அவனது குழப்பத்தை புரிந்துக்கொள்ள வார்த்தைகள் தேவையாக இருக்கவில்லை ரிஷிக்கு. அவனது தோள்களை அணைத்தபடியே அவனருகே அமர்ந்தான் ரிஷி. கொஞ்சம் திடுக்கிட்டு திரும்பினான் சஞ்சா.
என்னடா? என்றான் ரிஷி. அகல்யாவா???? மறுபடியும் வந்தாளா? அவன் குரலில் நிறையவே கேள்விக்குறிகளும், ஆச்சரிய குறிகளும்.
'ம்??? ம்...' என்றான் சஞ்சா. 'ரொம்ப தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன். தங்கச்சி கல்யணம் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் அடுத்த படம் அப்படின்னு யோசிச்சு வெச்சிருந்தேன். அதனாலே இப்போதைக்கு எந்த படமும் கமிட் ஆகலை. நான் இப்போ ஜெயிலுக்கு போனா யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. ஸோ. அவளை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.' அவன் கையிலிருந்த பேனா அவள் பெயரை சுற்றி இன்னும் அதிகமாக வட்டங்கள் வரைந்தது.
பதிலே பேசவில்லை ரிஷி. அவனது உள்ளக்குமுறலையும், கொதிப்பையும் ரிஷியை தவிர வேறு யாரால் புரிந்துக்கொள்ள முடியுமாம்? இப்போது சஞ்சீவுக்கு தேவை ஒரு வடிகால். தனது குமுறல்களை கொட்டி தீர்க்க ஒரு இதயம். அதை ரிஷியால் மட்டுமே கொடுக்க முடியும்.
'வாடா.... அப்படியே பீச் வரைக்கும் ஒரு வாக் போயிட்டு வரலாம் வா' என்றான் ரிஷி. அந்த கெஸ்ட் ஹவுசை ஒட்டியே கடற்கரை. சில நாட்களுக்கு முன் நடந்த அந்த அனுபவத்தால் கை துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான் சஞ்சீவ். சில நிமிடங்களில் வீட்டை விட்டு இறங்கி நடந்தனர் இருவரும்.
சில நிமிட நடைக்கு பிறகு 'என்னாச்சுடா???.' என்றான் ரிஷி.
'இன்னைக்கு மத்தியானம் போன் பண்ணி இருந்தாடா அவ.' என்றான் சஞ்சா. 'கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் கழிச்சு என் ஞாபகம் இப்போதான் வந்திருக்கு அவளுக்கு.'
அவளிடம் பேசி கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணி நேரங்கள் ஆன பிறகும் நிலைகொள்ளவில்லை சஞ்சீவின் மனம். நடந்ததை ரிஷியிடம் மனமார கொட்டி முடித்தான் சஞ்சீவ். வாயே திறக்கவில்லை ரிஷி.
'எப்படிடா இப்படி வெட்கமில்லாம என்கிட்டே பேச முடியுது அவளாலே? அக்கினியாய் கிடந்த நெஞ்சிலிருந்து நெருப்பு துண்டங்களாய் வந்து விழுந்தன வார்த்தைகள். 'தப்பு பண்ணிட்டேன். நான்தான் தப்பு பண்ணிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாலேயே அவளை வெட்டி இந்த கடலிலே வீசி எறிஞ்சிட்டு நான் ஜெயிலுக்கு போயிருக்கணும். அவளும் நிம்மதியா போயிருப்பா. நானும் நிம்மதியா இருந்திருப்பேன்........ இப்ப மட்டும் என்ன கெட்டு போச்சு? அவளை.....' அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்தினான் சஞ்சீவ்.
சில அடிகள் இருவரும் பேசாமலே நடந்தனர். கடற்காற்று அவர்கள் மௌனத்தை கிழித்துக்கொண்டு கடந்தது. கடல் நீருக்கு அருகில் வந்து விட்டிருந்தனர் இருவரும். நிலவின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது கடல். சற்றே பெரிய அலைகள் எழுந்துக்கொண்டிருந்தன. கடல் நீர் வந்து கால் நனைக்க சில நிமிடங்களில் சஞ்சீவின் மனம் கொஞ்சம் நிலைப்பட்டது.
ஒரு ஆழமான மூச்சை எடுத்தவன் தணிந்து போயிருந்த குரலில் சொன்னான் 'அவளை ஒண்ணுமே பண்ண முடியாதேடா என்னாலே.... அவளை காதலிச்சு தொலைச்சிட்டேனே... அவ அழுதா இன்னமும் மனசு பதறுதேடா ....'
தெரியும் ரிஷிக்கு.!!!! இதுதான் சஞ்சீவ் என நன்றாக தெரியும் ரிஷிக்கு.!!!!! ரிஷியின் கைகள் தன்னாலே அவன் தோள்களை அணைத்துக்கொண்டன. அவன் நினைத்திருந்தால் இந்த நேரத்தில் அவளை மிக எளிதாக பழி வாங்கி இருக்க முடியும். ஆனால் அப்படி செய்துவிட்டால் அவன் சஞ்சா அல்லவே.!!!!
சில நொடிகள் கழித்து நிதானமாக வெளிவந்தன ரிஷியின் வார்த்தைகள் 'ஆனால் அதுக்காக நீ அவ கிட்டே மறுபடியும்......'
அவன் முடிப்பதற்குள் சொல்ல வருவதை புரிந்துக்கொண்டு இடைமறித்தான் சஞ்சீவ் 'மறுபடியும் அவ கிட்டே ஏமாந்து போற அளவுக்கு பைத்தியக்காரன் இல்லைடா நான்..... அதே நேரத்திலே அவ எப்படியும் போகட்டும்னு விடவும் முடியலைடா என்னாலே.....' அலையடித்துக்கொண்டிருந்த கடலை பார்த்தபடியே சொன்னான் சஞ்சீவ்.
சில நொடி சிந்தனைக்கு பிறகு, ரிஷியின் பக்கம் திரும்பினான் சஞ்சீவ் 'ரிஷி.... நான் ப்ரிமியருக்கு போறதிலே உனக்கு ஏதாவது வருத்தம் இருக்காடா.??? அப்படி ஏதாவது இருந்தால் சொல்லு நான் கண்டிப்பா போக மாட்டேன். மனசிலே இருக்கறதை அப்படியே சொல்லு...'
அவனை புரியாத பார்வை பார்த்தபடி கேட்டான் ரிஷி 'ஏன்டா.... அப்படி கேட்கிறே???'
'அரவிந்தாட்சன்!!!!!' என்றான் சஞ்சீவ்.
அந்த பெயர் ரிஷியின் முகத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தது.
'நான் போறது அவளுக்கு ஹெல்ப் பண்ண மட்டும்தான். நாளைக்கு பத்திரிக்கையிலே எப்படி வேணும்னாலும் எழுதுவாங்க. அரவிந்தாட்சன் அதை எப்படி வேணும்னாலும் திருப்புவார். அதனாலே....'
அவன் முடிப்பதற்குள் 'சஞ்சா..... 'என்றான் ரிஷி. 'எனக்கு என் சஞ்சாவை தெரியும். நீ தேவை இல்லாம மனசை குழப்பிக்காதே. போயிட்டு வா.....'
படம் நிறைவடைந்திருந்தது. நடனத்தையும், கதாநாயகியையும் மையமாக கொண்டு எழுதப்பட்ட கதை அது. அவளது நடிப்பிலும், நடனத்திலும் அசந்து, நெகிழ்ந்து போயிருந்தான் சஞ்சீவ்.
அந்த புதிய, இளம் இயக்குனரை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு மனம் திறந்து பாராட்டினான். எல்லாரையும் கை குலுக்கி மனமார வாழ்த்தினான் சஞ்சீவ். அவள் பக்கம் மட்டும் திரும்பவே இல்லை.
அவனை நோக்கி நீண்டன மைக்குகள் 'அருமையான படம். நான் நிஜமாவே அசந்து போயிட்டேன். ரொம்ப நல்ல கதை, புது டைரக்டர் அசத்தி இருக்கார். எல்லாரும், குறிப்பா என்னோட ரசிகர்கள் இந்த படத்துக்கு நல்ல ஆதரவு கொடுக்கணும். அப்போதான் இதே மாதிரி இன்னும் நிறைய நல்ல படங்கள் நமக்கு கிடைக்கும். நன்றி' கரம் கூப்பி முடித்தான் சஞ்சீவ்.
அனைவரிடமும் விடைபெற்று கிளம்பிக்கொண்டிருந்தான் சஞ்சீவ், சுற்றி இருந்தவர்களின் பார்வை அவளை தொடருவதை கூட உணராமல் அவனையே பின் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தாள் அகல்யா. அவளை ஒரு பொருட்டாகவே நினைக்காதது போல் நடந்தான் அவன்.
அவன் மனம் முழுவதும் அந்த படமே ஆக்கிரமித்திருந்தது. ஒரு நடிகனாய், அவளுடைய நடிப்பின் ரசிகனாய் மட்டுமே இருந்தான் அந்த தருணத்தில். அவன் பாராட்டுக்காக அவள் உள்ளம் ஏங்கி நின்றதையும் அவன் உணராமல் இல்லை.
அதே நேரத்தில் அவன் சந்தித்த மிகப்பெரிய அவமானம், துரோகமும் அந்த நாளின் நிகழ்வுகளும் அவன் கண் முன்னே நிழலாடிக்கொண்டே இருந்தன. அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல், அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் விறுவிறுவென நடந்து, அரங்கத்தை விட்டு வெளியேறி காரில் ஏறிப்பறந்தான் சஞ்சீவ்.
வெளியே எதையும் காட்டிக்கொள்ள வில்லை என்றாலும், உள்ளுக்குள் துவண்டு போனாள் அகல்யா. சில நிமிடங்கள் கழித்து அவளும் எல்லாரிடமும் விடைப்பெற்று கிளம்பி விட்டிருந்தாள்.
அகல்யாவின் கார் அவளது வீட்டை அடைந்தது. வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் சென்று கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தாள். கன்னங்களை நனைத்தது கண்ணீர். தாங்கிக்கொள்ள முடியவில்லை அவளால்..
'ஒரு வார்த்தை பாராட்டி விட்டு போயிருக்கலாம் அவன்.!!!!! அவனும் நடிகன்தானே. ஒரு கலைஞனின் மனம் எதை தேடி தவிக்கும் என அறிந்தவன் தானே. அவனது ஒற்றை வார்த்தை பாராட்டில் என் படத்திற்காக நான் எடுத்துக்கொண்ட சிரமங்கள் எல்லாம் மறந்தே போயிருக்காதா????' கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது அவளுக்கு.
'பேராசை உனக்கு.!!!!! நீ செய்ததை மறந்து உனக்காக அவன் வந்து நின்றதே மிகப்பெரிய உதவி, இன்னும் பாராட்டு வேறு வேண்டுமா உனக்கு?? குத்தி கீறியது அவள் மனசாட்சி.
சரியாய் அந்த நேரத்தில் அவளது வீட்டு காம்பௌண்டுக்குள் யாருடயோ காரோ நுழையும் சத்தம் கேட்டது அவளுக்கு!!!!
மை டியர் ஃபிரண்ட்ஸ். போன வாரம் எபிசொட் கொடுக்க முடியாம போனதுக்கு ரொம்ப ரொம்ப சாரி. சில காரணங்களாலே ஒரு சின்ன பிரேக் எடுக்க வேண்டியதா போச்சு. இனிமே ரெகுலரா கொடுத்திடுவேன்னு நினைக்கிறேன். THANKS A LOT for your support my dear friends and chillzee team.
மழைச்சாரல் தொடரும்......
{kunena_discuss:886}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.