தோளில் கிடந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்தவர்களை எல்லாம் கரம் கூப்பி வரவேற்றார் அந்த பெண்களின் தந்தை.
சிறிது நேரம் வழக்கமான பேச்சுக்கள் தொடர்ந்தன. அப்பாவின் பார்வை மகளின் வரவை எதிர்ப்பார்த்து வாசல் கதவிலேயே கிடந்தது.
கோதையை எதிர்பார்த்து, கண்களால் தேடி தேடி அவர்கள் பேச்சில் பொறுமை இழந்து அவளை வாய்விட்டு அழைத்துவிடும் நிலைக்கு கோகுல் வந்த போது காப்பாற்றினார் தேவகி.
'எங்கே வேதாவும், கோதையும். உள்ளே உட்கார்ந்துண்டு என்ன பண்றா?? வரச்சொல்லுங்கோ ரெண்டு பேரையும். அவாளையும் வெச்சுண்டே பேசுவோம்.'
'மன்னிக்கணும்' தயக்கத்துடன் சொன்னார் அப்பா. வேதா இன்னும் ஆஃபிஸ்லேர்ந்து வரலை.
மெல்ல மாற்றம் கொண்டது பெரியப்பா நந்த கோபாலின் முகம். 'நாங்க வரப்போறதா சொன்னேளா இல்லையா?'
'சொல்லிட்டேன். சொல்லிட்டேன். வந்துண்டே இருப்போன்னு நினைக்கிறேன். ஏதாவது மீட்டிங்க்லே இருந்திருப்போன்னு நினைக்கிறேன். ஃபோன் ஆஃப் பண்ணி வெச்சிருக்கா'
'சரி விடுங்கோ. வந்திடுவா. நீங்க கோதையை கூப்பிடுங்கோ' என்ற தேவகி, 'கோதை...' என்று அவரே உள்நோக்கி குரல் கொடுத்தார்.
அங்கே கோகுலின் வீட்டு ஹாலுக்குள் வந்து சோபாவில் அமர்ந்தான் சரவணன். அத்தனை பெரிய வீட்டை பார்த்து வியப்பில் விழுந்தவளாக, நின்றிருந்தவளை பார்த்து 'என்ன அசந்து போயிட்டே. இப்படி உட்காரு' என்றபடி அவள் கையை பிடித்து இழுத்து சோபாவில் தன்னருகே அமர்த்திக்கொண்டான் சரவணன். மாமி உள்ளே சமயலறையில் இருந்ததால் இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை.
எப்படி இருக்கு வீடு. நோக்கு பிடிச்சிருக்கா? மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தவளின் காதுக்குள்ளே கிசுகிசுத்தான் சரவணன்.
சூப்பரா இருக்கு. ஆமாம் உங்க அம்மா அப்பா எங்கே??? ஆத்திலே யாருமே இல்லையா?
'இல்லை. அவாளெல்லாம் வெளியிலே போயிருக்கா. நான் இன்னும் உன்னை பத்தி அவாகிட்டே சொல்லலை. சீக்கிரமே சொல்லிடுவோம் கவலை படாதே' என்றபடி அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டான் சரவணன்..
ஆஃபிஸை விட்டு கிளம்பும் போது அப்பாவை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சம் உறுத்திக்கொண்டிருந்தது அவளை. இப்போது அவன் மீது மொத்த நம்பிக்கையையும் வைத்து, அவனை கணவனாகவும், இதை அவள் வாழப்போகும் வீடாகவும் நினைத்துக்கொண்டு அவனோடு அப்படியே ஒட்டிக்கொண்டு சோபாவில் புதைந்து அமர்ந்தாள் வேதா.
அப்போது அவள் கண்ணில் பட்டது எதிரே சுவற்றில் இருந்த அந்த புகைப்படம்.
கோதையின் வெட்கத்தை ரசித்தே விட வேண்டுமென்ற தவிப்பிலும் ஆர்வத்திலும் கோகுல் அமர்ந்திருக்க, மெல்ல மெல்ல நடந்து வந்தாள் கோதை. அவன் சொன்ன பச்சை நிற புடவையும், காதில் ஊஞ்சலாடும் ஜிமிக்கிகளும் தலையில் முல்லைச்சரமுமாய் வந்து அவள் நின்ற நொடியிலேயே மொத்தமாக அவளுக்குள் விழுந்துவிட்டிருந்தான் கோகுல்.
'இப்படி உட்காருமா' தேவகி சொல்ல 'இ...... பரவா....யில்லை இரு....க்கட்டும்.' விழி நிமிர்த்தாமல் மெல்ல சொன்னாள் கோதை. அவன் பார்வை அவளையே உரசிக்கொண்டிருப்பதை நன்றாக உணர முடிந்தது அவளால்.
வெட்கமும், சந்தோஷமும் உள்ளுக்குள் போட்டிபோட எல்லாவற்றையும் தாண்டி இயல்பாக சுவாசித்து விட போராடிக்கொண்டிருந்த அவளின் அந்த தருணத்தை, அப்படியே கைப்பேசியில் புகைப்படமாக பதித்துக்கொள்ள விழைந்தது அவனது உள்ளம். தனது கைப்பேசியை மெல்ல வெளியில் எடுத்தான் அவன்.
அவளின் அப்பாவுக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அதை புரிந்துக்கொண்டவாரக.....
'என் அண்ணாக்கு ஒரே பையன் முரளி. அவனும் எங்க அண்ணா மாதிரியே லாயர். அவனுக்கும் கல்யாணத்துக்கு பார்த்திண்டு இருக்கா. ஏனோ எந்த பொண்ணு ஜாதகமும் அவனுக்கு சரியா பொருந்தி வரலை. தெரிஞ்சவா மூலமா உங்க பெரிய பொண்ணு ஜாதகம் கிடைச்சிருக்கு. ரெண்டு ஜாதகமும் ரொம்ப நன்னா பொருந்தி வருதாம். அதனாலே அவளை முரளிக்கு பார்க்கலாம்னு ஒரு எண்ணம் அவன் ஊரிலே இல்லை. இல்லேன்னா கூட்டிண்டு வந்திருப்போம் .' சொன்னார் வாசுதேவன்.
அங்கே கோகுலின் வீட்டில் அந்த புகைப்படத்தை பார்த்து புருவம் உயர்த்தினாள் வேதா.' தேவகியும் வாசுதேவனும் இணைந்து இருக்கும் புகைப்படம் அது.
எழுந்து அதன் அருகில் சென்று பார்த்து விட்டு 'இவா ரெண்டு பேரும் யாரு??? சரவணனை பார்த்துக்கேட்டாள் அவள்.
'இவா ரெண்டு பேரும்தான் உன் மாமானார் மாமியார் நன்னா பார்த்துக்கோ' கண் சிமிட்டி சொன்னான் சரவணன். அடுத்த நொடி அவன் பார்வை கூடத்தை துழாவியது.. 'எங்கேயாவது கோகுலின் புகைப்படம் தென்பட்டு விடப்போகிறதே என்ற தவிப்புடன். எதுவும் தென்படவில்லை அங்கே.
அப்போது வெளியே வந்தார் லக்ஷ்மி மாமி. ' வாப்பா.. வா.. வா... ' நீ வருவேன்னு கண்ணன் சொன்னான் என்றார் அவர்.
அப்படி என்றால் கோகுலுக்கு??? முகத்தில் வியப்பின் ரேகைகள் படர கோதையை ஒரு புகைப்படம் எடுத்துவிட மும்முரமாக முயன்று கொண்டிருந்தவனின் பக்கம் திரும்பினார் ஸ்ரீதரன்.
சட்டென கலைந்தவன் ஒரு நொடி அவரை பார்த்துவிட்டு சுதாரித்து 'என்ன அப்படி பார்க்கறேள்??? நேக்கு யாருன்னு பார்க்கறேளா??' என்றான் அவர் மனம் படித்தவனாக 'நேக்கு எப்பவும் கோதைதான்' என்று அவள் பக்கம் திரும்பியவன் சொல்லியே விட்டிருந்தான் 'நேக்கு கோதையைதான் பிடிக்கும். கோதையை மட்டும்தான் பிடிக்கும். என்னடா கோதைப்பொண்ணு???.'
அவளே எதிர்ப்பார்க்கவில்லை இதை. உடல் மொத்தமும் சிலிர்த்துபோக நிமிர்ந்தாள் அவள். அவன் சட்டென அவளைப்பார்த்து கண் சிமிட்ட அவள் முகமெங்கும் ஒரே நொடியில் பூத்த பலநூறு வெட்க பூக்களை அப்படியே பதித்துக்கொண்டது அவனது கைப்பேசி.
டேய்... டேய். .'போறும்டா சிரித்தபடியே சொன்னார் அவன் பெரியம்மா யசோதை. 'கல்யாணத்துக்கு அப்புறமும் கொஞ்சம் வேணும். மிச்சம் வெச்சுக்கோ.'
அந்த வீடு முழுக்க சிரிப்பலையும் சந்தோஷமும் பரவ, பேச்சை தொடர்ந்தார் வாசுதேவன். 'எங்களுக்கு பணம், அந்தஸ்து இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. பெருமாள் எங்களுக்கு நிறையவே கொடுத்திருக்கார். எங்காத்துக்கு வர மாட்டுப்பொண்கள் ,நல்ல ஒழுக்கமா, எங்களோட பாசமா இருக்கிற பெண்களா இருந்தா போறும். நீங்க என்ன சொல்றேள்.???
மாமியின் திடீர் அழைப்பில் கொஞ்சம் திடுக்கிட்டவன் சுதாரித்துக்கொண்டான். 'வேதாவை ஏற இறங்க பார்த்தார் மாமி. 'யாருப்பா இந்த பொண்ணு???.'
'ஃப்ரெண்ட் மாமி. ஃப்ரெண்ட்' என்றான் சரவணன்.
'ஓ! உட்காரும்மா நோக்கும் காபி கொண்டு வரேன்' உள்ளே போய்விட்டார் மாமி.
'யாரிந்த மாமி?'. மெல்லகேட்டாள் வேதா.
'நம்மாத்து சமையல்கார மாமி'
'யாரோ கண்ணன் அப்படின்னு சொன்னாளே. அது யாரு??.'
'அவனா? அவன் என் ஃப்ரெண்ட். அவனை விட்டுதான் நான் வருவேன்னு ஃபோன் பண்ண சொன்னேன்' கூசாமல் பொய் வெளியே வந்தது.
அப்படியா??? என்றபடி கூடத்தை ஒட்டி இருந்த அந்த பூஜை அறையை நோக்கி சென்றாள் வேதா. அங்கே உள்ளே புல்லாங்குழலுடன் சிரித்துக்கொண்டிருந்தான் அந்த மாயக்கண்ணன். அவனையே ரசித்தபடி சில நொடிகள் நின்று விட்டாள் வேதா. அவளருகில் வந்து நின்றான் சரவணன். சில நொடிகளுக்கு மேல் அவனால் அங்கே நிற்க முடியவில்லைதான். மனதிற்குள் ஏதோ ஒன்று உறுத்தி தீர்க்க அங்கிருந்து மெல்ல நகர்ந்தான் சரவணன்.
அங்கே கோதையின் வீட்டில் இரண்டு நிச்சியதார்த்ததுக்குமான தேதி குறிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தனது பெரிய மகளின் மீதும் அந்த தந்தைக்கு அளவு கடந்த நம்பிக்கை. தனது வார்த்தையை தட்ட மாட்டாள் என்ற நம்பிக்கை. அதே நம்பிக்கையை வந்தவர்களுக்கும் கொடுத்து விட்டிருந்தார் தந்தை.
இங்கே மாமி கொடுத்த காபியை ருசித்துவிட்டு கிளம்ப தயாரானார்கள் இருவரும்.
'என்னப்பா இப்போதான் வந்தே அதுக்குள்ளே கிளம்பறியே??' கேட்டார் மாமி.
'இல்லை மாமி இவளை டிராப் பண்ணிட்டு வரேன். நீங்க சாப்பாடு ரெடி பண்ணி வைங்கோ.' இயல்பாக சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு காரை நோக்கி நடந்தான். எந்த சந்தேகமும் எட்டி கூட பார்க்கவில்லை வேதாவுக்கு.
மறுபடியும் அந்த காரை கிளப்பிக்கொண்டு நகர்ந்தான் சரவணன். அவனுக்குள்ளே பரவிக்கொண்டிருந்தது ஒரு திருப்தி.!!! தான் நினைத்ததை சாதித்து விட்ட ஆனந்தம்!!!! அவளுக்கு இனிமேல் தன் மேல் சந்தேகம் வராது என்ற தைரியம்!!!. ஒரு சந்தோஷ புன்னகையுடன் காரை செலுத்திக்கொண்டிருந்தான் சரவணன்.
அறியவில்லை அவன்.!!!! அவன் செய்யும் தப்புகளுக்கெல்லாம் சாட்சி கூற தாயராக, கையில் குழலுடன் கோகுல் வீட்டு பூஜையறையில் காத்திருக்கும் அந்த மாயக்கண்ணனை பற்றி அறியவில்லை அவன்.!!!!
கீதம் தொடரும்.....
{kunena_discuss:890}