“நான் வரவா?....” என்ற பாவனையில் அவன் கைகாட்ட, “இரு… நானே வரேன்….” என்றபடி அவனைத் தேடி வந்து கொண்டிருந்தான் அவனுடன் பணிபுரியும் அவனது நண்பன் இஷான்…
“ஏண்டா… கொஞ்சம் வெயிட் பண்ண மாட்டீயா?... நான் தான் வரேன்னு சொல்லியிருந்தேன்ல… அதுக்குள்ள இப்படி தனியா வந்துட்ட?...” என ஜெய்யை முறைத்தபடி வந்து நின்றான் இஷான்…
அவனிடம் எதுவும் பேசாது, திரும்பி தன் வேலையை கவனிக்க தயாரான போது,
“டேய்… நில்லுடா….” என்றவன் அவனை திரும்ப விடாது அவன் இரு தோளினையும் பிடித்து
“கேட்குறேன்ல… நீ பாட்டுக்கு எதுவும் சொல்லாமல் இருந்தா என்ன அர்த்தம்?...” எனக் கேட்க, ஜெய் அவனது கைகளை தட்டிவிட்டு விட்டு அங்கிருந்து நகர, இஷானும் அவனை பின் தொடர்ந்தான்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "விடியலுக்கில்லை தூரம்.." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
ஜெய்யைத் தொடர்ந்து செல்லும் இஷானை முறைத்த தைஜூ, “வந்துட்டா இந்த நந்தி?... சே… கூட கொஞ்ச நேரம் நிறுத்தி பேச வைக்க முடியலை… இதுல வெட்டி பந்தா வேற கொஞ்சம் வெயிட் பண்ண மாட்டியான்னு?... ஹ்ம்ம்… கும்….” என்று உதட்டை சுழித்து அவள் அழகு காட்டிக்கொண்டிருக்கையில், சட்டென்று திரும்பிய இஷானின் பார்வை அவளின் மீது பதிய, பட்டென்று குனிந்து கொண்டாள் தைஜூ…
அவள் குனிந்து கொண்டதை கவனித்தவன், தலை முடியில் கைகளை கோதிய வண்ணம், தோன்றிய புன்னகையை உதட்டிற்குள்ளேயே மறைத்துவிட்டு ஜெய்யின் பின் செல்ல, ஒரு ரவுண்டிலேயே அந்த பூங்காவின் வாசலுக்கு வந்திருந்தான் ஜெய்…
“என்னடா… அதுக்குள்ள ஜாக்கிங்க் முடிஞ்சதா?... ஒரு ரவுண்ட் தானடா ஓடியிருக்குறோம்…” என்ற இஷானின் வார்த்தைகளை காதினில் வாங்காது நேரே சென்று தான் வந்திருந்த அந்த பைக்கை நோக்கி அவன் செல்ல, இஷானும் வேறு வழியில்லாது அவனின் பின்னாடி வண்டியில் ஏறி அமர முயற்சிக்க,
“நீ வர வேண்டாம்… நீ உன் வேலையையும், ஜாக்கிங்கையும் முடிச்சிட்டே வா…” என ஜெய் சொல்ல, இஷான் அவனை முறைத்தான்…
“டேய்… ஜாக்கிங்க் தான் வந்திருக்கோம்… வேலை இனிதான் போய் பார்க்கணும்…” என்று கோபமாக இஷான் சொன்னதும்,
“ஓ… அப்போ, உள்ளே ஒரு வேலை பார்த்தீயே… அது என்னது?...” என கேட்டதும், இஷானின் முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகை ஒன்று உதித்தது…
“அது… அது… எதுவும் இல்லையே….” என இஷான் மழுப்ப,
“ஓ… எதுவும் இல்லை….” என்ற பாவனையில் ஜெய் கேட்க,
“டேய்… ஏண்டா… காலையிலேயே படுத்துற?... அது ஒன்னுமில்லை…” என்று மீண்டும் சமாளித்தான் இஷான்…
“இல்ல நீ அந்த ஒன்னுமில்லாத வேலையைப் பார்க்கத்தான் வந்தேன்னு நினைச்சேன்… அதான் ஒரு ரவுண்டுலேயே வெளியே வந்துட்டேன்…” என நிதானமாக ஜெய் சொல்ல,
“டேய்… ஏண்டா… நான் எதேச்சையா தான் திரும்பினேன்… ஆனா அதை நீ எப்படிடா பார்த்த?.. எனக்கு முன்னாடி தான நீ போயிட்டிருந்த?...” என ஆச்சரியத்துடன் இஷான் கேட்க,
“இதுல நீ ஆச்சரியப்படுறதுக்கு எதுவும் இல்ல… நாம பார்க்குற வேலை அப்படி….” என்றான் ஜெய் மீசையை லேசாய் உயர்த்தி…
“டேய்… போலீஸ்காரனுக்கு முதுகிலேயும் கண்ணு வேணும்னு சொல்லுவாங்க… அது உண்மைதான்… ஆனா எனக்கென்னமோ உனக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குன்னு தான் தோணுது…” என்றதும்,
“ஹ்ம்ம்….” என்றபடி லேசாய் ஜெய் தோள்களை குலுக்க, “டேய்… நீ ஒத்துக்கொள்ளாட்டாலும் அதுதான்டா உண்மை… யாருகிட்ட எது தப்பினாலும் தப்பும்… ஆனா உன்னோட நெற்றிக்கண் பார்வையில இருந்து எதுவும் தப்ப முடியாது…” என சொல்லிவிட்டு ஜெய்யை அவன் பார்க்க, ஜெய் கைகளை மார்பின் குறுக்கை கட்டியபடி பைக்கின் மீது சாய்ந்து நின்றான்…
“ஆனாலும், உன் பார்வைக்கு ஒரு விஷயம் தப்புச்சா?... இல்ல நீ கண்டும் காணாத மாதிரி இருக்குறீயா?... அது மட்டும் தான் எனக்கு புரியலை…” என பொடி வைத்து இஷான் சொன்னதும்,
“ஹ்ம்ம்… வெல்… நான் இன்னைக்கு வந்ததே லேட்… சோ மை ஜாக்கிங்க் டைம் இஸ் ஓவர், அன்ட் ஐ ஹவ் டூ லீவ் நௌ….” என சொல்லிவிட்டு எழுந்தவன், பைக்கில் சாவி வைத்து திருக,
“ஹ்ம்ம்… இப்படியே எத்தனை நாள் பதில் சொல்லாம இருப்பன்னு நானும் பார்க்குறேண்டா…” என்றவன்,
“வண்டியை ஸ்டார்ட் பண்ணித் தொலை…” எனவும்,
“இங்க வரும்போது எப்படி வந்த?...” என கேள்வி கேட்டான் ஜெய்…
“அது… நான்… லிப்ட் கேட்டு வந்தேன்…” என இஷான் சொல்லியதும்,
“அப்போ அப்படியே லிப்ட் கேட்டே வீட்டுக்குப் போ…” என்றபடி ஜெய் உதைத்த உதையில், அவன் வண்டி கிளம்பிவிட்டது என உள்ளே அமர்ந்திருந்த சதியின் காதுகளில் தெளிவாக கேட்டது அந்த சத்தம்…
“டேய்… ஜெய்… நில்லு…” என கத்திக்கொண்டே சென்றவன் மூச்சுவாங்கி நின்றது தான் மிச்சம்…
சதியின் பார்வை வாசலிலேயே இருக்க, “ஹேய்… ஆள் போய் அரை மணி நேரம் ஆச்சு… இன்னும் வாசலையே ஏன் பார்த்துட்டு இருக்குற?...” என்ற தைஜூவின் கேள்வியில் அவளைப் பார்த்தவள், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,
“ஈஸ்வரா தான தைஜூ?????...” என்றபடி முறைக்க, தைஜூவிற்கு பகீர் என்றிருந்தது…