“நீ எங்கூட இல்லன்னு நான் நினைச்சதே இல்ல… நீ எப்பவும் எங்கூட இருக்குறேன்னு தான் நினைச்சிப்பேன்… சரி அதெல்லாம் விடுடா… வீட்டுல அப்பா, பாட்டி எல்லாரும் எப்படி இருக்குறாங்கடா?...”
அவன் கேட்டதும் எதுவும் பேசாமல் இருந்தவளை கவனித்தவனுக்கு, எதுவோ சரியில்லை என தோன்ற,
“சரி வாடா… அப்படியே பேசிட்டே நடக்கலாம்…” என அவளுடன் நடந்தான் எதுவும் பேசாது… அவளுக்கும் அந்த மௌனம் அந்த நிமிடத்தில் தேவையாய்…
கால் போன போக்கில் நடந்து கொண்டே சென்றவர்கள், நீண்ட நேரத்திற்கு பிறகு, ஒரு பார்க்கினை பார்க்க, மகத் அவளை அங்கு அழைத்து சென்றான்…
“கிருஷ்ணா… என்னாச்சுடா?...” என அங்கிருந்த பெஞ்சில் அவளருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து அவன் கேட்க, அவள் அழ ஆரம்பித்தாள்…
“என்னம்மா?... சொன்னாதான தெரியும்… என்னடா ஆச்சு?... அப்பாவுக்கு எதாவது உடம்புக்கு சரியில்லையா?...”
“அவர் இறந்துட்டார் சகி…” என்றாள் கரகரப்பான குரலோடு…
“என்ன???...” என்ற அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தவனுக்கு எப்படி ஆறுதல் சொல்ல என்றே தெரியவில்லை…
“எப்படா?...” என கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொண்ட குரலில் அவன் கேட்டு முடித்த போது,
“இந்த ஊருக்கு வந்த கொஞ்ச நாளிலேயே அவர் ஹார்ட் அட்டாக்கில்….” என சொல்ல முடியாமல் வார்த்தைகளை அடக்கியவளின் முன் ஒரு நிமிடம் கூட யோசிக்காது மண்டியிட்டவன்,
“அழாதடா… ப்ளீஸ்… நீ என்னைப் பார்க்குற வரை சந்தோஷமா தான இருந்த… இப்போ என்னை பார்த்ததால தான எங்கிட்ட இதெல்லாம் சொல்லி நீ அழற மாதிரி ஆகிடுச்சு… நான் உன்னை மறுபடியும் பார்க்காமலே இருந்திருந்தா நீ இப்போ அழுதுருக்கமாட்டல்லடா…” என வேதனையும் வலியுமாக அவன் சொல்ல,
“என்னைப் பாருங்க சகி…. பாருங்க…” என்ற அழைப்பில் நிமிர்ந்தவனின் மேல் அவளது கண்ணீர்த்துளி பட,
“அவர் இறந்தது வருத்தம் தான்… நான் இல்லன்னு சொல்லலை… அவர் என் மேல என்னைக்குமே பாசமா இருந்ததில்லை… ஊருக்கு கிளம்புற நேரத்துல நான் பாட்டி கிட்ட தூக்க கலக்கத்துல சண்டை போட்டுகிட்டிருந்தப்போ, அவளை ஏன்ம்மா பாடா படுத்துற விடேன்… அப்படின்னு சொன்னார்… அது தான் எனக்கு தெரிஞ்சு எனக்காக அவர் பரிஞ்சு பேசின முதல் வார்த்தை… அதுக்குப்பிறகு இந்த வந்த பின்னாடியும் அதே பழைய கதை தான்… எந்த ஒரு மாற்றமும் இல்லை… ஆனா இறந்து போன அவர் உடலைப் பார்த்தப்போ, தானாவே எனக்கு அழுகை வந்துச்சு… என்ன இருந்தாலும் எனக்கு உயிர் கொடுத்தவர் இல்லையா… தானாவே என் கண் கலங்கிடுச்சு… ஆனா அந்த செகண்ட் உங்களை தான் என் மனசு தேடுச்சு… நீங்க என் பக்கத்துல இருந்திருந்தா எனக்கு தைரியம் சொல்லியிருப்பீங்கல்ல… சகி… ஆனா என்ன பண்ண முடியும்… நீங்க அங்கேயும், நான் இங்கேயும் இருந்தோம்… அதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும், நீங்க என் பக்கத்துல இருக்குற மாதிரி நினைச்சிகிட்டு எல்லாம் உங்ககிட்ட சொல்லுவேன்… நீங்களும் கேட்டுட்டு எனக்கு பதில் சொல்லுவீங்க தெரியுமா?...” என சற்றே புன்னகையோடு அவள் சொல்ல,
அவனும் அவள் இல்லாது, அவளுடன் தான் உரையாடுவதை பற்றி சொல்ல, அவள் சிரித்தாள்…
பின், “என்னை தேடியிருப்பீங்கல்ல சகி ரொம்ப…???... எனக்கு தெரியும்… என்னை தேடியிருப்பீங்க… உங்க கூடவே இருப்பேன்னு சொல்லிட்டு உங்களை விட்டு நான் பிரிஞ்சிட்டேன்… சாரி சகி…” என மீண்டும் அழுதவளிடம்,
“என்னை விட நீதானடா என்னை அதிகம் தேடியிருப்ப… எனக்கு அது தெரியாதுன்னு நினைக்குறியா?... திட்டிகிட்டே இருந்தாலும் அவர் உன்னோட அப்பாதான… அப்படி இருக்கும்போது அவர் இல்லாத வெறுமை உன்னை சூழும்போது நான் உன் பக்கத்துல இல்லாம போயிட்டேனேடா… என்னை மன்னிச்சிடுடா…” என அவன் வருத்தம் கொள்ள,
அவன் முகத்தினை தன் கைகளில் ஏந்தியவள், “அவர் எங்கூட இல்லன்னு யாரு சொன்னா?...” என அவள் கேட்டதும்
அவள் செய்கையையும், அவள் வார்த்தைகளையும் புரியாது பார்த்தவன்,
“இதோ இருக்குறாரே என் முன்னாடி… என் தோப்பனார்…” என அவனை பார்த்து கண் காட்டி சொல்ல, அவன் விழிகள் கலங்க ஆரம்பித்தது…
“அறியாத வயசிலயே என்னைக்கோ எனக்கு அம்மா ஆனீங்க… அப்புறம் பாசமான தகப்பனா கூட… இப்போ உருவமா என் கண் முன்னாடி இருக்குறீங்க அன்போட மொத்த வடிவமா… இதை விட என்ன சகி எனக்கு வேணும்?... எனக்கு எல்லாமாவும் நீங்க இருக்கும்போது என்னை என்ன கஷ்டம் சூழ்ந்துட போகுது… அப்படியே சூழ்ந்தாலும் அதிலிருந்து நீங்க என்னை வெளியே கொண்டு வந்துட மாட்டீங்களா என்ன?...” என உளமாற அவள் சொல்லியதும், அவன் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வழிந்து அவள் கைகளில் விழ,
“என்ன சகி நீங்க?... என்ன அழக்கூடாதுன்னு சொல்லிட்டு… இப்போ நீங்க அழறீங்க… ஹ்ம்ம்… ப்ளீஸ் சகி… அழாதீங்க… எனக்காக….” என அவள் கூறியதும், அவன் அவளையே பார்த்தான்…
“நீங்க அழுதா எனக்கும் அழுகை வரும்… இனி உங்க கூட தான் இருப்பேன்… நிச்சயமா உங்களை விட்டு போக மாட்டேன்…” என்றதும், அவன் புன்னகைத்தான்…
“லூசு சகி… இப்படி சிரிக்கும்போது எவ்வளவு அழகா இருக்கு… அதை விட்டுட்டு சின்னப்பிள்ளைத்தனமா அழுதுகிட்டு…. லூசு…” என்றபடி சட்டென அவன் முகத்தை பிடித்திருந்தபடி அவன் நெற்றியில் அவள் முட்டி சிரிக்க, அவனுக்குள் முதல் முதலாக பிரபு சொன்ன வார்த்தை எட்டி பார்த்தது… “லவ் பண்ணுறீயா என்ன?...” என…