வனவாசம் செல்லும் காட்சிகளிலும் இராவணன் அபகரித்து சென்று அசோக வனத்தில் சிறை இருந்த காட்சிகளிலும் சீதையாக மிகவும் உருக்கமாக நடித்து அபூர்வா அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டாள்.
“விஜயகுமார் என்னாச்சு” கிருஷ்ணமூர்த்தி கேட்கவும் தான் விஜயகுமார் தன் கண்கள் கலங்கி இருந்ததையே உணர்ந்தார்.
அசோக வனத்தில் சீதை துன்பத்துக்கு உள்ளாகும் காட்சியை மகள் தத்ரூபமாக நடிக்க தந்தையோ நாடகம் என்பதை மறந்து கலங்கிப் போனார்.
இராவணன் வதம் முடிந்து சீதையின் அக்னி பிரவேச காட்சி.
லக்ஷ்மணனை அக்னி வளர்க்க சொல்லி ஆணை இடுகிறாள் சீதை. விறகு கட்டைகளை லக்ஷ்மணனாக நடிக்கும் சந்தோஷ் வட்டமாக அடுக்க அதன் நடுவில் சென்று நின்று கொண்டாள் சீதையான அபூர்வா.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
பிறகு அவள் அக்னி தேவனை அழைக்குமாறு வசனம். முகேஷ் அக்னி தேவனாக அங்கே தோன்றி சீதை பரிசுத்தமானவள் என்று சொல்வதாக காட்சி. இப்படி தான் பயிற்சி எடுத்திருந்தனர்.
ஆனால் இறுதி நாடகத்தின் போது அபூர்வா விறகுகளின் நடுவில் நின்றதும் ப்ரொஜெக்டர் மூலம் நெருப்பு அந்த விறகு கட்டைகளில் கொழுந்து விட்டு எரிவதை போல ஸ்க்ரீனில் தெரிய அந்த அக்னி உண்மை போன்றே தோற்றமளித்தது.
அடுத்த நிமிடம் அரங்கம் முழுவதுமே சலசலப்பு...
காரணம் சித்தார்த் அபூர்வாவை நோக்கி ஓடி வந்து அவளை அந்த விறகுகளில் இருந்து ஒரே பிடியாக வெளியில் இழுத்து விட்டிருந்தான்.
விறகுகளை அடுக்கிய சந்தோஷ் அதை அந்த திரையின் அருகில் அடுக்கியிருந்தான். அக்னி தேவன் சூழ்வதாய் காட்சி ஆகையால் மற்ற கதாபாத்திரங்கள் சற்று தள்ளியே நிற்கும் படி தான் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது சீதை அக்னியை அழைத்ததும் முகேஷ் அங்கு சென்று காட்சி அளிப்பதற்குள் ப்ரொஜெக்டரில் அக்னி திரையில் தோன்றி விட்டிருந்தது.
உண்மையில் தீ பற்றி விட்டதென நினைத்த சித்தார்த் ஓடிச் சென்று அபூர்வாவை அவ்விடம் இருந்து இழுத்து விட்டிருந்தான்.
சூழ்நிலையை சட்டென்று உணர்ந்து கொண்ட அபூர்வா சித்தார்த் காதில் “ சித்து அது நிஜமா நெருப்பு இல்ல” என்று சொல்லவும் சித்தார்த் ஒரு கணம் திகைத்து செய்வதறியாது நின்றான்.
அபூர்வா அவனிடம் இருந்து விலகி அந்த விறகுகள் நடுவில் சென்று நின்று வசனத்தை நிறுத்திய இடத்தில் இருந்து தொடர நாடகமும் சிறப்பாக நிறைவு பெற்றது.
ஷோபா தேசாய் மாணவர்கள் அனைவரையும் அழைத்து பாராட்டினார். அனைவரும் சென்ற பின் அபூர்வா சித்தார்த் சந்தோஷ் மட்டும் நின்று கொண்டிருந்தனர்.
அதே நேரம் மூவரின் பெற்றோரும் அங்கே வந்து சேர்ந்தனர். நுண்கலை ஆசிரியர் உட்பட இன்னும் சில ஆசிரியர்களும் அங்கிருந்தனர்.
அப்போது சித்தார்த் ஆசிரியை முன் வந்து தயங்கியபடியே நின்றான்.
“நிஜமா நெருப்புன்னு பயந்து அப்படி செய்துட்டேன். சாரி மிஸ்” மிக வருத்ததுடன் சொல்லவும் ஆசிரியர் அவனை அணைத்து கொண்டார்.
“ராமாயணம் ஒரு அற்புத காவியம். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று ராமன் வாழ்ந்து காட்டியிருந்தார். ஆனால் சீதையின் அக்னி பிரவேசம் மட்டும் எனக்கு ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று. ராமன் ஏன் சீதையை தடுக்கவில்லை என்று ஆதங்கம் எப்போதும் உண்டு. இன்று சித்தார்த் அந்த ராமாக சீதை வேடத்தில் இருந்த அவன் தோழி அபூர்வாவை அக்னியில் இருந்து வெளியே அன்னிசையாக இழுத்து விட்டது கண்டு ஒரு முறை சிலிர்த்து போனேன். மற்றவருக்கு எப்படியோ எனக்கு சித்தார்த்தின் செயல் பெண்மையை மதித்து போற்றுவதாக தோன்றியது”
ஷோபா மேம் உணர்ச்சி வசப்பட்டு மனம் நிறைந்து பாராட்ட மற்ற ஆசிரியர்களும் ஆமோதித்தனர்.
“சித் இஸ் வெரி குட் பாய்”
“சோ ஸ்வீட்”
எல்லோரும் அவனை கொஞ்சவும் லேசாக வெட்கப்பட்டான்.
அந்த காட்சியின் போதும் சரி பின்னர் ஆசிரியை பாராட்டும் போதும் சரி அபூர்வா கையை இறுக்கமாக பிடித்திருந்த சித்தார்த்தை விட்டு பார்வை அகற்றாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் விஜயகுமார்.
“ஹஹஹா” அந்த நிகழ்ச்சியை நினைத்து அபூர்வாவும் சந்தோஷும் சிரித்துக் கொண்டிருந்த அதே நேரம் லோதி ரோட்டில் இருந்த அந்த வீட்டில் புதிர்களின் விடை தெரியாமல் குழப்பத்தில் இருந்தான் சித்தார்த்.