அவளது கால்கள் தவிப்புடன் இங்குமங்கும் அலைந்துக்கொண்டிருந்தன. அவள் 'அகல்யா'!!!! அவள்தான் அந்த அப்படத்தின் கதாநாயகி. அவளது பார்வை வாசலை அடைந்து அடைந்து திரும்பிக்கொண்டிருந்தது. வந்து விடுவானா சஞ்சீவ்?????
அவன் வரவேண்டும் என்ற தவிப்பு ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் அவளை குடைந்து எடுத்துக்கொண்டிருந்தது அவளது மனசாட்சி. 'அவன் வரவேண்டுமென்று நீ எதிர்ப்பார்ப்பதில் கடுகளவேனும் நியாயம் இருக்கிறதா?
இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பிரிமியர் ஷோவுக்கான அழைப்பிதழை அனுப்பி விட்டிருந்தாள் அவனுக்கு. நேற்று மதியம் அவனை கைப்பேசியில் அழைத்திருந்தாள் அவள்.. இரண்டு முறை, மூன்று முறை என ஒலித்துக்கொண்டே இருந்தது கைப்பேசி. அழைப்பை ஏற்கவில்லை அவன்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் எல்லையை தொட்டவனாகத்தான் எடுத்தான் கைப்பேசியை 'ஹேய்.....என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ. என்னடி வேணும் உனக்கு?'
'சாரி சஞ்சா... ப்ளீஸ்... ஒரு நிமிஷம் மட்டும் நான் பேசறதை கேளு. பிரிமியர் இன்விடேஷன் வந்ததா? ப்ளீஸ் வா சஞ்சா....
'என்ன தைரியம், என்ன திமிரு இருக்கணும் உனக்கு?' என்றான் சஞ்சா. அவன் தலை முதல் கால் வரை கொதிப்பு!!!. அது அவன் குரலில் பிரதிபலித்தது!!!. 'இல்லை. எனக்கு புரியலை. என்னை பார்த்தா கிறுக்கன் மாதிரி தெரியுதா உனக்கு.?
'இல்லை சஞ்சா....' அவள் குரல் உடைந்து, ஓய்ந்து ஒலித்தது. 'சத்தியமா இல்லை.... என் திமிரு எல்லாம் ஓய்ஞ்சு போய் ரொம்ப நாள் ஆச்சு. மூழ்கி போயிட்டிருக்கேன் என்னை காப்பாத்துன்னு கேட்கறேன் அவ்வளவுதான்'
சட்டென மௌனமானான் அவன். அவனிடமிருந்து பதில் மொழி வராததைக்கண்டு திகைத்து அலறியது அவள் குரல் 'சஞ்சா ப்ளீஸ் போனை வெச்சிடாதே..... லைன்லே இருக்கியா?
'ம்...'
'வரிசையா என் படமெல்லாம் பிளாப் சஞ்சா. இது என்னோட கடைசி முயற்சி. ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். ரொம்ப நல்ல படம் சஞ்சா. புது டைரக்டர். இது ஓடலைன்னா என்னோட சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் சஞ்சா.'....
..................
'உனக்கே தெரியும் இங்கே எனக்கும், அப்பாவுக்கும் இருந்த நல்ல பேர் எப்பவோ காணாம போயிடுச்சு. கையிலே பணமும் இல்லை சஞ்சா....' குரல் உடைய அப்படியே மௌனமானாள்.
சில நொடிகளுக்கு பின்னர் அவளே தொடர்ந்தாள் 'நீ பிரிமியருக்கு வந்தா எல்லாரும் கொஞ்சம் திரும்பி பார்ப்பாங்க. படம் கொஞ்சமாவது ஓடும் சஞ்சா.... ப்ளீஸ் சஞ்சா... கீழே விழுந்திட்டேன் கொஞ்சம் கை கொடு சஞ்சா ப்ளீஸ்'
............
'ஏதாவது சொல்லு சஞ்சா... ப்ளீஸ்....'
'ம்? எனக்கு கொஞ்சம் யோசிக்கணும். நாளைக்கு சொல்றேன். இப்போ போனை வைக்கிறேன்.' துண்டித்து விட்டிருந்தான் அழைப்பை.
அதற்கு பிறகு அவன் அழைக்கவில்லை. அவனை திரும்ப அழைக்கும் தைரியம் அவளிடம் துளியுமில்லை. வந்துவிடுவான் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை மட்டுமே இறுக்கமாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.
காட்சி தொடங்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தது. அவள் மனதில் வேருன்றி இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர துவங்கி இருந்த நொடியில் அந்த திரை அரங்கத்தின் வாசலில் வந்து நின்றது அந்த கார். நீல நிற டி-ஷர்ட்டும் ஜீன்சுமாய் பளிச்சென இறங்கினான் சஞ்சீவ்.
பளிச்சிட்டன அங்கே இருந்த கேமராக்கள். எல்லார் முகத்திலும் வியப்பின் சாயல். அவன் இங்கே வருவானென யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டர்களே!!!!. அரங்கத்தின் படிகளில் விறுவிறுவென ஏறி உள்ளே நுழைந்தவனை நோக்கி ஓடின அவள் பாதங்கள்.
சுற்றி இருந்த கேமராக்கள் அவர்களை விழுங்கிக்கொண்டிருக்க, அவனருகில் வந்தவளின் கரங்கள் தன்னாலே குவிந்தன 'வா... வா...ங்க சா...ர். நீ...ங்க வந்ததிலே எனக்கு ரொ... ரொம்ப சந்தோஷம்..' கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது அவள் குரல்.
சில நொடிகள் இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் சஞ்சீவ். 'அவன் பரிசளித்த சங்கிலியை எல்லார் முன்னிலையிலும் கழற்றி தூக்கி எறிந்த அந்த கரங்கள், இன்று அவன் முன்னே குவிந்து நிற்கின்றன.' அவன் இதழோரத்தில் புன்னகை ஓட்டம்.
அதற்குள் அவனருகே வந்தது ஒரு மைக். 'சார் நீங்க இந்த பிரிவியுக்கு....'
'ஏன் வந்தேன்னு கேட்கறீங்களா? படம் பார்க்க வந்தேன்' அழகாய் சிரித்தான் சஞ்சீவ். 'ஏன் சார் நான் இந்த படம் பார்க்க கூடாதா?
'அய்யோ... அப்படி இல்லை சார்...'
'படம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன். நன்றி' புன்னகையுடன் கரம் குவித்தான் அவன்.
அவன் இங்கே வந்தது நாளை பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்தியாகும் என தெரியும் சஞ்சீவுக்கு. அதுவே இந்த படத்திற்கு பெரியதொரு விளம்பரமாக அமையும். அதற்காகவே இவனது ரசிகர்கள், படத்தை ஒரு முறையாவது பார்ப்பார்கள்.
அரங்கத்தினுள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தான் சஞ்சீவ். பல நூறு முறை தயக்கத்தின் எல்லையை தொட்டு திரும்பிய பிறகே அவனருகில் வந்து அமர்ந்தாள் அவள். அவள் பக்கம் திரும்பக்கூட இல்லை அவன். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சீட்டில் சாய்ந்துக்கொண்டு, துவங்கி இருந்த படத்தில் ஆழந்துப்போனான் அவன்.
குழப்பமும், தவிப்புமாகவே அமர்ந்திருந்தாள் அவள். அவன் பக்கமே இருந்தது அவள் பார்வை. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை, அவன் அவளுடன் பேசாமல் இருந்த நாள் என்ற ஒன்று இருந்ததில்லை. எந்த ஊரில் படபிடிப்பில் இருந்தாலும் கைப்பேசியிலாவது அழைத்து பேசிவிடுவான்
'ஹேய்... அல்வா!!!!!!.' என்பான். அப்படிதான் எப்போதும் அழைப்பான் அவளை. 'எப்படி இருக்கே? கண்ணிலேயே சிக்க மாட்டேங்கறே. உன்னை பார்க்கணும் டி' என்பான். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.....
அப்போதான் தான் வந்தது அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு!!!! என்னதான் நிகழந்தது அவளுக்குள்ளே??? எது அவள் கண்களை மறைத்தது அப்போது.?????? அவளுக்கே தெரியவில்லை!!!!! இப்போது எல்லாம் முடிந்து போய் விட்டது.!!!! ஒரு பெருமூச்சு அவளிடம்.
அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டே இருந்தார் அவர்.!!! அரவிந்தாட்சன்!!!! அவளுடைய தந்தை.!!!!
படத்தில் ஆழ்ந்து போயிருந்தான் சஞ்சீவ்.. நேற்றிரவு மனதில் படிந்து கிடந்த குழப்பம்மெல்லாம் வடிந்து போய் முகத்தில் தெளிவு படர்ந்திருந்து.
நேற்று இரவு முழுவதும் உறக்கமில்லை அவனுக்கு. நேரம் அதிகாலை மணி மூன்றை தொட்டிருந்தது. கஷ்டப்பட்டு தூக்கத்தை துரத்திப்பிடித்து இழுத்து உறங்கிக்கொண்டிருந்த ரிஷிக்கு திடீரென விழிப்பு தட்டியது. அருகில் படுத்திருந்த சஞ்சா அங்கே இல்லை. எங்கே சென்றான் இவன்? யோசித்தபடியே கட்டிலில் எழுந்து அமர்ந்தான் ரிஷி.
அந்த அறையை ஒட்டி இருந்த பால்கனியில் விளக்கெறிந்து கொண்டிருக்க, பால்கனியின் கண்ணாடி கதவை தாண்டி அங்கே சஞ்சா அமர்ந்திருப்பது தெரிந்தது ரிஷிக்கு. அங்கே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தான் அவன். 'கதை எழுதிக்கொண்டிருக்கிறானா என்ன? இது எத்தனை நாட்களாய்?' யோசித்தபடியே அவன் அருகில் வந்து நின்றான் ரிஷி.
அவன் அங்கே வந்து நின்றது கூட சஞ்சாவின் கருத்தில் பதியவில்லை. அவனது மடியிலிருந்த காகிதத்தின் நடுவில் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது அந்த பெயர் 'அகல்யா'!!! அந்த பெயரை சுற்றி சில வட்டங்கள், அதை சுற்றி பல கேள்விக்குறிகள்.!!!!