சம்மந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த முறை வரதன் தோற்காமல், வெற்றி பெற்று அனைவருக்கும் பத்து வருட கடுங்காவல் தண்டனை வாங்கிக் கொடுத்தார். இதில் விமலா மற்றும் அவளின் அப்பாவும் அடக்கம்.
நல்லதம்பியின் மச்சான் போதை மருந்து கடத்தல் தவிர, பெண்களை நிர்வாண புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பதிலும் விமலாவுடன் சேர்ந்து ஈடுபட்டதால் அவனுக்கு இருவது வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவன் இருக்கும் கட்சி தற்பொழுது ஆட்சியில் இல்லாததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்படியும் ஐந்து வருடத்தில் ஆட்சி மாறும், அப்பொழுது அப்பீல் செய்து வெளியில் வந்துவிடலாம் என்ற மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான்.
வழக்கின் வெற்றியைக் கொண்டாட வரதன் குடும்பம், மதியின் குடும்பம், ஸ்ரீதரின் குடும்பம் இவர்களுடன் அகில் அனைவரும் ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்கு சென்றார்கள். முதலில் வர மறுத்த சாவித்ரியையும், ரூபாவையும் தேவியும், மதியுமாக சேர்ந்து கட்டாயப் படுத்தி அழைத்து வந்திருந்தார்கள்.
“அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு. இந்தப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து ஒரு வழியா எங்களால நிம்மதியா வெளிய வர முடிஞ்சுது”
“ஹ்ம்ம் சரிதான். அப்படியே அந்த டிவிலயும் அவங்க ப்ரோக்ராம்ல சொன்னது தப்பு, எங்க மேல தப்பு இல்லைன்னு சொல்லி இருந்தாங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்”
“அவங்க அப்படி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்கம்மா. அப்படி பண்ணினா அந்த ப்ரோக்ராம் மேல இருக்கற நம்பகத் தன்மை போய்டும். அதனால மக்கள் பார்க்குறது குறைஞ்சு போய்டும்ன்னு சொல்லிட்டாங்க”, தேவி சொல்ல ஸ்ரீதர் அதை ஆமோதித்தான்.
“நாம அவங்களை ரொம்ப ப்ரெஷர் பண்ண முடியாது. அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போதே, அவங்களுக்கும் அதுல வர்ற சம்பவத்துக்கும் சம்மந்தம் இல்லை, முழுக்க முழுக்க சம்மந்தப்பட்டவங்க கொடுத்த தகவல் பேர்லதான் நடத்தறோம். அவங்க புகாரையும் அப்படியே ஏத்துக்காம, நாங்களும் அக்கம் பக்கம் விசாரிச்சுட்டுதான் போட்டோம். இதுல தப்பு வருதுன்னா, அதுக்கு நாங்க பொறுப்பு இல்லைன்னு, ரொம்ப ஈஸியா தப்பிச்சுட்டாங்க. இப்போ வர்ற பாதிப் ப்ரோக்ராமால குடும்பத்துக்குள்ள சண்டைதான் வருது”, கமல் சொல்ல அனைவரும் அதை ஒத்துக் கொண்டார்கள்.
“நாங்களும் அவங்களை மறுப்பு சொல்ல சொல்லி ரொம்ப கேக்கலை. அடுத்து விமலா எங்க... அவங்க அப்பா எங்கன்னு ஆரம்பிப்பாங்க. அவங்க கைதானதெல்லாம் வெளிய வரும். இப்போதைக்கு உங்களுக்கும் அவங்களுக்கும் தகராறு. அதனால விமலா பெங்களூர்ல வேலைத் தேடிட்டு போய்ட்டா, உங்க கணவரும் அவக்கூட இருக்காருன்னு சொல்லி வச்சது அப்படியே தொரட்டும்ன்னு விட்டுட்டோம்”
“நீங்க பண்ணின, பண்ணிட்டு இருக்கற எல்லா உதவிக்கும் ரொம்ப நன்றி அண்ணா. உங்க எல்லார் மனவேதனைக்கும் எங்க குடும்பம்தான் காரணம். அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்”
“என்ன தங்கச்சி இது. பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு, பழைய கசப்பான சம்பவங்கள் எல்லாத்தையும் மறந்துட்டு நீயும், ரூபாவும் புது வாழ்க்கையை ஆரம்பிங்க. உனக்குத் துணையா இத்தனை பேர் இருக்கோம்”
“நீங்க சொல்றா மாதிரி அது அத்தனை சுலபம் இல்லை அண்ணா. இதோ இன்னும் ரெண்டு வருஷத்துல இவளுக்கு கல்யாணம் பண்ணனும். அந்த சமயத்துல அப்பா எங்க அப்படிங்கற கேள்வி வருமே. அதுக்கு என்ன பதில் சொல்றது. ரூபாக்கும் இப்போ நடந்த எந்த விஷயத்துக்கும் துளிக் கூட சம்மந்தம் இல்லை. ஆனா இதை எத்தனை பேர் நம்புவாங்க”, சாவித்ரி கண்ணீருடன் பேச, ரூபா தாயை ஆறுதல் படுத்தினாள்.
ஸ்ரீதரின் தாய் மதி, சாவித்ரியைப் பார்த்து, “இங்க பாருங்க சாவித்ரிம்மா நாம ரெண்டு குடும்பமும் சம்மந்தம் பண்ணினது எதுக்கு நிக்கணும். ரூபா, படிப்பை முடிச்ச உடனே ஸ்ரீதருக்கும், ரூபாக்கும் கல்யாணத்தை முடிச்சுடலாம். ரெண்டு பக்கத்துலயும் நெருங்கின உறவுகளை மட்டும் கூப்பிட்டுக்கலாம். என்ன சொல்றீங்க”
“அண்ணி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. எங்க குடும்பத்துக்கு நல்லது மேல நல்லது பண்ணி, நன்றிக் கடனை ஏத்திவிடறீங்க”
“இது சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் அழறத மொதல்ல நிறுத்து தங்கச்சி. ஸ்ரீதர் இந்தக் கல்யாணம் நிச்சயம் ஆனதுக்கு இப்போ நமக்கெல்லாம் ஸ்வீட் சொல்லுடா”, என்று சந்தோஷமாக கூற.
“என்னோட மாமாக்கு கேசரி பிடிக்கும், அதையே சொல்லுங்க. அப்பாக்கும், அண்ணாக்கும் பாசந்தி”, என்று தேவி சொல்ல, ரவி “ஹே.... சூப்பர்” என்று கத்த, வரதன் ஆனந்தத்தில் பேச்சு வராமல் தவிக்க, மதி அத்தனை பேர் சுற்றி இருக்கிறார்கள் என்பதையும் மறந்து தேவியை தூக்கி சுற்றினான். இதே போல் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்க நாமும் வாழ்த்துவோம்.
முற்றும்!
{kunena_discuss:857}