15. காதல் பின்னது உலகு - மனோஹரி
நிலவினிக்கு காலையிலேயே விழிப்பு வந்துவிட்டது. நல்லபடியாக தூங்கிய உணர்வில்லை என்றாலும் நமநமத்துக் கொண்டிருந்த மனது அதுவரைக்குமே அரைகுறை தூக்கத்தையே அனுமதித்துக் கொண்டிருந்ததால் அதற்கு மேல் தூங்க முடியாது என தோன்றிவிட எழுந்துவிட்டாள்.
மெல்ல எழுந்து அறையிலிருந்த அட்டாச்ட் பாத்தில் மெல்லவே குளித்து உடை மாற்றி வந்தாலும் நேரம்தான் நகழ மறுத்தது. அதற்கு மேலும் அடைத்திருந்த அறைக்குள் அடைந்து கிடக்க மனமின்றி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் அவள்.
அவளையும் மீறி அவர்களுக்கான இரவிற்கென அலங்கரிக்கப் பட்ட அறையின் பக்கம் பார்வையை ஓட்டினாள். அதன் கதவு திறந்திருந்தாலும் ஆள் நடமாட்டம் எதையும் உணர முடியவில்லை இவளால். யவ்வன் தூங்குவானாய் இருக்கும்.
அவன் விழித்து வருவதற்குள் கீழ் இறங்கிப் போய்விட தோன்ற தரை தளத்திற்கு இறங்கி வந்தாள் இவள்.
அங்கும் பெரிதாக ஆள் நடமாட்டம் என்று எதுவும் இல்லை……. ஆனாலும் வீட்டின் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. சமயலறைப் பகுதியிலிருந்து கடமுடா சத்தம். ‘ஆள் இல்லாத வீட்டுக்குள்ள யார்டா அது சத்தம்?’ மெல்ல எட்டிப் பார்த்தாள். அங்கிருந்த ஸ்டோர் ரூமிலிருந்து எதையோ சிறு மூடையாக இழுத்துக் கொண்டிருந்தான் இவளது கொழுந்தன் அபயன்.
“குட் மார்னிங் அண்ணி…..இதுக்குள்ள ரெடியாகிட்டீங்களா….? காலைல என்ன சாப்டுவீங்க ? காஃபியா டீயான்னு தெரியலை…. ஃப்ளஸ்க்ல பாயில்ட் மில்க்கும்….ஹாட் வாட்டரும் அம்மா கொடுத்துவிட்டாங்க…...காஃபி டீ எதுனாலும் மிக்ஸ் செய்துக்கலாம்…. டைனிங் டேபிள்ல இருக்கு.. சீக்கிரமே ப்ரேக் ஃபாஸ்டும் உங்க ரெண்டு பேருக்கும் இங்கயே அனுப்பி வச்சுடுவாங்க” இவளைப் பார்க்கவும் செய்து கொண்டிருந்த வேலையைவிட்டுவிட்டு அவனது ட்ரேட் மார்க் நட்புடன் அவன் ஆரம்பிக்க
அவனைப் பார்க்கவும் வினிக்கு நேற்றைய நிகழ்வின் நினைவில் சற்றாய் வந்த உறுத்தல் உணர்வும் அவனது இந்த இயல்பு பேச்சில் மறைய
“குட்மார்னிங்… என்ன யாரையும் காணோம்? எல்லோரும் எங்க? நீங்க காஃபியா டீயா என்ன சாப்டுவீங்க..?” எனக் கேட்டவாறு அருகில் டேபிளில் இருந்த ஃப்ளாஸ்குகளை எடுத்து காஃபி கலக்க தொடங்கினாள் இவள்.
“இன்னைக்கு மதியம் பலகாரபந்தி அண்ணி….நெருங்குன சொந்தகாரங்களுக்கு மட்டும்….. நேத்து ரிசப்ஷன் நடந்துச்சுல்ல அங்கதான் சாப்பாடு……. நம்ம வீட்ல இப்ப எல்லோரும் அங்கதான் இருக்காங்க….சமையல் நடந்துகிட்டு இருக்கு…..ரவை இங்க மாட்டிகிட்டு….அதான் எடுத்துகிட்டு இருக்கேன்…” விளக்கியவன்
“எனக்கும் காஃபிதான் அண்ணி…. அதி யவி மாதிரிலாம் ஒன்னும் சாப்டாம ஜாகிங் போக எனக்கு முடியாது….அவங்க ரெண்டு பேரும் கொடைக்கானல் ஸ்கூல் பார்டி… அந்த பழக்கத்துல காலைலயே லொங்கு லொங்குன்னு ஓடுவாங்க…..அதுல அங்க மாதிரி ஏறிப் போக எருமை இல்லையேன்னு வருத்தம் வேற பட்டுப்பாங்க…” சொல்லியபடி அருகிலிருந்த சமயலறைக்குள் அவன் செல்ல
‘எருமையில ஏறிப் போறதா?’ இங்கு மனக் கண்ணில் தன்னை மணந்தவனை அப்படி நினைத்துப் பார்க்க புரையேறுகிறது நிலவினிக்கு…
“ஐயையோ அண்ணி பயந்துடீங்களா? எருமைனு நான் சொன்னது ஹார்ஸை…. அவங்க ஸ்கூல்ல மார்னிங் ஹார்ஸ் ரைடிங் போவாங்களாம்…..இங்க நம்ம ஊர்ல ஹார்ஸ்ல ஏறி தெருவுல போனா நாய் துரத்தும்….” பிஸ்கட் பாக்கெட்டை கையில் எடுத்த படி திரும்பி வந்தான் அபயன்.
சின்னதாய் முறைத்தாள் இவள். கூடவே அதுவாக வருகிறது சிரிப்பு…
அதில் அவனிடம் பேச இருந்த தயக்கமும் முழுதாய் போக
“பவிட்ட பேசிட்டீங்களா? அழுதுட்டே கிளம்பினா…..” என கேட்க நினைத்ததை நேரடியாக கேட்டுவிட்டாள்.
“இல்ல அண்ணி……இப்ப நான் கால் பண்றது சரியா இருக்காது…..அதோட அவ எடுக்கவும் மாட்டா…….நீங்களே பேசிட்டீங்கன்னா சரியா இருக்கும்னு பட்டுது….இன்னைக்கு இல்ல நாளைக்கு டைம் கிடைக்கிறப்ப பேசுங்க….” இவளது முகத்தைப் பார்த்தான் அவன்.
அவன் பதிலில் முகம் சுண்டிவிட்டது நிலவினிக்கு. ‘ஐயோ பவி இப்ப வரைக்கும் அழுதுட்டுல இருப்பா?’ மனம் பதறுகிறது இவளுக்கு.
“நான் இப்பவே பேசிடுறேன் அபை…. சாரி என்னாலதான் இப்டிலாம்… உங்களுக்கே தெரியும் நம்ம ஊர்ல இந்த மாதிரி விஷயம்னா பேரண்ட்ஸ் ஒருத்தர்க்கு ஒருத்தர் எவ்ளவு சண்டை போடுவாங்கன்னு…..பவி அப்பா வேற லவ் மேரேஜ்னா கண்டிப்பா சம்மதிக்கவே மாட்டாங்க….. பவியும் அவ அப்பாவ மீறி எதையும் செய்துக்க மாட்டா…..அதான் தேவையில்லாம எல்லோருக்கும் ஏன் கஷ்டம்னு பார்த்தேன்….”
“என்ன அண்ணி இதெல்லாம் புரியாமலா…? நம்ம செய்ற எல்லாத்துக்கும் தலையாட்டுறவங்களுக்கு நம்ம மேல எந்த அக்கறையும் இருக்க முடியும்னு எனக்கு தோணலை…….. நமக்கு எது நல்லது….. நம்மளால எது முடியும் முடியாதுன்னு பார்த்து கைட் செய்றவங்க தான் ஃப்ரெண்ட்…. அந்த வகையில் நீங்க பவிக்கு ரொம்பவே நல்ல ஃப்ரெண்ட். நீங்க தேவையில்லாம இதுக்காக குழப்பிகிடாதீங்க…..ஏற்கனவே நீங்க சந்தோஷமா இருக்க வேண்டிய அக்கேஷன்ல, நாங்க உங்கள பயம் காட்டிடமோன்னு எனக்கு கஷ்டமா இருக்கு….. நீங்க ஃப்ரீயா விடுங்க…..