“அறிவு திலகமே நான் பிறந்ததுல இருந்தே சாயந்தரம் தான்டா இருட்டுது….”
“அது…. நைட் வெளிய போனா சரியா இருக்காதுல்ல மகி குட்டி…”
“போடா நீயே பிரவாயில்ல….அவங்க கூட்டிட்டுப் போய்ட்டாலும்…. சும்மா உன்ன கிண்டினேன்…ஆனாலும் நீ நல்லவன் தாண்டா…. உனக்கு பொண்ணு பார்க்க போறதைவிட நான் அவர் கூட வெளிய போறது முக்கியமா படுதே…”
“நான் அவ்ளவுலாம் நல்லவன் கிடையாது மகி குட்டி….உன்னை விட்டுட்டு தியா வீட்டுக்கு போய்ட்டு வந்துடலாம்னு நினச்சேன்…”
“அட பாவி நீ ரொம்ப முத்திட்டடா”
“ஹி ஹி நன்றி…. சரி சொன்னத மறக்காம செய்து முடி….பை”
ஆக லன்ச் முடியவும் பெர்மிஷன் போட்டு இவளுக்கான காரில் “என் கூட முக்கியமான ஷாப்பிங் வா” என திரவியாவை இழுத்துக் கொண்டு போய் மித்ரனுக்கு ஒரு வாட்ச் வாங்கிக் கொண்டு
“அவ்ளவுதான் ஷாப்பிங் நீ வீட்டுக்கு கிளம்பு” என “இதுக்குத்தான் மதியமே இழுத்துட்டு வந்தியா நீ” என முறைத்த திரவியாவை
‘இன்னும் கொஞ்ச நேரத்துல இதுக்காக என்னை நீயே மனம் நிறஞ்சு புகழ்வ’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டே ஆட்டோவில் பேக் செய்து அனுப்பிவிட்டு,
மீண்டும் மித்ரனைப் பார்த்து இந்த கிஃப்ட்டை கொடுத்துவிட்டு கிளம்பலாம் என்ற நினைவில் இவள் அவனை அழைக்க நினைத்த நேரம்,
காரின் பின் சீட்டில் இருந்த இவளது கண்ணில் படுகிறாள் சாலையின் ஓரத்தில் அந்த பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அவள்….விஜிலா… அதுவும் கையில் சின்னஞ் சிறிய பிஞ்சுக் குழந்தையுடன்….
விஜிலா இவளது காலேஜ் தான். இவளுக்கு சீனியர்…. இவளைப் போல் ஹாஸ்டலில் தங்கிப் படித்தவள் அவள்.
அந்த வகையில் அறிமுகம் என்ற நிலை தாண்டி ஆழ்ந்த நட்பு என்ற நிலைக்கு குறைவான ஒரு உறவு நிலை உண்டு இருவருக்கும். அதன் பின் பிஜி படிக்க விஜிலா யூஎஸ் சென்றதாக நியூஸ். மற்றபடி அவளைப் பற்றி எந்த தகவலும் கிடையாது இவளிடம்.
முன்பு இவள் பார்த்த விஜிலாவிற்கும் இன்று பார்க்கும் விஜிலாவிற்கும்….ஓ மை காட்…. என்னவாயிற்ரு இவளுக்கு?
எப்போதும் ஒரு துள்ளலும் துடிப்புமாக இருப்பவள் விஜிலா…. எல்லாத்திலும் ஃபர்ஸ்ட் படிப்பாகட்டும்….மற்ற ஈவன்ட்ஸாகட்டும்….எல்லோருக்கும் உதவும் குணமும் அதிகம்….இவளை போல் அவளுக்கும் ஒரு அண்ணா உண்டு….. ஆனால் அப்போதே அவளுக்கு அப்பா இல்லை என்று ஞாபகம்… வசதியான குடும்பம்….
இப்போ வாடி வதங்கி…. அதுவும் குழந்தையோடு இந்த வெயிலில் பஸ்ஸ்டாப்பில் நிற்கிறாள்…. காரை நிறுத்தி அவளிடமாக சென்றாள் மனோஹரி.
“ஹாய்….நீங்க விஜிலா தானே…”
இவள் கேள்வியில் தூக்கி வாரிப் போட பார்த்தாள் அவள். தெரிந்தவர்கள் பார்வையில் பட அவள் விரும்பவில்லை என நிச்சயமாக புரிகிறது இவளுக்கு.
“நீ….மனோ……மனோஹரி தானே… ஹாய்” இப்படி சோர்வாக கூட இந்த விஜிலாவால் பேச முடியுமா? மனோவின் கண் அதுவாக விஜிலா கையிலிருந்த குழந்தையிடம் போகிறது. அத்தனை குஞ்சு குழந்தை. பிறந்து எத்தனை நாள் இருக்கும்???
“வாங்க விஜிலா நான் உங்களை ட்ராப் பண்றேன்….”
“இல்லை மனோ…” மறுத்தாலும் காய்ந்திருந்த அவள் உதடுகளுடன் சோர்ந்திருந்த அவள் முகத்தை திருப்பி இவள் சென்றிருந்த காரைப் பார்க்கிறாள் தான் அவள்.
சட்டென உரிமையாய் அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள் மனோ. இவ்வளவு குட்டிக் குழந்தையையெல்லாம் தூக்கிப் பழக்கமில்லைதான். சற்று உள்ளுக்குள் உதறலும் கூடத்தான்…. ஆனாலும் விஜிலாவை இப்படி விட்டுவிட்டுப் போக இவளால் முடியாது.
“இல்ல மனோ” என வாய் மறுத்தாலும் அவள் உடல் சோர்வு தன்மானத்தை தாண்டி தள்ள இவளைப் பின் தொடர்ந்தாள் விஜிலா.
சட சடவென மனோவிற்கு புரிகிறது….குழந்தை பிறந்தே சில நாட்கள் தான் ஆகி இருக்க முடியும்… அதோடு விஜிலா சாப்பிடாமல் பசியிலிருக்கிறாள்….
காரை மனோ அடுத்து நிறுத்த சொன்னது அருகில் இருந்த ஹோட்டலில் தான்…. மறுத்துக் கொண்டே வந்தாலும் விஜிலா சாப்பிட்டாள்.
பார்த்துக் கொண்டிருந்த மனோவிற்கு விஷயம் என்னவென்று புரியும் முன்னும் விஜிலாவின் கணவனின் மேல் கடுங்கோபம் கொதித்துக் கொண்டு வந்தது.
எது என்னதாய் போனாலும் விஜிலாவின் மீது தப்பே இருந்திருந்தாலும் சாப்பாடுக்கு வழி இல்லாமலா ஒருவன் தன் மனைவியை அதுவும் அப்பொழுதுதான் ப்ரசவம் ஆகி இருக்கும் மனைவியை தெருவில் விடுவான்?
சாப்பிட்டு முடித்து இவளைப் பார்த்த விஜிலாவின் கண்களில் அதுவாக வடிகிறது கண்ணீர்….