நண்பர்களுடன் பேசிக்கொண்டுச் செல்லும் அவள் தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரைப் பார்ப்பான். மதியம் தன் அண்ணன் மகள் ஹனியை கூப்பிட்டுக் கொண்டு தன் இல்லம் வருபவள் , சில மாதங்களேயான தீபனின் மகன் "ராபினுடன்" விளையாடுவாள். அவள் தற்போது இளனிலை படித்து விட்டு மேலாண்மைப் படிப்பை ஆரம்பித்து இருந்தாள். அவளுக்கும் படிப்பு தவிர நேரம் எடுப்பதே மிகவும் சிரமமாக இருந்தது.சற்று நேரம் குழந்தைகளோடு விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்தமானது.
குட்டி ராபினை அவள் வீட்டிற்கு கொண்டுச் செல்லும் வாரங்களைத் தவிர மற்ற வாரங்களில் இங்கே தான் அவள் விளையாட்டு இருக்கும்.அவள் ரூபனுடன் வீட்டில் உள்ள மற்றவர்களிடம் பேசுவதைப் போலவே சாதாரணமாகப் பேசுவாள் தான், ஆனால் அவர்களுக்கிடையே பொதுவாக பேசக் கூடிய விஷயங்கள் மிகக் குறைவு. அதனால் அவர்கள் உரையாடல்கள் மிகச் சுருக்கமாக நின்று விடும்.
அதை நிவர்த்திச் செய்வதற்காகவே அவள் வரும் போதெல்லாம் தன்னுடைய அறையிலிருந்த வண்ணம் அவளுடைய பேச்சை, விளையாட்டை, சிரிப்பை ரசிப்பான்.அவன் உள்ளே இருந்துப் பார்ப்பது தெரியாத வண்ணம் அவனுடைய அறை அமைந்து இருந்தது அவனுக்கு மிகவும் சாதகமாகிப் போயிற்று.
அனிக்காவின் செயல்களைக் கவனிக்கும் ரூபனுக்கு அவள் இன்னும் குழந்தைப் போலவே இருக்கிறாளே என்று தோன்றினாலும், அவள் மாறி இருந்தாள் தான். வயதுக்கு ஏற்ப வனப்பு கூடியிருந்த தன் அழகில், தன்னுடைய சட்டு சட்டென்று மாறுகின்ற கோபத்தைக் கட்டுப் படுத்தி இருக்கும் தெளிவில், வாய்க்கு வந்தபடி பேசாமல் யோசித்துப் பேசும் நிதானத்தில், ஜீவனுடன் அடி தடியென்று இறங்குகின்ற அடாவடித் தனத்தினின்று அவனைச் சீண்டி வம்பிழுக்கும் குறும்பில் என மாறித்தான் போயிருந்தாள் அவள்.
நீ எப்படி இருந்தாலும் என்னவளே
தலைமுடிக் கூடப் படியாமல்,
ஏனோ தானோவென்றே இருந்தாலும்
கண்ணைக் கவரும்
ஆடை அணிகள் அணிந்தாலும்,
கோபத்தில் என்னைத்
திட்டித் தீர்த்தாலும்
நிதானத்தில் என்னுடன்
பண்பாய் பேசினாலும்
சண்டையிடும்
கோழியாய் சிலிர்த்தாலும்
சமாதானப் புறாவாய்
பேசிச் சிரித்தாலும்
நியாயமின்றி
என்னை வதைத்தாலும்,
குறும்பில் குளித்தவளாய்
சின்னஞ் சிறாருடன்
வெட்டி நியாயம் பேசினாலும்
நீ எப்படி இருந்தாலும் என்னவளே
என்றும் என்னவளே.....
தொடரும்
{kunena_discuss:970}