“சம்பந்தி, நேற்று நீங்கள் எங்கள் மூத்த மகளை பற்றி பேசியதைதான் பேச வந்தோம். நீங்கள் நேற்று அவளை ஏதோ மூன்றாம் மனுஷி போல் எண்ணி பேசினீர்கள். அவள் எங்கள் மூத்த மகள். உங்கள் வருங்கால மருமகள்களுக்கு அக்கா. பொறுப்பானவள். அவள் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவள் பொறமை படுவாள் என்றீர்களே. இப்படி யோசித்து பாருங்கள். அவள் கணவர் அவளை நம்பி அவர் அம்மாவையும், தங்கையையும் விட்டுப் போயிருக்கிறார். அப்படி என்றால் அவள் மீது அவருக்கு எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். அதோடு அவரின் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக, அவர் வெளிநாடு சென்ற பின் ஒருமுறை கூட அவள் மாமியாரை தனியாக விடாமல் பாதுகாக்கிறாள். அப்படிப்பட்டவளை நேற்று அவள் தங்கைகளின் நிச்சயத்தில் கலந்து கொள்ள விடாமல் கிளப்பி விட்டீர்களே? அவள் மாமியார் அந்த இடத்தில் நிலைமையை சமாளிப்பதற்காக, அவர் கலந்து கொண்டு விட்டு, என் மகளை அனுப்பி விட்டார். அவர் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் ஒன்று அவர்கள் எங்கள் உறவை விட்டு இருப்பார்கள் இல்லை உங்களோடு சண்டை போட்டு இருப்பார்கள். நீங்கள் கொஞ்சம் உணர்ந்து கொள்ள வேண்டும் .” என்று முடித்தார்,
ஏற்கனவே அன்று காலை அவர் மகன்கள் இருவரும் அவரிடம் பேசியது நினைவு வந்தது.
காலையில் அரவிந்த் அவரிடம்,
“அம்மா, உங்களிடம் ஒன்று பேச வேண்டும். நேற்று நீங்கள் நடந்து கொண்ட முறை சரியா?”
“நான் என்னடா சரியாக நடக்கவில்லை.?”
“எங்கள் வருங்கால மனைவிகளின் அக்காவை மண்டபத்தை விட்டு அனுப்பினீர்களே. அது சரியா?”
“ஏண்டா.. நம் உறவுக்காரர்கள் அப்படிதான் பேசி கொண்டார்கள் டா.. அவள் பொறமை பிடித்தவள் .. அவளால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று.”
“ஏன்மா யாரோ பேசுவதை எல்லாம் கேட்டு இப்படி நடக்கரீர்கள்?”
“யாரோ என்னடா? எல்லாம் நம்மை சேர்ந்தவர்கள்தான்.. அதிலும் அவள் நாத்தனாரின் மாமியார் தான் அப்படி பேசியது,”
“ஏன்மா... அந்த பெரியம்மாவை பற்றி உங்களுக்கு தெரியாது? உங்களை இப்படி தூண்டி நடக்க விட்டு, பின்னாடியே நீங்கள் இவ்ளோ மோசமானவர்கள் என்று எல்லாரிடமும் பேசுவார்கள். “
“தெரியும் டா.. ஆனால் அதுக்காக அவங்க அப்படி சொல்லும் போது எனக்கு பயமயிருந்தது.. அதான் அப்படி நடந்துகிட்டேன்.”
“அம்மா, நீங்கள் பார்த்து நடத்தி வைக்கும் கல்யாணம்தானே... நாங்களாக எதுவும் செய்யவில்லையே.. அப்போ நீங்களே அவர்களை மதிக்கவில்லை என்றால், நம் உறவுகள் எப்படி உங்கள் சம்பந்தி வீட்டார்களை மதிப்பார்கள்.?”
அப்போது அருண்,
“அம்மா, நீங்கள் ஒன்று யோசித்தீர்களா? நீங்கள் அனுப்பியது உங்கள் மருமகள்களின் அக்காவை.. யாரோ மூன்றாம் மனுஷியை அல்ல.. இது நாளைக்கு உங்கள் மருமகள் மனசை எப்படி பாதிக்கும் என்று? இந்த வீட்டிற்கு வரும் போது அவர்கள் மனதில் உங்கள் மேல் எப்படி நம்பிக்கை வரும்.?”
அரவிந்தும், அருணும் சேர்ந்து “நீங்கள் செய்திருக்க வேண்டியது அந்த பெரியம்மாவை மண்டபத்தை விட்டு அனுப்பியிருக்க வேண்டும்.. நேற்றே பவித்ராவையும், தாரிணியும் நாங்கள் ஒரு மாதிரி சமாளித்து வைத்திருக்கிறோம். இதே மாதிரி நீங்கள் கல்யாணத்தின் போதும் பிரச்சினை செய்வீர்கள் என்றால், எங்களால அவர்களை சமாளிக்க முடியாது. வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் திருமணம். அதில் மணமக்கள் நாங்களே சந்தோஷமாக இல்லை என்றால், பின் கல்யாணம் எப்படி நன்றாக நடக்கும்? இதையெல்லாம் யோசித்து பாருங்கள். அதற்கு பின்னும் நீங்கள் செய்ததுதான் சரி என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் இதுவரை உறவுகளை கட்டி காப்பத்தியவர் என்ற பெயர் கெட்டு விடும் பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று சொல்லியிருந்தனர்.
அவரின் கணவரும் முதல் நாள் இரவு அவரிடம் செய்த தவறை சீர்படுத்து என்று கூறியிருந்தார்.
இப்போது பிரயுவின் பெற்றோரும் அதே போல் பேசவே, தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ..? என்று வருந்தினார்.
பின்னர் பிரயுவின் பெற்றோரிடம், தான் ப்ரயு வீட்டாரிடம் பேசுவதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
அவர்கள் சென்ற பின் முதலில் பிரயுவின் வீட்டிற்கு போன் செய்தவர்.. ப்ரயு மாமியார் எடுக்கவும்,
“அக்கா... என்னை மன்னித்து விடுங்கள். நான் நேற்று நடந்து கொண்ட முறை தவறு.. கேட்பார் பேச்சை கேட்டு அப்படி நடந்து கொண்டு விட்டேன். இதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்.. கண்டிப்பாக கல்யாணத்தை நன்றாக நடத்திக் கொடுங்கள்.. உங்கள் பையனும் வந்து கல்யாணம் நடந்தால் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும்.. “ என்று பேச,
“மன்னிப்பு எல்லாம் எதற்கு? நீங்கள் புரிந்து கொண்டதே போதும். அப்புறம் உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. இந்த பிரச்சினையை கிளப்பி விட்டது என் மகளின் புகுந்த வீட்டார் என்று என் மகனுக்கு தெரிய வேண்டாம்.. யாரோ மூன்றாம் மனிதராக இருந்து விட்டு போகட்டும். அவனுக்கு தெரிய வந்தால் என் மகளின் மாமியாரிடம் நேரில் கேட்டு விடுவான். பிறகு சங்கடமாகி விடும் .. “ என்று கூற,