10. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி
பிரயுவின் கருத்தை கேட்ட அவள் தந்தை, சற்று யோசித்தார். பின்பு பிரயுவிடம்,
“இருக்கட்டும்மா.. எதற்கும் இன்னும் ஒரு நாள் கழித்து நம் முடிவு சொல்லலாம். நான் அதற்குள் நம் பெரிய மாப்பிள்ளையிடமும் கலந்து பேசி விடுகிறேன்.” என்று முடித்தார்.
அதை கேட்டவள் தன் தங்கைகளிடம் தனியாக “எதற்கும் இப்போதைக்கு எந்த messageக்கும் பதில் கொடுக்க வேண்டாம். இரண்டு நாட்கள் கழித்து பேசி பார்க்கலாம்.. அது வரை இருவரும் காத்திருங்கள். “ என்று விட்டு சென்றாள்.
ப்ரயு வீட்டிற்கு சென்ற போது அவள் மாமியார் பையன் வீட்டார் பற்றி விசாரிக்க, அந்த அம்மா பேசியதை சொன்னாள்.
அதை கேட்ட அவர் “ஹ்ம்ம்.. உன் அப்பா எப்படி அதற்குள் இரண்டு கல்யாணம் செய்ய முடியும்? இந்த விவரம் எல்லாம் அந்த அம்மா பெண் பார்க்க வரும் முன்னால் பேசி இருக்க வேண்டும் .. என்னவோ போ .. ஒன்றும் புரியவில்லை.. “ என்று சென்று விட்டார்.
பிரயுவின் மனம் யோசனையில் கழிந்தது. அன்று இரவு ஆதி, பிரயுவிற்கு பேசும் முன், அவன் மாமனார் , அந்த பிள்ளை வீட்டார் சொன்னதை சொல்ல, அவனும் சற்று நிதானிக்கலாம் என்றே கூறினான்.
பிரயுவிற்கு பேசிய ஆதி, வழக்கமான பேச்சுக்கள் முடிந்த பின்,
“ஏன்.. ப்ரயு? உன் அப்பாவிடம் அவர்கள் திருமணத்திற்கு உடனே சம்மதம் சொல்ல சொன்னாயா? அப்படி என்ன அவசரம்.. ? அந்த அம்மா பேச்சை பார்த்தால் கொஞ்சம் கண்டிப்பனவர்களாக தெரிகிறது. உன் தங்கைகளுக்கும் இப்பொழுதுதானே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கிறீர்கள். வேறு இடம் பார்கலாமே ..?” என்று கேட்டான்.
“இல்ல ஆதிப்பா... அவர்கள் நால்வரும் இந்த பெண் பார்க்கும் படலத்தையே கிட்ட தட்ட உறுதி செய்வதாக எண்ணி, தங்கள் கனவுகளை வளர்த்து விட்டார்கள்.. அதனால் அவர்கள் இன்று இருந்த அரை மணி நேரத்தில், தங்கள் வாழ்க்கை பற்றி திட்டமிட்டு விட்டதாக தோன்றுகிறது. இனிமேல் நாம் வேறு வரன் பார்த்தல் என் தங்கைகள் இருவரும் முழு மனதோடு சம்மதிப்பார்கள் என்று தோன்றவில்லை. “
“எப்படி அவ்வளவு உறுதியாக சொல்லுகிறாய்?”
“அவர்கள் அங்கே இருந்து சென்ற இரண்டு மணி நேரத்தில், இருவருக்கும் அந்த பையன்கள் கிட்டத்தட்ட இருபது message அனுப்பி இருக்கிறார்கள். இன்று இரவே போனில் பேச வேண்டும் என்று நினைதிருக்கிறார்கள். நான் என் தங்கைகளிடம் சொல்லி விட்டு வந்திருப்பதால் அவர்கள் பேச மாட்டார்கள் என்றாலும், அந்த பையங்க விடுவார்கள் என்று தோன்றவில்லை. “
“அந்த பசங்க தொந்தரவு செய்தால் நாம் அதை போலீஸ் மூலமாகவோ, அவர்கள் பெற்றவர்கள் மூலமாகவோ பேசி தீர்த்துக் கொள்ளலாமே”
“ஒருவேளை அவர்கள் உறுதியாக இருந்து என் தங்கைகளை திருமணம் செய்து கொண்டால், நாளைக்கு அவர்கள் வாழ்க்கையில் இது பிரச்சினையாக தோன்றும்.”
“ஹ்ம்ம்.. எனக்கு என்னவோ நீ தேவை இல்லாமல் கவலை படுகிறாய் என்று தோன்றுகிறது. உன் தங்கைகள் பேசவில்லை என்றால், அவர்கள் இவர்களை மறந்து விட்டு வேறு பெண் பார்க்க சென்று விடுவார்கள் பார்”
“பார்க்கலாம்” என்ற ப்ரயு முடித்த பின், இருவரும் வேறு சில விஷயங்கள் பேசி விட்டு வைத்தனர்.
மறுநாள் ப்ரயு எதிர்பார்த்தது போல் அவள் உணவு இடைவேளை போது, அவளுக்கு போனில் சொல்லி விட்டு, அந்த இரு பையன்களும் அவளை பார்க்க வந்தனர்.
ப்ரியாவுடன் அவர்களை பார்க்க சென்றாள் ப்ரயு..
“ஹலோ.. சிஸ்டர் .. “என்றார்கள்.
“ஹலோ “ என்றவுடன்
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். “ என்றான் அருண்..
“சொல்லுங்க... “
“அம்மா .. பேசினது எங்களுக்கு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும். நாங்க வீட்லேர்ந்து கிளம்பும் போது கிட்ட தட்ட உங்க வீட்டு சம்பந்தம் முடிவான மாதிரிதான் சொன்னாங்க .
அம்மா வேற எதுவும் பெருசா எதிர் பார்க்க மாட்டாங்க...கிராமத்துலேர்ந்து வந்த முதல் தலைமுறை அவங்க .. அதனால் கொஞ்சம் பழைமைவாதி ... மற்றபடி நல்லவங்க...
அவங்க மறுப்பாங்க என்ற எண்ணமே எங்களுக்கு தோணல.. அம்மாகிட்ட நேரடியா உங்க தங்கச்சிங்க ரெண்டு பேரையும் பிடிச்சிருக்க்குன்னு சொல்லிட்டோம்.. அதுனாலதான் நாங்க உங்க தங்கச்சிக்ட்ட பேசும் போது photo எடுத்தது, போன் பேசுனது எல்லாமே.. அதுக்காக சாரி கேட்டுக் கொள்கிறோம்..
ஆனால் ப்ளீஸ் இந்த கல்யாணத்த எப்படியாவது உங்க அப்பா கிட்ட பேசி நடத்த முடியுமா.. உங்க தங்கச்சி இல்லைனா வாழ்க்கையே இல்லைன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டோம்.. ஆனால் எங்க வாழ்க்கையோட கடைசி வரைக்கும் ஒரு ஓரத்தில் இவங்கள மறக்க முடியாமல் தவிப்போம்... வர பொண்ணுகிட்ட இவங்கள ஒப்பிட்டு பார்த்து மனசு தவிக்கும். இது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கறோம்..