அன்று ஜீவன் காய்ச்சலில் துவண்டு போயிருந்தான் அதனால் வகுப்பிற்குச் செல்ல முடியவில்லை.மற்ற நாட்களில் லீவு எடுத்தால் கூட மறு நாள் சென்றுச் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அன்று அவர்களுடைய முக்கால் வருடப் பரீட்சை ஆதலால் அன்றே வீட்டினர் யாராவது போய் அவன் வராததற்கான காரணம் சொல்ல வேண்டும். எனவே அம்மா சொன்னதற்கு இணங்க ரூபன் அவனுடைய கல்லூரிச் சென்றான். ஏற்கெனவே ஒவ்வொருவராக பரீட்சை எழுதி வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.
தகவல் சொல்லி வெளியே வந்தவன் தன்னுடைய டூ வீலரை நோக்கிச் செல்லவும் , என்கிருந்தோ வந்து "அத்தான்" என்று அவன் வலக் கையைப் பற்றிக் கொண்டாள் அனி. அந்தக் கையைப் பற்றுதல் அவள் பொதுவாக கிறிஸ்ஸிடமும், தீபனிடமும் செய்திருப்பதை அவன் கவனித்து இருக்கிறான். அதோடு நிற்க மாட்டாள் அவள் ரெண்டு கால்களும் நர்த்தனமாடும், வாய் ஓயாது பேசும், கூடவே கண்களும் அபிநயம் பாடும், சிரிப்பு மாறி மாறி அவள் கண்களிலும் , கன்னங்களிலும் தெறித்துச் சிதறும். தூர இருந்து பல முறை ரசித்த நிகழ்வுகளெல்லாம் ஞாபகத்தில் வந்து இடறின.
"என்ன அனி?"
"நான் உங்களோடயே வீட்டுக்கு வரேனே"
"சரி வா, அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்"
"இல்ல அத்தான், பின்னால ஒரு குரங்கு நிக்கிது"
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
"என்னக் குரங்கா?" சட்டென்று திரும்ப எண்ணியவனை மறுபடி கைகளைப் பிடித்துக் கட்டுப் படுத்தினாள்.
"குரங்குனா, குரங்கு இல்ல அத்தான், அவன் செய்யிற வேலையெல்லாம் குரங்கு மாதிரி, ரொம்ப நாளா தொல்லைப் பண்ணிட்டு இருக்கிறான். நான் எவ்வளவோ திட்டிப் பார்த்திட்டேன் கேட்க மாட்டேங்கிறான். லவ்வாம் வவ்வு ஸ்டுப்பிட்."
கட்டுப் படுத்தவே இயலாமல் இயல்பாக திரும்பிப் பார்ப்பது போல் பார்த்தான் அவன், சற்றுத் தூரத்தில் அவளை விட ஒன்றிரண்டு வயது கூட இருக்கும். பார்க்க படு ஸ்மார்ட்டாக ஒரு பையன் தன் ஷர்ட்டை சரிப் பண்ணிக் கொண்டு இங்கேயே பார்ப்பது புரிந்தது,
"யாரு அந்த ப்ளூ ஷர்டா?"
"ஆமா அத்தான். ப்ளீஸ் அத்தான் யார்கிட்டயும் இந்த குரங்கைப் பத்திச் சொல்லிடாதீங்க, விஷயம் தெரிஞ்சதுனா . அண்ணா உடனே நீ இனிமே வெளியிலயே போக வேணாம். வீட்டுல இருந்து படின்னு சொல்லிடுவான். .........இன்னிக்கு ஜீவன் வரலையில்லை........ அதான் கிட்ட கிட்ட வந்து வந்து பேசறான். இல்லன்னா கொஞ்சம் பயந்து இருப்பான்" என்று அவள் புலம்பல் தொடர்ந்தது.
"நான் யார்கிட்டயும் எதையும் சொல்லல சரியா? நீ கொஞ்சம் புலம்பாம வா"
அதன் பின்னர் ........................................
அவளை வீட்டில் போய் விட்டு விட்டு திரும்பவும் அவளை பிக் செய்த இடத்திற்கே ஏன் வந்தான்?
தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த அந்த ப்ளூ ஷர்டை தேடிப் பிடித்து ஏன் மிரட்டினான்?
வேலைக்குச் சென்றும் ஏன் அவனால் எங்கும் கவனம் செலுத்த முடியவில்லை?
மதியமும் இரவும் ஏன் பசிக்கவில்லை?
இதோ இரவாகிவிட்டது ஏன் அவனால் தூங்கமுடியவில்லை?
பல்வேறு ஏன்களுக்கு அவனிடம் பதிலில்லை.ஒன்று மட்டும் புரிந்தது அவளை வேறு யாரும் உரிமையோடு பார்ப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை , உடலெல்லாம் மனதெல்லாம் மிளகாய் அரைத்துப் பூசி விட்டது போல ஒரு காந்தல் இம்சித்தது. ஜீவன் மீது எழும் சின்னஞ்ச் சிறு பொறாமைகளுக்கெல்லாம் உண்மையான காரணம் என்னவென்று அவனுக்கு இன்று உணர்த்தியது.
ஒரு பொழுது என்னால் அவளை வேறு யாரோடும் சேர்த்து யோசிக்க முடியவில்லை, வாழ் நாள் முழுவதும் எப்படி? சிந்தனைகள் பலவாறாகத் தோன்ற நான் அவளைக் காதலிக்கிறேன், அவளை என்னால் யாருக்கும் விட்டுக் கொடுக்கவே முடியாது? என்ற தீவிர எண்ணம் மனம் முழுக்க வியாபித்து நின்றது. அதற்கடுத்த இரண்டு மாதங்களும் மனதிற்குள் காதலைச் சுமந்துக் கொண்டு அலைவது எவ்வளவு சிரமமான காரியம் என்று அவனுக்கு புரிய வைத்தன,
அவனது பயணத்தின் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக தீபனின் திருமணமும் இருக்க வீடே பல்வேறு தயாரிப்புக்களில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அனியின் விளையாட்டும், ஜீவனுடனான அவளின் சண்டைகளும் அவனுக்கு இப்போது வெகுவாக எரிச்சல் மூட்டின.
நான் உன்னை விட்டு தொலைவு போகிறேனே உனக்கு கவலையில்லையா? என அவளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தது அவன் மனது. உனக்கு எல்லோரும் முக்கியம் நான் முக்கியம் இல்லை அப்படித்தானே? என பலவாறாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தது அது. வீட்டிற்கு அவள் வரும் பொழுதுகளெல்லாம் அவளின் கர்ச்சீப், ஹைர் பின், கழற்றி வைத்துப் பின் தேடிய மேட்சிங்க் கம்மல், கண்ணாடி வளையல் என்று ஒவ்வொன்றாக அவள் கண்ணிலிருந்து காணாமல் போய் அவன் பையில் தஞ்சம் புக ஆரம்பித்திருந்தன.
மற்ற எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு இருந்த அவனால் தீபனின் நிச்சயதார்த்தம் அன்றிலிருந்து இவனைப் பார்க்கும் போதெல்லாம் அந்த ஷைனியின் பெயரை அவனோடு இணைத்துச் சொல்லி அவள் கிண்டல் செய்வதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தொடரும்
{kunena_discuss:970}