வேகமாக அங்கிருந்து நகரப்போனவளின் முன் வந்து நின்றவள்,
“எனக்கு பதிலை சொல்லிட்டு போங்க ஆஃபீசர் சார்…” என இருகைகட்டி நிற்க, அவன் அவளைத்தாண்டி போக முயற்சி செய்ய, அவள் அங்கேயும் முன்னே வந்து வழிமறித்தாள்…
“வழியை விட்டு விலகி நில்லு…” என்ற அவனது குரலில் அப்பட்டமான கோபம் தெரிய,
அதை எதையும் கண்டுகொள்ளாது, மனதினுள் ஏற்றாது, “பதிலை சொல்லுங்க அப்புறம் வழியை விடுறேன்….” என அவளும் பிடிவாதமாய் அவனையே பார்த்தவண்ணம் நின்றாள்…
“பதில் சொல்லுறதுக்கு எதுவுமில்லை…” என அவனும் சொல்லிவிட,
ஒருகணம் அப்படியே அசையாமல் இருந்தவள், “உனக்கும் எனக்கும் ஒன்னுமே இல்லை… இந்த நெஞ்சுக்குள்ள நீயும் இல்லன்னு சொல்லி என்னை விலக்கி வைக்குறேன் பேர்வழின்னு நீங்க சத்தியமே செஞ்சாலும் அதை நான் நம்ப மாட்டேன்…” என அவன் விழிகளைப் பார்த்தவண்ணம் அவள் சொல்ல, அவனும் அவள் விழிகளைப் பார்த்தான்…
“இத்தனை நாள் என் மனசில இருக்குறதை உங்களுக்கு தெரியப்படுத்தினா போதும்னு தான் நினைச்சிட்டிருந்தேன்… நேத்து கூட அந்த முடிவுல தான் இருந்தேன்… ஆனா என் கழுத்துல கத்தி வச்சதும் உங்களோட அந்த கோபம், நான் கீழே விழுந்ததும் எனக்காக நீங்க தவிச்ச தவிப்பு, துடிப்பு, எல்லாமே உங்க காதலை சொல்லிடுச்சு…”
“முட்டாள் தனமா பேசாத… நான் ஒரு போலீஸ் ஆஃபீசர்… தப்பை பார்த்தா கோபம் வர்றதும், அடிபட்டிருக்குறவங்களை பத்திரமா காப்பாத்துறதும் என் கடமை… அதுக்கு நீயா கண்ணு காது மூக்கு எல்லாம் வச்சு உருவம் கொடுத்தா அது உன்னோட முட்டாள் தனம் மட்டும் தான்……”
“சரி உங்க பாயிண்ட் ஆஃப் வியூக்கே வரேன்… அடிப்பட்டவங்களை காப்பாத்துறது உங்க டியூட்டி ரைட்… ஒகே… பட் எதுக்காக வார்த்தையே வராம என் பேரை சொல்ல தவிச்சீங்க?... அதும் சாதாரண ஒரு காயத்துக்கு அவ்வளவு பதட்டப்படுவாங்களா என்ன, உங்களை மாதிரி ஒரு தைரியமான போலீஸ் ஆஃபீசர்?....”
“……………”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“எப்போ அப்படியே உடைஞ்சு போய் என் பேரை சொன்னீங்களோ அந்த நொடியே புரிஞ்சிகிட்டேன்… உங்க மனசுல நான் ஆழமா பதிஞ்சிருக்கேன்னு…” என்றதும், அவன் சிலையென்ற நின்றான் சில வினாடிகள்…
அவனின் மௌனத்தைக் கண்டவள்,
“இஷான் சொல்லியிருக்குறான்… உங்களோட எதிரியாவே இருந்தாலும் உங்க மேல இதுவரைக்கும் ஒருத்தன் கூட கை வச்சது இல்ல… வைக்கவும் நீங்க விட்டதில்லன்னு… அந்த அளவு பலமான, தைரியமான ஐபிஎஸ் ஆஃபீசர், நான் சட்டையைப் பிடிச்சப்போ மட்டும் ஏன் என்னை தாக்க முயற்சி பண்ணலை… நான் பொண்ணா இருக்குற காரணமா?...” என கேட்க, கோபத்தை வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்டவன்,
“ஆமா…” என்றான் அதே தொனியில் சற்றும் கோபம் குறையாமல்…
“ஓ… அப்படி பார்த்தா உங்க கூட படிச்ச ஒருத்தி உங்களுக்கு ப்ரோபோஸ் பண்ணினப்ப கூட, பத்தடி தள்ளி நின்னு பதில் சொன்னீங்களாமே அவ நிழல் கூட மேல பட்டுடக்கூடாதுன்னு… அதுக்கு என்ன அர்த்தம்?... அவகிட்ட அப்படி ஒதுங்கி போய் நின்னு பேசின ஆள், நான் சட்டையை பிடிச்சப்ப மட்டும் எதுவும் சொல்லலையே… என் பிடியிலிருந்து திமிறி விலக பார்த்தீங்க தான்… அதை நான் இல்லன்னு சொல்லலை… ஆனா அது நீங்க சுதாரிச்ச பிறகுதான்… அதை உங்களால இல்லன்னு மறுக்க முடியுமா?... சொல்லுங்க?...”
“………………”
“நீங்க பதில் சொல்லமாட்டீங்க எனக்கு தெரியும்… பரவாயில்லை… ஆனா எனக்கு தெரிய வேண்டிய விஷயம் தெரிஞ்சிட்டு அது போதும்…” என்றவள் அவன் லேசாக புருவம் உயர்த்த,
“நீங்க பார்க் வர்றதே என்னைப் பார்க்கத்தான்னு இத்தனை நாள் எனக்கு புரியலை…. ஆனா நேத்து ராத்திரியில இருந்து புரிய ஆரம்பிச்சிட்டு… இன்னைக்கு என்னைப் பார்த்துட்டு நான் பார்க்குறதுக்குள்ள ஓடி ஒளிஞ்சு இதோ இங்க வந்து எதையோ தொலைச்சது போல இருந்தீங்களே… அது ஒன்னு போதாதா உங்க காதலை எனக்கு சொல்ல?...” என்றதும் பட்டென அவன் திரும்பிக்கொள்ள,
“மனசுக்குள்ள இருக்குற காதலை வாய்விட்டு நீங்களா சொல்லுற வரைக்கும் நான் காத்துட்டிருப்பேன்… ஆனா அதுக்காக உங்களை தொந்தரவு செய்யாம எல்லாம் இருக்கமாட்டேன்… வழக்கம் போல உங்களைப் பார்க்க வருவேன் பார்க், உங்க ஆஃபீஸ்ன்னு எல்லா இடமும்… நீங்களும் பார்க் வராம இருக்கமாட்டீங்க… எனக்கு தெரியும்…” என்றவளிடம்,
“வரமாட்டேன்….” என்றான் அவன் வேகமாக…
“ஓ… அப்படீங்களா சார்?... அதையும் பார்ப்போம்… என்னை கொல்லப்போறேன்னு மிரட்டின அந்த கொலைகாரன்கிட்ட இருந்து காப்பாத்த கூட வரமாட்டீங்களா?... சதி உன் விதி அவ்வளவு தானா?... அல்பாயிசில போக போறீயா?... எந்த நெருப்புல தூக்கி போடப்போறானோ தெரியலையே…” என அவனிடம் கேள்வி கேட்பது போல் ஆரம்பித்து தன்னிடமே சொல்லிமுடித்த போது,
“ஸ்டாப் இட்……” என அந்த இடமே அதிரும்படி கத்தியவன், தனது செல்போனை தூக்கி போட்டு உடைக்க,
சிதறிய துண்டில் ஒன்று அவள் நெற்றியில் பட போக, சட்டென்று அது அவள் மீது படாமல் அவன் தன் கரத்தினை நீட்டி தடுக்க, அது அவனது கரத்தினில் தன் பணியை இனிதே செய்துவிட்டு கீழே விழுந்தது மீண்டும்…
ரத்தம் லேசாக சொட்டு சொட்டாய் வழிய, அவள் பதறிப்போய் அவனது கையை பிடிக்க போக, அவன் தடுத்தான்…
ஏதோ சொல்வதற்கு வாயெடுத்தவள், அவனின் விழிகள் ரத்த சிவப்பினை பிரதிபலிப்பதை உணர்ந்து, அப்படியே உறைந்து போனாள் அவள்…
“கிளம்பு…” என அவன் உறும, அவள் மறுத்தாள் மாட்டேன் என…
“சொல்லுறது காதுல கேட்கலை உனக்கு?...” என அவன் மீண்டும் ரௌத்திரமாக கத்த, அவனது கோபத்தை பார்த்து மிரண்டு போனாள் அவள்…
தொடரும்
{kunena_discuss:1001}