“என்னங்க.. மதிக்கு கல்யாணமாமே..”
“ஆமாம். ஏன் உனக்கு தெரியாதா.? வீட்டிற்கே வந்து பத்திரிகை கொடுத்தார்களே.. உன் அண்ணன் வீட்டிற்கும்தானே கொடுத்தார்கள்”
“நான் கூட நம் ஆதிக்கு அவளை கேட்கலாம் என்று எண்ணினேன்”
“என்ன செய்வது .. அவர்கள்தான் சொந்தத்தில் நிச்சயம் செய்து விட்டார்களே?”
“நம் வந்தனாவை வேண்டுமென்றால் ஆதிக்கு பார்க்கலாமா “
நல்ல யோசனைதான். பார்க்கலாம் “
இதைக் கேட்ட ஆதி மதிக்கு திருமணம் என்றவுடன் ஏற்பட்ட அதிர்ச்சியில் தொடர்ந்து அங்கே நிற்க பிடிக்காமல் சென்று விட்டான். அவன் மனம் மிகப் பெரும் போராட்டம் நடத்தியது. சிறு வயது மதியை எண்ணி அவன் மனம் ஏங்கியது. அவன் மதியிடமிருந்து விலகிய பின்பு வேறு எந்த பெண்களிடமும் தோழிகளாக எண்ணிக் கூட பழகுவதில்லை. அவனால் மதியின் இடத்தில் எந்த பெண்ணையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
ஆனால் மதி என்னை மறந்து விட்டாளா? என் நினைவு கூட அவளுக்கு இல்லியா? நான் அன்று ஒதுங்கியது என்னால் அவளுக்கு எந்த கெட்ட பெயரும் கூடாது என்று எண்ணித்தானே. மீனாட்சி அத்தைக்கு கூட புரியவில்லையா? அவன் சிறு வயதில் தன் அம்மாவை விட அத்தையிடம்தானே அதிகம் இருந்தான். தன்னிடம் திருமணதிற்கு வா என்று கூட சொல்ல வில்லையே? இதையெல்லாம் எண்ணி அவன் மிகவும் வேதனைப் பட்டான்.
இந்த நிலையில் பத்மா வந்தனாவிற்கு ஆதியை கேட்க, முதலில் மறுக்க எண்ணிய ஆதி, பிறகு எப்படியும் திருமணம் செய்ய வேண்டும். அது வந்தனாவாக இருக்கட்டும் என்று சம்மதித்தான். இதில் ஜானகிக்கு இஷ்டமில்லை. ராகவனைப் பொறுத்தவரை தன் தங்கை மகள் என்பதால் சம்மதமே.
வந்தனாவும் பத்மாவை விட சற்று அதிக சுயநலமிக்கவள். மேலும் பத்மாவின் உருவேற்றத்தில் ஜானகியை ஒரு பட்டிக் காடாக எண்ணுபவள். அதிதி, சூர்யாவே அப்படி எண்ணும் போது வந்தனாவை பற்றி இதுவரை கவலைப் படவில்லை. ஆனால் அவள்தான் மருமகள் என்றவுடன் சற்று கவைப்பட்டு, ஆதியிடம் விசாரிக்க ஆரம்பித்தாள். ஜானகியும் ஆதியிடம் எப்படி எல்லமோ கேட்டு பார்த்தும் அவனும் தன் மனதை சொல்லவில்லை.
ஆதியின் சம்மதம் கிடைத்தவுடன், பத்மா வேகமாக மற்ற ஏற்பாடுகளை பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் ஜானகி திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என்று சொல்லவே, ஜோசியரிடம் பத்மாவே சென்று வந்தாள். ஜோசியர் பொருத்தம் இருக்கு என்று சொல்லி விட்டதாகக் கூறி தொடர்ந்து கல்யாண வேலைகள் செய்தாள்.
இதற்கிடையில் பத்மா ஆத்யிடம் தனியாக “ஆதி, உன் அம்மா தீடிரென்று ஜாதகம் பார்க்க சொல்கிறார்கள். எனக்கு என்னவோ சரியாக படவில்லை. ஜாதகத்தில் எதாவது பிரச்சினை என்றால் திருமணத்தை நிறுத்தி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது” என்று அழவே,
“பயப்படாதீர்கள் அத்தை. கட்டாயம் கல்யாணம் நடக்கும். நான் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன்” என்று சமாதானப்படுத்தினான்.
பத்திரிகை எல்லாம் அடித்து கொடுக்க ஆரம்பித்த பிறகு, ஜோசியருக்கு அனுப்பவே அவர் ஜானகியை தொடர்பு கொண்டார்.
“அம்மா. வணக்கம். நான் இந்த திருமணம் வேண்டாம் என்றேனே. நீங்கள் அப்படி கட்டாயம் நடத்துவீர்கள் என்றால், என்னிடம் வந்திருக்கவே வேண்டாமே” என
அதிர்ந்த ஜானகி “ஐயா, இது எனக்கு தெரியாதே. என்னிடம் பத்மா சொல்லவில்லையே. பத்திரிகை எல்லாம் வேறு கொடுக்க ஆரம்பித்தாகி விட்டதே. ஐயா, ஏதாவது பரிகாரம் சொல்லுங்களேன்” என்று தவித்தவர்,
“விதியை வெல்ல முடியாது அம்மா. ஆனால் .. சரி எதற்கும் உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வாருங்கள். நல்லதே நினைப்போம்”
இதைக் கேட்ட ஜானகி, பத்மாவிடம் ஏன் இதை சொல்ல வில்லை என்று சண்டையிட, “சும்மா என்னைக் கத்தாதீர்கள். அவர் சொன்னது ஆதிக்குத்தான் நேரம் சரியில்லை, நான்தான் சொந்த அத்தையான நாமே ஒதுக்கினால், வேறு யார் செய்வார்கள் என்று செய்கிறேன். வேண்டுமென்றால் ஆதியிடம் கேட்டு கொள்ளுங்கள். அவன் நிறுத்தினால் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட, தவித்தபடி ஆதியிடம் பேசினார்.
ஆதியோ “அம்மா, சும்மா ஏதாவது சொல்லாதீர்கள். இந்த கல்யாணம் நடந்தால் நடக்கட்டும், இல்லை என்றால் எனக்கு திருமணமே வேண்டாம்” என்று கூறவே, என்ன செய்வது என்று புரியாமல், கடவுள் மேல் பாரத்தை போட்டு, குலதெய்வம் கோவிலுக்கு கூப்பிட்டாள். முதலில் மறுத்த ஆதி, பின் ஒப்புக் கொண்டான்.
அவர்கள் திருமணத்திற்கு பத்து நாள் முன்னதாக எல்லோரும் செல்ல முடிவு செய்தார்கள். கடைசி நேர வேலை ஏதோ வந்திட, ஆதியின் குடும்பம் மறுநாள் செல்வதாகவும், வந்தனாவின் குடும்பம் முதல் நாள் சென்றது. எப்போதும் வந்தனாவோடு செல்லும் அதிதி அன்று ஏதோ முக்கியமான பரீட்சை இருக்கவே, அவளும் இவர்களோடு கிளம்பினாள்.
ஆனால், பத்மா குடும்பம் சென்ற கார் ஆக்சிடென்ட் ஆகி எல்லோரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட, ஆதியின் குடும்பத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவர்கள் இறப்பிற்குதான் மீனாட்சியும்,சுந்தரமும் வந்தனர். மிகவும் நொந்து இருந்த ராகவனை ஓரளவு தேற்றியது அவர்தான். ராகவனுக்கு தன் தங்கை, நண்பன் , மருமகள் என்று எல்லோரையும் பறிகொடுத்ததில் உடைந்து போனார். அதிதியும் உள்ளுக்குள்ளே உறைந்து போனாள். இதை யாரும் கவனிக்கவில்லை.
ராகவன் சில நாட்கள் கழித்து, ஆதியிடம் மதியை திருமணம் செய்து கொள்ள கேட்டார். ஆதி மறுத்து விடவே, அவர் விட்டு விட்டார். ஆனால் அதிக வேலையும், சீர் கெட்ட மனநிலையும் அவர் உடல் நிலையை பாதித்து, ஸ்ட்ரோக் வந்தது.
அவரின் அலுவலக பொறுப்பை பார்த்துக் கொண்டவன், அதில் சுந்தரம் மாமாவின் ஷேர் ஐ பார்த்தவன், அவர் பங்கு பணத்தை அவர் எடுக்கவும் இல்லை, அந்த பங்கு முழுவதும், மதி பேரில் இருப்பதையும் பார்த்தான். தன் மேல் கோபம் என்றால், இதனை நாட்கள் அவர் மதியின் பங்கை பிரிக்கவில்லியே என்று எண்ணினான். அவரை பார்க்க வந்த சுந்தரத்திடம் ஆதி மதி திருமணம் பற்றி மீண்டும் கேட்கவே, ஆதி சுந்தரத்தோடு தனியாக பேசினான்.
“ஆதி நீ என்னப்பா சொல்கிறாய்?”
“மாமா, என்னால் இப்போது திருமணத்தைப் பற்றி எண்ணி பார்க்க முடியாது, நீங்களே தடுத்து விடுங்களேன்?
இல்லைபா... ஏற்கனவே என்னிடம் உன் அப்பா கேட்ட போது, வேண்டாம் ராகவன். அவன் மனநிலையில் இப்போது திருமணம் செய்தால் அவனால் சமாளிக்க முடியாது, அதனால் கொஞ்ச நாட்கள் கழித்து பார்க்கலாம் என்றேன். அதை மனதில் வைத்து வேதனைப் பட்டுதான் அவன் இப்படி ஆகிவிட்டான். இனியும் இதை தொடர முடியாது. உன்னால் மதியை திருமணம் செய்ய முடியாதென்றால், நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள். அதற்கு நான் கட்டாயம் உதவி செய்கிறேன்”
இதைக் கேட்ட ஆதி, இவரே அப்பாவிற்காக இவ்வளவு செய்யும்போது, நான் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்தவனாக, “மாமா, இதில் மதிக்கு சம்மதமென்றால், நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் என் மனநிலையைப் பற்றி அவளிடம் சொல்லி விடுங்கள்” என்றான்.
அவரோ “அதைப் பற்றி பிரச்சினை இல்லை. மதியும் நான் சொன்னால் கேட்பாள். அவளுக்கு எல்லாம் தெரியும்” என்று முடிக்கவே, கடைசி வாக்கியத்தை கவனிக்காமல், அவள் அப்பா சொன்னால் கேட்பாள் என்ற வார்த்தையில், அப்ப அவள் அப்பா சொல்லுக்க்காகதான் தன்னை மணக்கிறாள் என்று முடிவு செய்தான். ஆனால் அவன் வேறு எதுவும் சொல்லவில்லை. மேலும் அவன் மனதில் ஒருமாதிரி மகிழ்ச்சி அடைந்தான்.
ஆனால் இந்த திருமணத்திலும் ஜானகி கவலைப் படவே, அவன் தாயை பார்த்து “அம்மா, நான் காலம் பூரா திருமணம் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறீர்களா? “ என்று கேட்கவே , திகைத்த ஜானகி பேசாமல் போய்விட்டார்.
ராகவனின் உடல் நிலையால் திருமணம் எளிமையாக நடந்தது. அவன் கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு மதியை அன்றுதான் பார்க்கிறான். அன்று தனிமையில் அவளைப் பார்த்தவன் அவளிடம் “உன்னிடம் பேச வேண்டும். “ என
அவளோ “தெரியும். நீங்கள் மாமா கட்டாயத்தால்தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தீர்கள். நமக்குள் ஒன்றும் கிடையாது அதுதானே. அதை நான் புரிந்து கொண்டேன். மேலும் என் நிலையம் அதுதான்” என்று கூறி விட்டு கீழே போர்வை விரித்து படுத்தாள்.
அவள் சொல்லும் வரை அந்த நினைவு இல்லாதவன், அவள் சொன்ன பின்னே அவளுக்கும் திருமணம் என்று பத்திரிகை வந்ததே என்று நினைவு வந்தது. அவள் அவனிடம் ஒன்றும் கேட்கததால், அவனும் அவளை பற்றி ஒன்றும் கேட்கவில்லை.
திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, அவனுடைய விபத்திற்கு பின் தான் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் அவனுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன் தன் மீனாட்சி அத்தை கூறிய, ஆதியை பற்றி எனக்கு தெரியும். மதி ஆதியை தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டாள். இந்த இரண்டு செய்திதான் அவனை அவன் கூட்டை விட்டு வர வைத்தது.
அந்த இரவு வேளையில் இதை எல்லாம் எண்ணியபடி ஆதி படுத்துக் கொண்டிருந்தான். மேலும் இன்று அவன் மதியோடு உணர்ந்த அந்த நெருக்கம், அவளும் அதை விரும்புவது அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடரும்
{kunena_discuss:903}