு " என்று அவன் மீண்டும் ஜாடை பேச்சு பேசவும் , அவனை முறைத்து கொண்டே கடல் அலைகளில் கால் நனைக்க நடந்து சென்றாள் நந்திதா ..கோபத்தில் அவள் நடந்த வேகத்திற்கு இணையாய் கிட்ட தட்ட ஓடி, அவளது கரம் பற்றினான் சந்துரு ..
" அம்மு "
".."
"நந்து "
"..."
" ஹே மை டியர் மான் குட்டி ... அத்தான் மேல என்னடா கோபம் " என்று அவன் போலியாய் குழைந்து பேசவும்
பொங்கி சிரித்தாள் நந்து ..
" பிரபு அத்தான் , உங்க வம்புக்கு அளவே இல்லையா ?" என்று கை நீட்டி கேட்டு சலித்து கொள்ளவும் ,
அவளது கைகளை சிறைபிடித்து கொண்டான் அவன்..
" அப்பா என்ன வேகம் உங்களுக்கு ? அன்பா இருந்தாலும் சரி கோபமாய் இருந்தாலும் சரி கொஞ்சம் நிதானமா காட்டணும்னு தோணவே தோணாது .. சரியான விடா கொண்டன் " என்றாள் அவள் ..
" ஹா ஹா என்ன பண்ணுறது , அப்பபோ அமைதியின் சிகரம் , அப்பபோ அழகான ராட்சசியா மாறும் அத்தை பெண் இருந்தா இப்படித்தான் " என்றான் அவனும்
" நான் உங்களுக்கு ராட்சசியா ? "
" அதான் அழகுன்னு சொன்னேன்ல ?"
" அப்படி சொன்னா நான் மயங்கிடுவேனா ?"
" ஓஹோ அப்படி ஏதும் சொன்னா மட்டும்தான் நீ என்னிடம் மயங்குவியா ? இல்லைன்னா மேடம் ரொம்ப தெளிவா இருக்குறத நினைப்பா ?" என்று விழி நோக்கி கேட்டான் அவன் .. அவன் விழிகளில் காதலும் கர்வமும் போட்டியிட்டது ..
" போதும் வழிஞ்சது .. வாங்க போகலாம் " என்று மீண்டும் எட்டி நடை போட்டு அவள் அங்கு வந்த நேரம் அவர்களை இணைந்திருந்தாள் ஜெனி ..
" ஹே ஜெனி வா வா " என்று அனைவரும் வரவேற்க, கவீன் மட்டும் அவன் தந்தையிடம் " வாங்க சார் " என்றான் .. கவீனின் முகத்தையே உருத்து பார்த்தார் அவர் .. கொஞ்சமும் கல்மிஷம் இல்லாமல் தெரிந்தான் கவீன் .. அவன் மற்றவர்களை போல அங்கிள் என்று அழைக்காமல் சார் என்று அழைத்ததையும் அவர் மனதில் குறித்து கொண்டார் ..
" ம்ம்ம்ம் ஜெனி பத்திரம் " என்று எல்லாரையும் பார்த்து பொதுவாய் கூறிவிட்டு நடந்தார் அவர் ...
" வா ஜெலோ , உன்னை பார்க்கத் தானே மாமன் வழி மேல விழி வெச்சு காத்திருந்தேன் " என்று சட்டென கவீனின் குரலில் அனு பேசவும் ஜெனியின் பார்வை கவீனை உரசிச் சென்றது ..